12/15/2010

ஆண்டாள்

வேதங்களைத் தமக்கே சொந்தம் என உரிமை கொண்டாடி, சாஸ்திரங்கள் என்ற போர்வையில் தங்கள் போக்கில் பலர் போகத் தலைப்பட்டிருந்தனர். சாதாரண மனிதருக்கு தாழ்ச்சி உண்டாகியிருந்தது. இந்த நேரத்தில்தான் வேதமதத்துக்கு ஏற்றம் பிறக்க ஆழ்வார்கள் அவதரித்தார்கள். வேத அர்த்தங்களைப் புரிந்துகொள்ள இயலாமல் இருந்தோருக்கும், வேதங்களைக் கற்க அனுமதிக்கப்படாத குலங்களில் பிறந்தோருக்கும், பெண்களுக்கும் எளியோருக்கும் வேத அர்த்தங்களை எளிமையாகப் புரிய வைக்க ஆழ்வார்களை இறைவனே தோன்றச் செய்தான் என்பர் பெரியோர். மயர்வற மதிநலம் அருளப்பெற்ற ஆழ்வார்களால் வேத விளக்கங்களாக நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம் என்ற இந்தப் பாசுரங்கள் வெளியிடப் பெற்றன.
ஆழ்வார்களின் பாசுரங்கள் வேதங்களை, உபநிஷதங்களை விளக்க வந்தவை என்பதைக் கண்டோம். அது எவ்வகையில் என்பதற்கு ஒரு எடுத்துக்காட்டு இது.
மஹாநாராயண உபநிஷத்தில் சொல்லப்படும் ஸ்லோகம் இது.
ததேவ அக்னிஸ் தத் வாயு: தத் ஸூர்யஸ்தது சந்த்ரமா: |
ததேவ சுக்ர மம்ருதம் தத்ப்ரஹ்ம ததாபஸ் ஸ ப்ரஜாபதி: || (1.2.2)
அதுவே அக்னி, அதுவே வாயு, அதுவே சூரியனும் சந்திரனும். அதுவே பிரகாசிக்கும் நட்சத்திரமும் அமிர்தமும். அது பிரம்மம், அது நீர், அதுவே ப்ரஜாபதி...
இப்படி உபநிஷத் சொல்லும் வாக்கியத்தை எல்லோரும் எளியவகையில் புரிந்துகொள்ளமுடியும் என்று சொல்வதற்கில்லை. எனவேதான் ஆழ்வார் எளிய தமிழில் இதே உபநிஷத் கருத்தை வெளிப்படுத்துகிறார் இப்படி... நாராயணனே எல்லாமும் என்பதை எடுத்துரைக்கும் அழகிய வெண்பா இது.

நீயே உலகெலாம் நின் அருளே நிற்பனவும்

நீயே தவத் தேவ தேவனும் நீயே

எரிசுடரும் மால்வரையும் எண்திசையும் அண்டத்து

இரு சுடரும் ஆய இவை

கிட்டத்தட்ட ஏழாம் நூற்றாண்டில் - எழுதப்பட்டது இந்த வெண்பா.
ஆழ்வார் எங்கும் நீக்கமற நிறைந்திருக்கும் அந்தக் கடவுளைப் பார்த்து,
நீயே எல்லா உலகமும்!
பூவுலகில் நிலைத்திருப்பவை எல்லாம் உன் அருளே!
தேவர்களுக்கெல்லாம் தேவனும் நீயே!
நீ நெருப்பு,
மலையும் நீயே!
எட்டுத் திசைகளும் நீயே!
சூரிய சந்திரராய் ஒளிர்வதும் நீயே!
- என்றவாறு இந்தக் கருத்தை விவரித்துப் போகலாம். இப்படி நாலாயிர திவ்வியப் பிரபந்தப் பாசுரங்கள் எல்லாமே வேதக் கருத்துகளை விளக்க வந்தவையே. அவ்வகையில் ஆழ்வார்கள் வேதம் தமிழ் செய்தவர்கள் என்று சொல்லத் தடையில்லையே!
ஆழ்வார்களின் திருநாமங்களையும் அவர்களின் அவதார தினங்களையும் வைணவ ஆசார்யரான சுவாமி மணவாளமாமுனிகள் தம்முடைய உபதேச ரத்னமாலையில் அழகு வெண்பாவில் அமைத்துத் தந்திருக்கிறார்.

பொய்கையார் பூதத்தார் பேயார் புகழ்மழிசை

ஐயனருள்மாறன் சேரலர்கோன் - துய்யபட்ட

நாதன் அன்பர்தாள்தூளி நற்பாணன் நற்கலியன்

ஈதிவர் தோற்றத்தடைவா மிங்கு.

- என்ற உபதேசரத்னமாலை வெண்பா மூலம் ஆழ்வார்களின் வரிசையை நாம் அறிந்துகொள்ளலாம்.
1. பொய்கையாழ்வார்
2. பூதத்தாழ்வார்
3. பேயாழ்வார்
4. திருமழிசையாழ்வார்
5. நம்மாழ்வார்
6. குலசேகராழ்வார்
7. பெரியாழ்வார்
8. தொண்டரப்பொடியாழ்வார்
9. திருப்பாணாழ்வார்
10. திருமங்கையாழ்வார்
11. ஆண்டாள்
12. மதுரகவியாழ்வார்
என்று இந்த வெண்பாவின் மூலம் ஆழ்வார்களை வரிசைப்படுத்தலாம். ஆழ்வார்களின் கால நிலைப்படியும்  வரிசைப்படுத்தலாம்.

ஆழ்வார்கள் என்ற பெயர் ஏன் ஏற்பட்டது?

இந்தப் பன்னிரண்டு பேருக்கும் ஆழ்வார்கள் என்று ஏன் பெயர் ஏற்பட்டது என்றால், இவர்கள் பகவானிடத்தில் ஆழ்ந்த பக்தியைக் கொண்டிருந்தவர்கள் என்பதால்தான். இலக்கணப்படி இது வினையால் அணையும் பெயர். இறைவனிடத்தில் ஆழ்ந்த மனம் கொண்டிருந்த காரணத்தால் ஆழ்வார்கள் என்ற பெயர் ஏற்பட்டது. அவர்களுடைய மனம் எதிலெல்லாம் ஆழ்ந்திருந்தது...? ஆதிப்பரம்பொருளான பகவான் நாராயணனிடத்தில் ஆழ்ந்திருந்தது. அவனுடைய திவ்யாத்ம ஸ்வரூபத்திலே, திவ்யமங்கள விக்ரஹ அழகிலே, அநந்த கல்யாண குணங்களிலே, திவ்ய அவதாரங்களிலே, அவன் எழுந்தருளியிருந்த திவ்ய தேசங்களெலேயெல்லாம் ஆழ்ந்த ஈடுபாடு கொண்டிருந்தார்கள். இந்த ஆழ்ந்த ஈடுபாட்டை ஆழ்வார்கள் அருளிச்செய்துள்ள பிரபந்தப் பாசுரங்களில் இருந்தே நாம் தெரிந்துகொள்ளலாம்.

ஆழ்வார்களின் காலம்

நாலாயிர திவ்வியப் பிரபந்தத்தை இயற்றிய இந்த ஆழ்வார்கள் எல்லோரும் ஒரே காலத்தைச் சேர்ந்தவர்கள் அல்லர். சங்க காலத்துக்குப் பிற்பட்டவர்கள்.
பூதத்தாழ்வார் பாடலில் மாமல்லை என்கிற துறைமுகத்தைப் பற்றிய குறிப்பு உள்ளது. பல்லவ மன்னனான மகேந்திரனின் மகன் முதலாம் நரசிம்மவர்மன் காலத்தில் ஏற்பட்டது மாமல்லை என்று வரலாற்று ஆசிரியர்கள் குறித்துள்ளார்கள்.
இதைக் கருத்தில் கொண்டு பார்த்தால், முதலாழ்வார்கள் காலம் கடைச் சங்க காலமான 575--600 என்று கொள்கிறார்கள். முதலாழ்வார்களின் காலத்தைக் கொண்டு கணக்கிட்டால், கிட்டத்தட்ட ஏழாம், எட்டாம் நூற்றாண்டுகளில் வாழ்ந்தவர்கள் இவர்கள் என்று சொல்லலாம்.
ஆழ்வார்கள் வாழ்ந்த காலத்தைப் பற்றி பல ஆராய்ச்சிகள் உள்ளன. டாக்டர் மு.ராகவையங்கார் எழுதிய ஆழ்வார்கள் கால நிலை என்ற நூல் பல தகவல்களைத் தருகிறது. ஓரளவு வரலாற்றுக் கால அளவோடு இயைந்து போவதால், இதை முன்மாதிரியாகக் கொள்ளலாம். அவருடைய கருத்துகள் அத்தனையுடனும் இயைந்து போக முடியாவிட்டாலும், அவர் மேற்கொண்ட ஆராய்ச்சி முறை விஞ்ஞானபூர்வமானதாக பலரும் ஏற்கிறார்கள்.
அதேநேரம், வைணவ சம்பிரதாயப்படி ஒழுகும் நூல்களின் அடிப்படையில் பார்த்தால், ஆழ்வார்களின் காலம் பற்றிய கணக்கீடு, வரலாற்றுக் காலத்தோடு முரண்படுவதாகவே தோன்றும்.  வைணவ நூல்கள் அவ்வளவாகச் சரித்திர உண்மை பற்றிக் கவலைப்படுவதில்லை என்பதால், நாம் அவர்கள் வாழ்ந்த காலத்துக்கான ப்ரமாணமாக இவற்றை வைத்துக்கொள்ள இயலாவிட்டாலும், தத்துவத்துக்காகவும், பக்திக்காகவும் சம்பிரதாய நூல்களை ப்ரமாணமாக ஏற்கவேண்டும்.
இந்த அடிப்படையில், சுவாமி ராமானுஜர் காலத்தவரான கருடவாகன பண்டிதர் சமஸ்க்ருதத்தில் இயற்றிய திவ்ய சூரிசரிதத்திலும், மணிப்ரவாள நடையில் பின்பழகிய பெருமாள் ஜீயர் எழுதிய ஆறாயிரப்படி குருபரம்பரை நூலிலும், ஆழ்வார்கள் பிறந்த திருநட்சத்திரங்கள், அவர்களுடைய வாழ்வில் நடந்த சம்பவங்கள் போன்றவை விவரித்துச் சொல்லப்பட்டுள்ளன.
ஆழ்வார்களையும் அவர்களுடைய சிறப்புகளையும் உபதேசரத்னமாலையில் அழகுறத் தெரிவிக்கும் மணவாளமாமுனிகள், ஆழ்வார்களின் பாசுரங்களை உயர்வாக மதிக்கவேண்டுமேயல்லாது, தாழ்வாக நினைத்தல் தகாது என்கிறார்.

ஆழ்வார்கள் வாழி அருளிச் செயல்வாழி

தாழ்வாதுமில் குரவர் தாம் வாழி - ஏழ்பாரும்

உய்ய அவர்கள் உரைத்தவைகள்தாம் வாழி

செய்யமறை தன்னுடனே சேர்ந்து..

- என்று அவர்களுக்கான வாழ்த்துதலைச் சொல்கிறார். ஏழு உலகங்களும் உய்வடைவதற்காக அவர்கள் உரைத்த பிரபந்தங்கள் வாழவேண்டும்; வேதங்களோடு சேர்ந்து வாழவேண்டும் என்று வாழ்த்துகிறார்.
மேலும்,

தெருளுற்ற ஆழ்வார்கள் சீர்மை அறிவாரார்

அருளிச்செயலை அறிவாரார் - அருள்பெற்ற

நாதமுனி முதலான நம் தேசிகரையல்லால்

பேதை மனமே உண்டோ  பேசு.

ஆழ்வார்களையும் அருளிச்செயல்களையும்

தாழ்வா நினைப்பவர்கள்தாம் நரகில் - வீழ்வார்கள்

என்றுநினைத்து நெஞ்சே எப்பொழுதும் நீயவர்பால்

சென்றணுகக் கூசித் திரி.

என்று, ஆழ்வார்களின் அருளிச்செயல்களை தாழ்வாக நினைத்தால், அவர்களுக்கு நரகமே கிட்டும் என்பதை அறிந்து, அவர்களோடு சேர்வதற்கு நீ மனதால் அஞ்ச வேண்டும் என்கின்ற அறிவுரையையும் தருகிறார் ஸ்வாமி மணவாள மாமுனிகள்.
மற்ற மத ஆசார்யர்களைக் காட்டிலும் ஆழ்வார்களுக்கு ஒரு சிறப்பு உண்டு. ஒரு சமயத்தைப் பிடித்துக்கொண்டு அந்தக் கருத்திலேயே உழன்று வருகின்ற அவர்களிடையே மத விஷயத்தில் கருத்தொற்றுமை ஏற்படாமல் கருத்துவேற்றுமை ஏற்பட்டதுண்டு. ஆதிசங்கரர், பாஸ்கரர், ராமானுஜர் காலத்தில் யாதாவப்ரகாசர் முதலியவர்களுக்கிடையில் கருத்தொற்றுமை நிலவியதில்லை. மாறுபட்ட விளக்கங்களைக் கொடுத்துக்கொண்டிருந்தனர். ஆனால் வெவ்வேறு காலங்களில், வெவ்வேறு இடங்களில் அவதரித்த ஆழ்வார்களுக்குள்ளே ஒரே கருத்து விளைந்திருந்தது. அவர்கள் நாராயண பரத்வத்தை ஒரே குரலில் உரக்கச் சொன்னார்கள். ஒருவர் கருத்தை அறிந்து காலத்தால் பிற்பட்ட மற்றவர் பின்பற்றினார் என்பது அல்ல இதன் பொருள். உண்மைத் தத்துவமான ஒரே கருத்தினையே அவர்கள் இறைவன் மூலமாக உணர்ந்து, வெவ்வேறு காலங்களில் வெளிப்படுதினார்கள் என்பதே நாம் அறிய வேண்டியது. இதனாலேயும் இவர்களுடைய பிரபந்தப் பாசுரங்களை ப்ரமாணமாகக் கொள்ளலாம் என்பது பெரியோர் கருத்து.
இன்றைக்கு பரிகாரத்தின் பெயரால் பல்வேறு பூஜை மந்திரங்களும் உலாவரக் காண்கிறோம். லாபம் கருதி மந்திரங்களைச் சொல்லி வருவதையும் பார்க்கிறோம். ஆனால் ஆழ்வார்கள், இதுபோன்ற லாபக் கணக்கும், பலன்களும் கருதி, பாடல்களைப் புனைய வேண்டுமே என்கின்ற நிர்பந்தத்தால் பாடவில்லை. இயற்கையாகவே, பக்திப் பெருக்கெடுத்து, பகவானின் ஸ்வரூப ரூப குண விபூதிகளை அனுபவித்து அன்பு மேலீட்டால் தாமாகவே வந்த சொற்கள்தான் ஆழ்வார்களுடையது.

வேதமே ப்ரமாணம்

பிணங்கும் சமயங்கள் பலவும் இருக்கையில் தத்வ நிர்ணயம் செய்யும்போது, ப்ரமாணம் கொண்டே நிச்சயிக்கவேண்டும். ப்ரமாணம் மூன்று வகைப்படும். ப்ரத்யக்ஷம் - அதாவது நேரிலேயே காண்பது ; அனுமானம் - ஒன்றின் உண்மைத் தன்மையால் மற்றொன்றின் உண்மைத் தன்மையை அறிந்து கொள்வது ; சாஸ்த்ரம் - அதாவது, அறிந்தவர்கள் கொண்ட சாஸ்த்ரங்களைக் கொண்டு அறிந்துகொள்வது...
இப்படி மூன்று ப்ராமணங்கள் இருந்தாலும், சாஸ்த்ரப் ப்ராமணம் என்பது மிகவும் பிரசித்தி பெற்றது. பிரத்யக்ஷம் மற்றும் அனுமானங்களால் அறியமுடியாத புலன்களுக்கு அப்பாற்பட்ட விஷயங்களை சாஸ்திரம் கொண்டே அறியவேண்டும். அந்த சாஸ்திரங்களில் தலையாயது வேதம்.
வேதங்களைத் தொகுத்த மகாமுனியான வேதவியாச முனிவர், கங்கைக்கரையில் நின்று சத்தியம் செய்வதாக இந்த வாக்கைச் சொன்னார்... வேத சாஸ்த்ராத் பரம் நாஸ்தி, நதைவம் கேசவாத் பரம் - என்று வேதமாகிற சாஸ்திரத்தைக் காட்டிலும் உயர்ந்த ப்ரமாணமில்லை; கேசவனைக் காட்டிலும் மேலான தெய்வம் வேறில்லை என்று சொன்னார். எனவே வேத சாஸ்த்ரங்களைக் கொண்டே ப்ரமாணம் கண்டறிய வேண்டும்.
வேதங்களே ப்ரமாணமாகிறது என்றால், வேதங்களால் அறியப்படும் பரம்பொருள் நித்யன் - அதாவது என்றுமுள்ளவன்; பிறப்பு முதலிய தோஷங்களால் தீண்டப்படாதவன்...
அதுபோல் அவன் புகழ் பாடும் வேதங்களும் நித்யமானவை, ஒருவரால் செய்யப்படாதவை என்பதால் மனிதர்களால் இயற்றப்படும் நூல்களுக்கு உண்டான குற்றங்கள் வேதங்களுக்குக் கிடையாது.

ஆழ்வார்கள் பாசுரங்களே பிரமாணங்கள்

வேதங்களின் தொடர்ச்சியாக ஏற்பட்ட தத்துவங்களை உபதேசிக்கின்ற தத்துவ தர்சிகள் யார் என்று நிச்சயிக்க வேண்டும். வேத வியாசர், பராசர முனிவர்  முதலிய ரிஷிகளும் தத்வ தர்சிகள்தான். ஆழ்வார் ஆசார்யர்களும் தத்வ தர்சிகளே. இவர்களில் நமக்கு மிக நெருங்கியவர்கள் யார் என்பதைப் பார்க்க வேண்டும். ரிஷிகளும் ஆழ்வார்களும் தத்வதர்சிகள் ஆனாலும் இரு வகையினருக்கும் ஒரு சிறு வேறுபாடு உண்டு.
ரிஷிகள் தங்கள் சுய முயற்சியால் ஞானம் பெற கடுந்தவம் செய்து ஞானமடைந்தனர். கடுந்தவத்தின் பயனாக, தவத்தின் தன்மைக்கேற்ப அவர்களுடைய ஞானமும் அமைந்தது. கடுந்தவத்தின் பயனாக இறைவன் அளித்த ஞானத்தை வெளிப்படுத்தியவர்கள் இந்த ரிஷிகள்.
ஆனால் ஆழ்வார்களின் பங்கு வித்தியாசமானது. ஆழ்வார்களைக் குறிப்பிடும்போதே மயர்வற மதிநலம் அருளப்பெற்ற ஆழ்வார்கள் என்றே சொல்வார்கள். அயர்வரும் அமரர்கள் அதிபதியான பகவானின் பேரருளாலே இயற்கை ஞானம் அளிக்கப்பட்டு அவதரித்தவர்கள் ஆழ்வார்கள். பக்திரூபமான பரிபூர்ண ஞானம் அடையப்பெற்ற ஆழ்வார்களின் ஞான முத்துக்கள்தான் பிரபந்தப் பாசுரங்கள் என்பது பெரியோர் வாக்கு.
பகவத் ராமானுஜர், பிரம்மசூத்ரங்களுக்கு பாஷ்யம் எழுதும்போது, ஆழ்வார்களின் பிரபந்தப் பாசுரங்களின் விளக்கங்களைத் துணைகொண்டு உரை எழுதினார் என்பது வரலாறு. ஆகவே ஆழ்வார்களே நமக்கு வழிகாட்டிகள். அவர்களுடைய பாசுரங்களே நமக்கு ப்ரமாணங்களாகின்றன.
Thanks :- http://prabandham.com/
Partha.

12/06/2010

வெற்றிக்கு வழி

ஞானிகளின் பாதை


செய்யும் செயலில் கவனம்

ஒரு ஜென் மத குருவிடம் சீடன் ஒருவன் “தங்களுடைய கொள்கை என்ன என்று கேட்டார்?”. குருவின் பதில்… “பசி எடுத்ததால் சாப்பிடுவது, தூக்கம் வந்தால் தூங்குவது”. சீடர் மறுபடியும் இவ்வாறு கேட்டார். “பசித்தால் புசிப்பது, உறக்கம் வந்தால் உறங்குவது” இதைத்தான் எல்லோரும் செய்கிறார்களே என்றார். ஞானி சிரித்தார். மற்றவர்களுக்கும் எனக்கும் வேறுபாடு உள்ளது. நீங்கள் சாப்பிடும் போது உங்கள் மனம் சாப்பாட்டில் இருக்காது. அங்கும் இங்குமாக அலைபாயும். எதையோ நினைத்துக் கொண்டு, பேசிக் கொண்டு சாப்பிடுவீர்கள். நான் சாப்பிடும் போது சாப்பிட மட்டும் செய்கிறேன், வேறு எந்த சிந்தனையும் கிடையாது. நீங்கள் தூங்கும் போது உங்களது மனம் தூக்கத்தில் இல்லை, கவலையில், சிந்தனைகளில் மற்றும் குழப்பத்தில் அலைகிறீர்கள். ஆனால் தூக்கத்தின் போது நான் தூங்க மட்டுமே செய்கிறேன். “செய்வதைச் சரியாகச் செய்வதே யோகம்” என்று கீதை கூறுகிறது.

செய்யும் தொழிலில் ஒன்றிவிடும் போது, அது தியானமாகி விடுவதோடு செய்யப்படுவதும் முழுமையாக அமைந்து விடுகிறது. அத்துடன் செய்யும் தொழிலின் பாரம், துன்பம் எதுவும் இல்லாமல் போய்விடுகிறது.


“எல்லாம் ஒரு சொல்லை, ஒரு சம்பவத்தை, ஒரு பிரச்சனையைய் எப்படி
எடுத்துக் கொள்கிறோம் என்பதைப் பொறுத்தே இருக்கிறது”.

ஜென் மதக் கதை ஒன்று, குரு தனது சீடருடன் உணவிற்காக வீடு வீடாகச் சென்று கொண்டு இருந்தார். ஒரு வீட்டில் பெண்மணி வெளியே வந்து குருவைப் பார்த்து திட்டி விட்டு சென்று விட்டார். சீடர் உடனே அந்தப் பெண்மணியைய் பார்த்து கோபப்பட்டார். உடனே குரு சீடரை அமைதியாக அழைத்துச் சென்று இப்பொழுது முதல் இந்த தட்டை நீயே வைத்துக் கொள் என்று கூறி விட்டார். அன்று இரவு சீடனை அழைத்து இப்பொழுது இந்த தட்டு யாருடையது என்று கேட்டார். சீடரின் பதில்… இது என்னுடையது என்றார். காலையில் எப்படி என்னுடையதாக இருந்த இந்த தட்டு மாலையில் நீங்கள் ஏற்றுக் கொண்டவுடன் உங்களுடையதாக மாறியதோ அதே போலத்தான் அந்த பெண்மணி திட்டிய பொழுது திட்டியது என்னையே என்று ஏற்றுக் கொள்ளாதவரை அந்த பெண்மணி கூறிய கடுஞ்சொற்கள் யாவும் அந்தப் பெண்மணியையே சாறும் என்று குரு சீடனுக்கு அறிவுரை கூறினார்.

ஞானோதயம்
தன்னைப் பெரிய அறிவாளியாகக் கருதிய ஒருவன், ஞானி ஒருவரை சந்தித்தான். இந்த உலகத்தில் எந்தப் புத்தகத்திலும் காணப்படாத முக்கியத்துவம் வாய்ந்த ஓர் உபதேசத்தை அவனுக்குத் தருவதாக வாக்குக் கொடுத்திருந்தார் அந்த ஞானி. அதைப் பெறவே ஞானியைச் சந்தித்தான் அந்த ஆசாமி.
அவனிடம், ''மழையில் போய் நின்று கொண்டு தலையையும் கைகளையும் உயரத் தூக்கு. உனக்கு முதல் ஞானோதயம் அப்போது உண்டாகும்'' என்றார் ஞானி.
மறுநாள், ஞானியிடம் வந்தான் அந்த ஆசாமி. ''நீங்கள் சொன்னது போலவே செய்தேன். என் உடல் முழுவதும் நனைந்து போனது. என்னை, ஒரு பெரிய முட்டாளாக உணர்ந்தேன்!'' என்றான். சற்றும் தாமதிக் காமல் ஞானி கூறினார்: ''நல்லது”. முதல் நாளிலேயே உனக்கு இவ்வளவு ஞானோதயம் ஏற்பட்டு விட்டதே!!!

தொகுப்பு :- Partha

12/05/2010

ராமகிருஷ்ண பரமஹம்சர்

ராமகிருஷ்ண பரமஹம்சரின் சிந்தனைகள்

ஒருமுறை எண்ணெய் வியாபாரி ஒருவர், குருதேவர் ராமகிருஷ்ண பரமஹம்சரைத் தரிசிப்பதற்காக வந்திருந்தார். அவர் நெடுநேரம் குருதேவரின் செயல்பாடுகளைப் பார்த்தபடியே பேசாமல் அமர்ந்திருந்தார். குருதேவரின் தீர்க்கமான பார்வை அவரின் மவுனத்தைக் கலைத்தது. ""குருதேவா! நான் எண்ணெய் வியாபாரம் செய்துவந்தேன். நல்லமுறையில் வியாபாரம் நடந்ததால் பெரும்பொருள் சேர்ந்தது. வயது ஏறஏற தெய்வதரிசனம் பெற வேண்டும் என்ற ஆவல் எழுந்தது. சொத்துக்களை பிள்ளைகளுக்கு எழுதிவைத்துவிட்டு, வியாபாரத்தையும் அவர் களிடம் ஒப்படைத்தேன்.

பொருள், வியாபாரம் என்று அனைத்தையும் விட்டபிறகும் தெய்வதரிசனம் கிடைக்கவில்லையே ஏன்?'' என்று ஏக்கத்துடன் தெரிவித்தார். ராமகிருஷ்ணர் வியாபாரியைப் பார்த்து,"" நீர் ஒரு வியாபாரி. நேற்றுவரை வியாபாரத்தில் அக்கறை காட்டினீர்! உமக்குத் தெரியாத தொழில்நுட்பமா நான் சொல்லித் தரப்போகிறேன். நேற்று வரை கடையில் இருந்த எண்ணெய் குடத்தை எடுத்துக் கொள்வோம். அதில் இருந்த எண்ணெயை இன்று காலி செய்ததாக வைத்துக் கொள்ளுங்கள்.

அதில் இருந்த எண்ணெய் தான் போகுமே ஒழிய எண்ணெய் வாசனை அவ்வளவு எளிதில் போய் விடுமா?'' என்று அவர் பாணியிலேயே பதில் கேள்வி கேட்டார். வியாபாரி, ""குருவே! மன்னித்துவிடுங்கள்! நான் தான் அவசரப்பட்டு விட்டேன். எண்ணெய்க்குடம் போலத் தான் நானும் என்பதை மறந்துவிட் டேன்! சொத்துக்களை வேண்டுமானால் பிள்ளைகளுக்கு எழுதி வைக்கலாம்.

ஆனால், அதிலிருந்து பற்றை அவ்வளவு எளிதில் போக்கமுடியவில்லை. பிறவிக்குணம் ஒரே நாளில் மாறி ஞானம் வருவதில்லை என்ற உண்மையை உணர்ந்துவிட்டேன்,'' என்று சொல்லி குருதேவரை வணங்கினார்.
தொகுப்பு :- Partha.

சுவாமி விவேகானந்தர்

சுவாமி விவேகானந்தரின் சிந்தனைகள்

பத்தொன்பதாம் நூற்றாண்டின் முக்கியமான இந்திய சமயத் தலைவர்.
விழிமின், எழுமின், குறிக்கோளை அடையும் வரை நில்லாது உழைமின்.
கடவுள் இருந்தால் அவனை நாம் காணவேண்டும், ஆத்மா இருந்தால் அதனை நாம் உணர வேண்டும், அப்படியில்லையென்றால் நம்பிக்கை இல்லாமல் இருப்பது நன்று. பாசாங்கு போடுவதை விட நாத்திகனாக இருப்பதே மேல்.
உலகின் குறைகளை பற்றி பேசாதே. குறைகளை நோக்கி வருத்தப்படு, எங்கும் நீ குறைகளை காண்பாய். ஆனால், நீ உலகுக்கு உதவி செய்ய விருப்பினால் உலகை தூற்றாதே, குறை சொல்லாதே. குறை சொல்லி உலகை இன்னும் பலவீனப்படுத்தாதே. உலகின் குறைகள், குற்றங்கள் எல்லாம் அதன் பலவீனத்தால் விளைபவை அல்லவா.?
செயல் நன்று, சிந்தித்து செயலாற்றுவதே நன்று. உனது மனதை உயர்ந்த இலட்சியங்களாலும், சிந்தனைகளாலும் நிரப்பு. அவற்றை ஒவ்வொரு நாளின் பகலிலும் இரவிலும் உன் முன் நிறுத்து; அதிலிருந்து நல் செயல்கள் விளையும்.
வாழ்வும் சாவும், நன்மையும் தீமையும், அறிவும் அறியாமையும் ஆகியவற்றின் கலவைதான் மாயா, அல்லது பிரபஞ்சத்தின் இயல்பு. இவ் மாய்த்துள் நீ எல்லையற்று மகிழ்ச்சிக்காக அலையலாம், ஆனால் நீ தீமையையும் காண்பாய். தீமையின்றி நன்மை இருக்குமென்பது சிறுபிள்ளைதனம்.
எவன் ஒருவனுக்கு தன்னிடத்தில் நம்பிக்கை இல்லைேயோ அவனே நாத்திகன். பண்டைய மதங்கள் கடவுள் நம்பிக்கை இல்லாதவனைத்தான் நாத்திகன் என்று குறிப்பிட்டன. புதிய மதம் தன்னம்பிக்கை இல்லாதவனைத்தான் நாத்திகன் என்று சொல்லுகிறது.
தன்னம்பிக்கை கொண்டிருந்த ஒரு சிலருடைய வரலாறே உலக சரித்திரமாகும். அத்தகைய நம்பிக்கை, உள்ளே இருக்கும் தெய்விகத்தை வெளியே வரவழைக்கிறது. நீ எதையும் சாதிக்க முடியும். அளவு கடந்த ஆற்றலை வெளிப்படுத்தப் போதுமான அளவிற்கு உண்மையாக நீ முயற்சி செய்யாத போது தான் தோல்வி அடைகிறாய். ஒரு மனிதனோ, ஒரு நாடோ தன்னம்பிக்கை இழந்த உடனே அழிவு வருகிறது.
நீ எதை நினைக்கிறாயோ அதுவாகவே ஆகிறாய். நீ உன்னை பலவீனன் என்று நினைத்தால் பலவீனனாகவே ஆகிவிடுவாய். நீ உன்னை வலிமையுடயவன் என்று நினைத்தால் வலிமை படைத்தவன் ஆகிவிடுவாய்.
பலவீனத்திற்கான பரிகாரம், ஓயாது பலவீனத்தைக் குறித்து சிந்திப்பதல்ல. மாறாக வலிமையைக் குறித்து சிந்திப்பது தான். மக்களுக்கு, ஏற்கனவே அவர்களுக்குள் இருந்து வரும் வலிமையைப்பற்றிப் போதிப்பாயாக.
மிகப்பெரிய உண்மை இது -- வலிமை தான் வாழ்வு; பலவீனமே மரணம்.
'இவனை நம்பு' அல்லது 'அவனை நம்பு' என்று மற்றவர்கள் சொல்கிறார்கள். ஆனால் நான் சொல்கிறேன் -- முதலில் உன்னிடத்திலேயே நீ நம்பிக்கை வை. அது தான் வழி. உன்னிடத்தில் நீ நம்பிக்கை வை, எல்லா ஆற்றல்களும் உன்னுள்ளேயே உள்ளன. அதை உணர்ந்து அந்த ஆற்றலை வெளிப்படுத்து. 'நான் எதையும் சாதிக்க வல்லவன்' என்று சொல். நீ உறுதியுடன் விஷத்தை பொருட்படுத்தாதிருந்தால், பாம்பின் விஷமும் உன் முன் சக்தியற்றதே.
ஒருமுகப்படுத்தும் ஆற்றல் வளர வளர அதிக அளவில் அறிவைப் பெறலாம். இந்த வழி தான் அறிவைப் பெறுவதற்குரிய ஒரே வழி. செருப்பை செப்பனிடுவதைத் தொழிலாகக் கொண்டவன் மனதை ஒருமுகப்படுத்தி தன் பணியைச் செய்தால் மேலும் சிறப்பாக செருப்புகளை செப்பனிடுவான். மனதை ஒருமுகப்படுத்தி சமையல் செய்யும் சமையற்காரன் மேலும் சிறந்த முறையில் சமைப்பான். பணம் சேர்ப்பதோ, கடவுள் வழிபாடோ அல்லது வேறு எந்த ஒரு வேலையானாலும் மனதை ஒருமுகப்படுத்தும் ஆற்றல் வளர வளர, மேலும் சிறப்பாக அந்தக் காரியத்தை செய்து முடிக்கலாம். இந்த ஒரு குரல், ஒரே தட்டுதல், இயற்கையின் கதவுகளைத் திறந்து ஒளி வெள்ளங்களை வெளியே பாய்ந்தோடச் செய்கிறது.
எந்த ஒரு சக்தியையும் புதிதாக உண்டாக்க முடியாது. ஏற்கனவே உள்ள சக்தியைத்தான் வேறு திசைக்கு நாம் திருப்பிவிட முடியும். எனவே, நமது கைகளில் ஏற்கனவே உள்ள மாபெரும் ஆற்றல்களை அடக்கி ஆள நாம் கற்றுக்கொள்ள வேண்டும். அவற்றை மனதின் வலிமையைக் கொண்டு வெறும் மிருக சக்தியாக இருப்பதற்கு பதிலாக, ஆன்மிகச் சக்தியாக இருக்கச் செய். பிரம்மச்சரியம் தான் எல்லா ஒழுக்கங்களுக்கும், எல்லா மதங்களுக்கும் அடித்தளமாக விளங்குகிறது என்பது இதனின்று தெளிவாகிறது.
நமது சொந்த மனப்பான்மை தான் நமக்கு ஏற்றாற்போல் உலகத்தைத் தோன்றும்படி செய்கிறது. நமது எண்ணங்களே பொருள்களை அழகு பொருந்தியவை ஆக்குகின்றன; நமது எண்ணங்களே பொருள்களை அவலட்சணமாக்குகின்றன. இந்த உலகம் முழுவதும் நமது சொந்த மனதிலேயே அடங்கியிருக்கிறது. எல்லாவற்றையும் சரியான முறையில் புரிந்துகொள்ளக் கற்றுக்கொள்.
நாம் இப்போது இருக்கும் நிலைமைக்கு நாமே பொறுப்பாளிகள். நாம் எப்படியெல்லாம் இருக்க வேண்டும் என்று விரும்புகிறோமோ அப்படி நம்மை அமைத்துக்கொள்ளும் ஆற்றல் நம்மிடமே இருக்கிறது. நாம் இப்போது இருக்கும் நிலை நம்முடைய முன்வினைகளின் பலன் என்றால், எதிர்காலத்தில் நாம் எப்படியெல்லாம் இருக்க வேண்டும் என்று விரும்புகிறோமோ அதைம் நாம் நமது தற்போதைய செயல்களால் உண்டாக்கிக் கொள்ள முடியும் என்பது வெளிப்படை.
இந்த உலகம் மிகப்பெரிய ஓர் உடற்பயிற்சிக் கூடம். இங்கு நாம் நம்மை வலிமையுடவர்களாக்கிக் கொள்வதற்காக வந்திருக்கிறோம்.
மக்கள் பொதுவாக வாழ்க்கையிலுள்ள குறைபாடுகளையெல்லாம் தங்களுடன் வாழ்பவர்கள் மீதோ, அல்லது அது தவறினால் தெய்வத்தின் மீதோ சுமத்துகிறார்கள். அல்லது புதிதாக அவர்கள் ஏதோ பேய் பிசாசு என்று கற்பித்துக்கொண்டு, அதைத் தலைவிதி என்று சொல்கிறார்கள். விதி என்றால் என்ன? அது எங்கே இருக்கிறது? எதை விதைத்தோமோ அதைத்தான் அறுவடை செய்கிறோம். நமது விதியை நாமே வகுத்துக்கொள்கிறோம். எனவே, அதன்பொருட்டுத் தூற்றுவதற்கும் ஒருவருமில்லை; பாராட்டுவதற்கும் ஒருவருமில்லை. காற்று வீசியபடி இருக்கிறது. பாய்மரங்களை விரித்துக் காற்றை பயன்படுத்திக்கொள்ளம் கப்பல்கள் தங்கள் வழியே முன்னேறிச் செல்கின்றன. ஆனால் பாய்களை சுருட்டி வைத்துள்ள கப்பல்கள் காற்றை ஏற்றுப் பயன் பெறுவதில்லை. இது காற்றினுடைய குற்றமாகுமா?
‘நான் அனுபவித்துக் கொண்டிருக்கும் இந்தத் துன்பம், என்னுடைய சொந்தச் செயல்களாலேயே உருவாக்கப்பட்டிருக்கிறது. இந்த ஒரு நிலையே, என் ஒருவனால் மட்டுமே அது நீக்கப்பட வேண்டும் என்பதைக் காட்டுகிறது’ என்று சொல். நான் எதைப் படைத்தேனோ அதை என்னால் அழிக்கவும் முடியும். பிறரால் படைக்கப்பட்ட ஒன்றை ஒருபோதும் என்னால் அழிக்க முடியாது. எனவே, எழுந்து நில். தைரியமாக இரு. வலிமையுடன் இரு. பொறுப்பு முழுவதும் உன் தோள் மீதே சுமந்துகொள். உனது விதியைப் படைப்பவன் நீயே என்பதைப் புரிந்துகொள். உனக்குத் தேவையான எல்லா வலிமையும் உதவியும் உனக்குள்ளேயே குடிகொண்டிருக்கின்றன.
நாம் நினைக்கும் ஒவ்வோர் எண்ணமும், நாம் செய்யும் ஒவ்வொரு காரியமும், குறிப்பிட்ட ஒரு காலத்திற்குப் பிறகு சூட்சுமத் தன்மையை அடைகிறது. பின்பு அது வித்து வடிவத்தைப் பெற்று மறைந்திருக்கும் நிலையில் நமது சூட்சும சரீரத்தில் வாழ்கிறது. மீண்டும் சிறிது காலத்திற்குப் பிறகு அது வெளிப்பட்டு வந்து தனக்கு உரிய பலன்களைத் தருகிறது. இந்தப் பலன்களே நம்முடைய வாழ்க்கையை நிர்ணயிக்கின்றன. இவ்விதம் மனிதன் தனது வாழ்க்கையைத் தானே உருவாக்கிக் கொள்கிறான். தனக்குத் தானே அமைத்துக் கொள்ளும் விதிகளைத் தவிர, வேறு எதற்கும் மனிதன் கட்டுப்பட்டவன் அல்ல.

 தொகுப்பு :- Partha.

11/22/2010

நேரத்தை நிர்வகிப்பது எப்படி? ( TIME MANAGEMENT)

எனக்கு நேரமே இல்லை’ என்று நாம் சொல்வது வாடிக்கை. ஆனால் அப்படிச் சொல்வதில் உண்மை இல்லை என்பதுதான் உண்மை. காலை எழுந்தவுடன் ஒவ்வொருவர் கையிலும் அரிதான ஒரு செல்வம், இந்த தேசத்தின் முதல் குடிமகன் முதல் கடைகோடி மனிதன் வரை அனைவருக்கும் சமமாக வழங்கப்படுகிறது. அது தான் நாளொன்றுக்கு வழங்கப்படும் 24 மணி நேரம். இந்த ஒன்றில் மட்டுமே உலகெங்கும் சம தர்மம் நிலவுகிறது.

நேரத்தை எல்லோருமே ஏதோ ஒரு வகையில் செலவழித்து விடுகிறார்கள். ஆனால் செலவழித்த அனைவருமே வெற்றி வாகை சூடுவதில்லை. நேரத்தை எந்த அளவுக்கு சிக்கனமாக, முழுமையாக, முறையாக பயன்படுத்துகிறோம் என்பதில்தான் வெற்றியின் ரகசியமே அடங்கியிருக்கிறது. அதில் அவரவர் திறமை ஆளுமை, வளர்ச்சி என வாழ்க்கைப் புதையலே மறைந்துள்ளது.
‘அளவறிந்து வாழாதான் வாழ்க்கை உளபோல இல்லாகித் தோன்றாக் கெடும்” என்பது குறள். இது பொருட் செல்வத்துக்கு மட்டுமன்று, நேரச் செல்வத்திற்கும் பொருந்தும் நேரத்தை அளவறிந்து செலவு செய்யாதவனுடைய வாழ்க்கை இருப்பது போல் தோன்றினாலும் இல்லாமல் அழிந்துவிடும். நேரத்தை மிகுந்த பயனுள்ளதாக்கிக் கொள்ள மேற்கொள்ளும் வழிமுறையைத்தான் நேர நிர்வாகம் என்கிறோம்.
வாழ்க்கையை நேசிப்பவர்கள் நேரத்தை நேசிக்க வேண்டும். வெற்றி பெறத் துடிப்பவர்கள் நேரத்தைப் போற்ற வேண்டும். காலத்தை கொண்டாடுகிறவர்களைத்தான் காலம் கொண்டாடும் மற்றவர்களை அது வெறுமனே கொண்டுபோகும். நீங்கள் விரும்பும் எதை வேண்டுமானாலும் என்னிடம் கேளுங்கள், நேரத்தைத் தவிர, என்ற நெப்போலியன் கூற்று நேரத்தின் அருமைக்குச் சிறந்த சான்று.
எதனோடும் ஒப்பிடமுடியாத அளவுக்கு மதிப்புமிக்க நேரத்தை எப்படியெல்லாம் நிர்வகித்து வாழ்வை வளப்படுத்திக் கொள்வது என்ற விழிப்புணவர்வை ஏற்படுத்தி அதற்கான வழிமுறைகளை கோடிட்டு காட்டுவதே இக்கட்டுரையின் நோக்கம். முதலாவதாக நேரத்தை சிறந்த முறையில் கையாளுவதற்கான சில வழிறைகள்;
1 ) நேர பட்ஜெட் தயாரித்தல்:
நேரத்தை நிர்வகிக்க நாம் செய்ய வேண்டிய முதல் காரியம் பட்ஜெட் தாயரிப்பது. அதாவது நேரத்திற்கான வரவு செலவுத் திட்டம் தயாரிப்பது. ஒவ்வொரு நாளும் வரவு 24 மணி நேரம் அதை உடல் ஆரோக்கியத்திற்கு பொருள் தேடுவதற்கு, படிப்பதற்கு, உற்சாகத்திற்கு, ஓய்விற்கு உறக்கத்திற்கு என்று ஒவ்வொரு செயலுக்கும் குறிப்பிட்ட அளவு நேரத்தை ஒதுக்க வேண்டும்.
பட்ஜெட்டில் பற்றாக்குறை ஏற்பட்டால் நமது நேரம் எந்தெந்த வகைகளில் விரயமாகிறது என்பதை பட்டியலிட்டு நேரத்தை பெருமளவில் வீணாக்கும் அரட்டையடித்தல், ஊர் வம்பு பேசுதல், தொலைக்காட்சிப் பார்த்தல் போன்றவற்றிற்கு ஒரு வரம்பு கட்ட வேண்டும். இதன் மூலம் மிச்சப்படுகிற நேரத்தை கொண்டு பற்றாக்குறையை சரிகட்டலாம்.
2) பணிகளை வகைப்படுத்துதல்:
பணிகளில் அவசரப்பணிகள் எவை என்றும் அவசியப் பணிகள் எவை என்றும் வகைப்படுத்தி செயல்பட வேண்டும். ஒரு குறிப்பிட்ட நேரத்திற்குள் செய்து முடிக்கப்பட வேண்டியவை அவசரப்பணி. ‘இத்தனை மணிக்குள் பணத்தை கட்ட வேண்டும். இன்றைக்குள் டிக்கெட் வாங்க வேண்டும் என்பது போன்றவை. நமது இலக்கை அடைய உதவும் பணிகள் அவசியப் பணிகள். பிளாட் வாங்குவது, வீடு கட்டுவது போன்றவை இதில் அடங்கும். அவரசப் பணிகளை உடனடியாக செய்து முடிக்க வேண்டும். அவசியப்பணிகளை ஆற அமர யோசித்து செய்ய நேரம் உண்டு.
3) பரிபூரணத்துவ (Over Perfection) எண்ணம் கூடாது:
ஒரு பணியை எந்தவிதக் குறையும் பிழையுமின்றி சிறந்த முறையில் செய்து முடிக்க வேண்டும் என்ற எண்ணம் நல்லதுதான். ஆனால் இந்த உணர்வை கட்டாயமாக்கிக் கொள்ளக்கூடாது. அதிகமான பரிபூரணத்துவ எண்ணம் எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்தும். இந்த பழக்கம் பணியை செயலிழக்கச் செய்து பணியை ஒத்திப்போடத் தூண்டும் தவிர்க்க முடியாமல் செயலில் ஒரு சிறு தவறு நிகழ்ந்துவிட்டால் அது மீண்டும் ஏற்படாமல் பார்த்துக்கொள்ள வேண்டுமே ஒழிய செய்த செயலையே திரும்ப திரும்ப செய்து கொண்டிருக்கக்கூடாது.
4) பொறுப்புகளை பகிர்ந்தளித்தல்:
நாமே எல்லாவற்றையும் செய்து முடிக்க முயற்சிக்கக்கூடாது. அது தோல்வியில்தான் முடியும். நம்மால்தான் சிறப்பாக செய்ய முடியும் என்று எண்ணுவது தவறு. உரிய முறையில் பொறுப்புகளைப் பிறருக்கு பகிர்ந்து அளிக்க பழக வேண்டும். உதாரணமாக ஒரு மேலாளர் அனைத்துப் பணிகளையும் தானே செய்து முடிப்பது கடினம். அவர் உரியவரிடம் பொறுப்புகளையும், வேலையையும் பகிர்ந்தளிக்க வேண்டும்.
5) வீண் பேச்சை தவிர்த்தல்:
சக ஊழியர்களிடம் சுமுக உறவு வைத்துக்கொள்ள வேண்டும் என்ற எண்ணத்தில் தேவையற்ற செய்திகளைப் பேசக்கூடாது. இச்செயல் அவர்களையும் தேவையற்றதை பேச ஊக்குவித்து நேரத்தடையை ஏற்படுத்தும். அதிக அளவிலான உறவு கடமையை முழுமையாகச் செய்ய உதவாது. சுமக உறவு கொள்வதற்கு ஒரு எல்லை வகுத்துக் கொள்ளவேண்டும்.
6) தொலைபேசி உரையாடல்:
இப்போதெல்லாம் தொலைபேசி மற்றும் அலைபேசியின் உபயோகத்தை விட தொந்தரவுகளே அதிகமாகி வருகின்றன. தொலைபேசியில் எப்போது, எப்படி, எவ்விதம் பேசுவது என்பதற்கு ஒரு நெறிமுறைவகுத்துக் கொண்டால் ஒழிய நேரத்தை சேமிக்க முடியாது. தொலைபேசியில் அவசியமெனில் மட்டுமே பேச வேண்டும். நண்பர்களையும் மற்றவர்களையும் அலுவலக நேரத்தில் தொலைபேசியில் அழைத்துப் பேச ஊக்குவிக்க கூடாது. தொலைபேசியை அவசியமான பணிகளுக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும்.
எத்தனையோ முக்கிய பணிகளுக்கு நேரம் இல்லை என்ற நிலையில் பல இடங்களில் அந்த நேரம் வீணாகிப் போகிறது. பேருந்து ரயில்வே நிலையங்கள், விருந்தினர்கள் வரவேற்பு என்று அவரவர் வாழ்க்கை சூழலுக்கு ஏற்ப சிறிதும் பெரிதுமாய் காத்திருப்புகள் நம் மீது திணிக்கப்படுகின்றன. அந்த காத்திருப்புகளை பயனுள்ளதாக மாற்ற முடியும். ‘மனமிருந்தால் மார்க்கம் உண்டு’ தினம் தினம் செய்யக்கூடிய சின்ன சின்ன வேலைகளையும் கிடைக்கும் சிறு சிறு நேர இடைவெளிகளையும் உரிய முறையில் இணைத்தால் நல்ல பலன் கிடைக்கும்.
இன்றைக்கு செய்ய வேண்டியதை நாளைக்கு செய்ய இருக்கிற வேலைகளை இன்றைக்கே செய்கிற முயற்சியும் வேண்டாம். இலக்குகளை சிறிய அடைவுகளாக பிரித்துக்கொள்ள வேண்டும். ஒரு பெரிய பள்ளத்தை இரண்டு தாண்டல்களில் தாண்ட முடியாது.
ஒரு நல்ல செயலைச் செய்ய கால நேரம் பார்க்கக்கூடாது. ‘நல்லதுக்கு காலமில்லை’ என்ற முதுமொழி கூறுவது இதைத்தான். ஒவ்வொரு நாளும் ராகு காலம், எமகண்டம், என்று பல மணி நேரத்தை பலர் எந்தக் காரியமும் செய்யாமல் வீணாக்கி விடுகின்றனர். ஒவ்வொரு மாதமும் அமாவாசை, அஷ்டமி, நவமி, பாட்டிமை, செவ்வாய்க்கிழமை என்று பல நாட்கள் வீணாக்கப்படுகிறது. இக்கணக்கின்படி ஆண்டில் 168 நாட்கள் கெட்ட நாட்கள். இப்படி நாள்தோறும் பல மணிநேரமும் மாதந்தோறும் பல நாட்களும் வீணாக்கப்பட்ட நாட்களை வாழ்நாள் முழுவதற்கும் கணக்கிட்டால் ‘வாழ்க்கையில் இவ்வளவு நாட்களை வீணாக்கிவிட்டோமா!’ என்று மலைப்பாக இருக்கும்.
உங்களுக்கு ஒரு வங்கி கணக்கு இருக்கிறது என்று வையுங்கள். தினமும் அதில் ரூ. 86400 வரவு வைக்கப்படுகிறது. ஆனால் அதை அதே தினம் செலவழிக்க வேண்டும். மிச்சமிருப்பதை மறுநாள் பெற முடியாது. அப்படி என்றால் என்ன செய்வோம்? ஒவ்வொரு நாளும் அன்றைய வரவை ஜாக்கிரதையாக அன்றே செலவு செய்வோம். வருங்காலத்திற்காகச் சரியான இடத்தில் முதலீடு செய்வோம். பண வங்கிக்கு பொருந்தும் இந்த நியதி நேர வங்கிக்கும் பொருந்தும். அதாவது ஒவ்வொரு நாளும் நம்முடைய நேர வங்கியில் 86400 நொடி நேரம் வரவு வைக்கப்படுகிறது.. அதனை முறையாக முதலீடு செய்ய வேண்டும். செலவழிக்காமல் விட்ட நேரம் மறுநாள் கிடைக்காது. ஆனால் அன்றைய தினம் தள்ளிப் போட்ட வேலைகளும் மறந்துவிட்ட கடமைகளும் அடுத்த நாள் வந்து சேர்ந்து கொள்ளும் என்பதை மறந்துவிடக்கூடாது. ஒவ்வொரு கடைபிடிக்க வேண்டிய கபிலரின் பாடல் ஒன்றினைப் பாருங்கள்.
ஒன்றைச்செய்யவும் வேண்டும்
ஒன்றும் நன்றே செய்ய வேண்டும்
நன்றும் இன்றேசெய்ய வேண்டும்
இன்றும் இன்னே செய்ய வேண்டும்

ரமண மகிரிஷியிடம் ஒருவர் ‘உலகின் எதிர்காலம் எப்படி இருக்குமோ என்று கவலையாக இருக்கிறது’ என்றாராம். அதற்கு ரமணர்’ ‘எதிர்காலத்தை பற்றி ஏன் கவலைப்படுகிறீர்கள்? நிகழ்காலத்தையே நீங்கள் சரியாக அறியவில்லையே. நிகழ்காலத்தை சரியாகப் புரிந்து கொண்டு வாழ்ந்தால் வருங்காலம் தன்னைத்தானே கவனித்துக் கொள்ளும்’ என்று தெளிவுபடுத்தினாராம். எனவே நிகழ்காலத்தை சரியாக பயன்படுத்திக்கொண்டு வாழ்ந்தால் எதிர்கால வாழ்க்கை புதிராக இருக்காது. புதிதாக இருக்கும்.
எந்தவொரு செயலுக்கும் பொருள் மற்றும் பணத்தைப் போல காலம் என்பதுவும் ஒரு முதலீடு காலத்தின் அடிப்படையில்தான் முதலீடு ‘நீண்ட கால முதலீடு, குறுகிய கால முதலீடுய என்று வகைப்படுத்தப்படுகிறது. காலச்செல்வம் அனைவருக்கும் எளிதாக, இலவசமாக கிடைக்கக்கூடிய ஒன்று. அதனை சிறப்பான வழியில் முதலீடு செய்ய வேண்டும்.
விடிந்தது எழுந்தோம், இருட்டியது படுத்தோம் என்று இருந்தால் ஒருகாலும் வளமாக வாழ முடியாது. காலையில் எழுந்தவுடன் ஒரு செயலை செய்து முடிக்க வேண்டும் என்ற உந்துதல் இருக்க வேண்டும். அங்கே இங்கே பேசுவது, அப்படி இப்படி வேடிக்கை பார்ப்பது என்று காலத்தைக் கழித்தால் வெற்றி எப்படி கிட்டும்?
‘பொழுதுபோக்கு’, ‘பொழுதைக் கழிப்பது’ என்று கூறுவதே தவறு. வெற்றிக்கு முதல் தகுதி பொழுதை நல்ல வழியில் பயன்படுத்துதலே ஆகும். போனால் வராத பொழுதை நாம் போற்றி வாழ பழகிக் கொள்ள வேண்டும். கடவுளால் தரப்பட்ட அரிய கொடை பொழுது. அதன் அருமை தெரியாதவர்கள்தான் ‘பொழுது போகவில்லை’ என்று புலம்புவார்கள். காலத்தின் அருமை தெரிந்தோர் ‘பொழுது போதவில்லை’ என்று வருந்துவார்கள்.
‘நீ கூற நினைக்கும் உண்மையை முதல் மனிதனாக நீயே அறிவித்து விடு இல்லையேல் இன்னொரு மனிதன் அதனை அறிவித்து உயர் புகழ் அடையும்போது – முன்னரே வெளிபடுத்தாமல் போனோமே என வருந்த நேரிடும்’ என்கிறார் எமர்சன் எனும் அறிஞர். எண்ணும் காலத்திற்கும் அதனை அறிவிக்கும் காலத்திற்கும் இடைப்பட்ட சில வினாடிகள் கூட வாழ்க்கைப் பாதையை மாற்றி விடும் வல்லமை படைத்தது.
வாழ்க்கைப் பாதையில் நாம் தொடர்ந்து முன்னேற்ற உழைப்பையும் மன உற்சாகத்ததையும் விடா முயற்சியையுமே துணையாகக் கொண்டு, காலநேரம் நமக்கு சாதகமாக வரும் என்று எண்ணிக் கொண்டிராமல் கருத்துடன் சிந்தித்து செயல்பட்டு நன்னம்பிக்கையோடு முயன்று முன்னேறவேண்டும்.
வாழ்க்கையும் நேரமும் ஒரே பொருளுடையது. வீணாகிற நேரம் வீணாகிற வாழ்க்கை என்று பொருள். நல்ல முறையில் உபயோகிக்கப்படுகிற நேரம் வாழ்வை வளப்படுத்துகிறது. நேரம் அதனுடைய தன்மையில் நல்லதுமல்ல. கெட்டதுமல்ல. நம் திறமையின்மைக்காக நேரத்தை குற்றம் சாட்டுவது நியாயம் அல்ல.
மனிதன்தான் நேரத்தை நிர்வகிக்க வேண்டும். நேரம் மனிதனை நிர்வகிப்பதாக இருக்கக்கூடாது. நேர நிர்வாகம் என்பது நேரத்திற்கு அடிமை ஆவது என்பதல்ல. நேரத்தை வென்று மகிழ்வுடன் வாழ உதவும் வழிமுறை. நேரத்தை நிர்வகித்து வாழ்வது ஒரு இயந்திர வாழ்க்கை என்று பலர் நினைக்கின்றனர். அது தவறு. நேரத்தை நிர்வகித்து வாழ்வது நிம்மதியையும் மகிழ்ச்சியையும் அளிக்க வல்லது. நேர நிர்வாக நுணுக்கங்களை அறிந்து அதற்கேற்ப செயல்பட்டால் நாளொன்றுக்கு 24 மணி நேரம் அல்ல 48 மணி நேரமே கிடைக்கும்.

மன அமைதி

மன அமைதிக்கு சில யோசனைகள்

நீங்கள் மன அமைதியுடனும், மகிழ்ச்சியுடனும் இருக்க விரும்புகிறீர்களா? சில நெறிமுறைகளை நீங்கள் பின் பற்றுவீர்களானால், உங்களுக்கு மன அமைதி கிடைக்கும். பயற்சி செய்து பாருங்கள்.
1. தீயவர்களோடு உறவு கொள்வதைத் தவிர்க்கவும். ஏனெனில் உங்கள் மனமும் தீமை உடையதாகிவிடும்.
தீயோரைக் காண்பதும் தீது
தீயோர் சொற்கேட்பதும் தீது
தீயோடருடன் இணங்கி இருப்பதும் தீது.
நல்லோரைக் காண்பதும் நன்று
நல்லோர் சொற் கேட்பதும் நன்று
நல்லோர் குணங்கள் உரைப்பதும் நன்று
நல்லோருன் இணங்கி இருப்பதும் நன்று.
2. சண்டை, ச்ச்சரவுகளில் ஈடுபடாதீர்கள். சளசளவெனப் பேசுவதைத் தவிருங்கள். அது உங்கள் சக்தியை வீணாக்கும். வீணான விவாதத்தில் உங்கள் நேரத்தைப் பாழ்படுத்தாதீர்கள். வீண் சர்ச்சை பகையை வளர்கும்.
3. உங்கள் தேவைகளைப் பெரிதும் குறைத்துக் கொள்ளுங்கள். அதீதமான ஆசையே துன்பத்திற்கு காரணம்.
ஆசைப்படப்பட ஆய்வறும் துன்பம்
ஆசை விட விட ஆனந்தமாமே!
4. ஒரு போதும் உங்களை மற்றவர்களுடன் ஒப்பிட்டுப் பார்க்காதீர்கள். மற்றவர்களைப் போல நடந்து கொள்ள வேண்டும் என்ற எண்ணமே உங்களுக்குத் தடை. உங்கள் மனத்திற்குச் சரி என்று பட்டதை உறுதியாகப் பின் பற்றுங்கள். மற்றவர்கள் உங்களைப் பற்றி என்ன நினைக்கிறார்கள். என்ன பேசுகிறார்கள் என்றெல்லாம் ஒரு போதும் கவலைப்பட வேண்டாம். நீங்கள் நேர்மையுடனும், மனச் சாட்சியுடனும் செயலாற்றுவீர்களேயானால் எப்போதும் நீங்கள் மகிழ்ச்சியாக இருக்கலாம்.
நீங்களே உங்களுக்கு உற்ற நண்பன்
நீங்களே உங்களுக்கு உற்றபகை
என்ற கீதை வாக்கியத்தை ஒரு போதும் மறவாதீர்கள்.
5. மற்றவர்களது கண்டனத்திற்கோ, விமர்சனத் திற்கோ ஒரு போதும் செவி சாய்க்க வேண்டாம். “உலை வாயை மூடினாலும், ஊர் வாயை மூடமுடியுமா?” உலகத்தார் எப்போதும் குறைசொல்க் கொண்டே தான் இருப்பார்கள்
6. பெயருக்கும், புகழுக்கும் ஒரு போதும் ஆசைப்படாதீர்கள். உங்கள் கடமையைச் செவ்வனே செய்து வந்தால் ஆண்டவன் உரிய பலனைத் தருவான்.
ஏனெனில் பலனை எதிர்பார்த்துக் கடமையைச் செய்யும் போது, எதிர்பார்த்த பலன் கிடைக்க வில்லை என்றால் ஏமாற்றத் தால் நாம் மனம் தளர்ந்து போவோம்.
7. எப்போதும் மகிழ்ச்சியாகவும், மனநிறை வுடனும் இருங்கள். கவலைப்படுவதை விட்டொழியுங்கள்.
8. நடப்பதெல்லாம் நன்மைக்கே. இறைவனது சங்கல்பமே என்று கொள்ளுங்கள். ஒரு போதும் துயரம் உங்களை வாட்டாது.
9. குற்றம் பார்த்தால் சுற்றம் இல்லை. பிறரைக் குறைசொல்லிக் கொண்டே இருப்பதைத் தவிருங்கள். உங்கள் குடும்பத்தாரோடு அன்புடனும், பரிவுடனும் நடந்து கொள்ளுங்கள்.
10. மனதாறப் பிறரைப் பாராட்டுங்கள். தூற்றுவதால் பகையும், மனக்கசப்பும் நேரிடும். மாறாக போற்றுவதால் உறவும் வளருமன்றோ!
11. சமமானவர்களுடன் “மைத்ரி” (சிநேக பாவத்துடன்), தாழ்ந்தவர்களிடம் கருணை, உயர்ந்தவர்களிடம் மரியாதை, தீயவர்களிடம் அலக்ஷயம் (உபேஷை) ஆகியவை சித்தப் பிரசாதத்தைத் தரும். மன அமைதியைத் தரும் என்கிறார் பதஞ்சலி முனிவர். இந்த குணங்களைக் கொள்ளுங்கள்.
12. மனம் போன போக்கெல்லாம் போக விடாமல், அலைபாயும் மனதைக் கடிவாளம் போட்டு நிறுத்தப்பழகுங்கள். ஒரு போதும் மனம் தளர வேண்டாம். தவநெறியை மேற்கொண்டு மாபெரும் சக்தியைப் பெறுங்கள்.
மனம் தான் நம்மைத் தளைக்குள் சிக்க வைக்கிறது. அந்த மனதைக் கட்டி ஆளும் போது, அதுவே நமக்கு விடுதலையைத் தேடித் தந்து ஆனந்தத்தில் திளைக்க வைக்கிறது.
சக்ரவர்த்தி ஏனைய அரசர்களை எல்லாம் எப்படி வெற்றி கொண்டு. தன் ஆளுமையின் கீழ் கொண்டு வருகிறாறோ, அது போல உங்கள் புலன்களை அடக்கி ஆண்டு, மனதை நிலை நிறுத்தி, அமைதியால் திளைக்கச் சதா சர்வ காலமும் தியானம் செய்யுங்கள்.
13. தீய எண்ணங்களை மனதில் புக விடாமல் அணை போடுங்கள். மனதை ஒரு முகப்படுத்தி இறை தியானத்தில் ஈடுபட்டு, சச்சிதானந்த ஸ்வரூபத்தில் திளைத்து, பேரானந்தத்தில் நிலைத்திருப்பீர்களாக!
Thanks :-thannambikkai.

11/21/2010

இறை வணக்கம்

நபிகள் நாயகம் மதீனாவில் ஒரு பள்ளி வாசலுக்கு செல்லும் போதெல்லாம்  ஒரு மனிதர் எப்போதும் இறை வணக்கத்தில் ஈடு பட்டிருப்பதைக் கவனித்தார். அவரைப் பற்றி விசாரித்தபோது அவர் சிறந்த பக்திமான் என்றனர்.இரவும் பகலும் இறை வணக்கத்திலேயே அவர் இருப்பதாகக் கேள்விப்பட்டார். அவர் குடும்ப செலவுக்கு என்ன செய்கிறார் என்று நபிகள்  கேட்டார்.அருகிலிருந்தவர் சொன்னார்,''அவருக்கு ஒரு அண்ணன் இருக்கிறார்.அவர் விறகு வெட்டி வியாபாரம் செய்கிறார்.அவர் தான் இவருடைய தேவைகளையும் கவனித்துக் கொள்கிறார்.''நபிகள் உடனே சொன்னார்,''இரவும் பகலும் இறைவனை வழி படும் அந்த நண்பரிடம் சொல்லுங்கள்.இவரைக்காட்டிலும் விறகு வெட்டிப் பிழைக்கும் இவரது அண்ணன் ஆயிரம் பங்கு மேலானவர்.குடும்பத்தின் தேவைக்கு நியாயமான வழியில் சம்பாதிப்பது சிறந்த இறை வணக்கம்தான் என்று அவருக்கு எடுத்து சொல்லுங்கள்.''பெருமானாரின் கூற்றை அறிந்த அந்த பக்தர் அன்று முதல் தமது அண்ணனுக்கு உதவியாக விறகு வெட்ட ஆரம்பித்தார்.ஓய்வு கிடைத்தபோதெல்லாம் இறை வணக்கத்தில் ஈடுபட

****************************************************************************

சுபி ஞானி ஒருவரிடம் ஒரு விவசாயி வந்தான்.''ஐயா.என் மனைவி வீடு முழுவதும் ஆடு,மாடு,கோழி என்று வளர்க்கிறாள்.அதனால் வீட்டிற்குள் நுழைந்தாலே ஒரே துர்நாற்றமாக இருக்கிறது.இதற்கு நீங்கள்தான் ஒரு வழி சொல்ல வேண்டும்.''என்று அவன் ஞானியிடம் சொன்னான்.அவன் வீட்டைக் கவனித்த அந்த ஞானி சொன்னார்,''உன் வீட்டில் தான் ஜன்னல்கள் இருக்கின்றனவே?அவற்றை ஏன் மூடி வைத்திருக்கிறாய்?ஜன்னலைத் திறந்து விட்டால் காற்று நன்றாக வரும்.துர்நாற்றமும் போய்விடும்.''உடனே விவசாயி பதற்றத்துடன் ,''ஐயையோ,ஜன்னலைத் திறந்து விட்டால்  என் புறாக்கள்  எல்லாம் பறந்து போய்விடுமே?''என்றான்.
அதிக முக்கியத்துவம் இல்லாத புறாக்களுக்காக ஜன்னலைத் திறக்காமல்  துர் நாற்றத்தை அவன் சகித்துக் கொள்கிறான் அதே போல நாமும் முக்கியத்துவம் இல்லாத விஷயங்களை எண்ணிக்கொண்டே நமது அறிவு என்னும் ஜன்னலை திறவாதிருக்கிறோம் அதன் விளைவு தான் மன அழுத்தம்.
-தொகுப்பு Partha.

11/19/2010

கனவுகள் நினைவாக....

கனவுகள் நினைவாக... நினைத்தவை எல்லாம் நிஜமாக.... கண்ணுக்குள் கண்ட கனவு கண் முன் நடக்க ஒரு சில யோசனைகள்.

ஒரு சிலர் எவ்வளவோ பேரும் புகழும் பெறுகின்றனர். அவர்களது பணியில் சிறந்து விளங்குகின்றனர். எட்டாத புகழை அடைகின்றனர். இதெல்லாம் அவர்களால் எப்படி முடிந்தது. இதோ அந்த வெற்றியின் ரகசியம்.

நமது வாழ்க்கை எப்போதுமே ஒரு ஓட்டப்பந்தய மைதானம்தான். அதில் மூச்சிறைக்க ஓடிக் கொண்டிருப்போம் நாம். வேகமாக ஓடுபவன் புகழை அடைகிறான். ஆனால் நாமோ எந்த லட்சியமும் இன்றி ஓடிக் கொண்டிருப்போம். மற்றவன் அடையும் புகழைக் கண்டு பொறாமைப் பட்டுக் கொண்டும் ஓடிக் கொண்டிருப்போம்.

தடுக்கி விழுந்தவனைப் பார்த்து ஏளனச்சிரிப்புடனே ஓடிக் கொண்டிருப்போம். ஓர் கட்டத்தில் நம்மால் ஓட முடியாமல் நிற்போம். அதுதான் வயோதிகம். அப்போதும் நம்மைக் கடந்து பலர் ஓடிக் கொண்டிருப்பார். இது வேண்டாமே....

வேகமாக ஓடி புகழை அடைய வேண்டும் என்ற உத்வேகத்துடன் ஓடலாமா?

அதற்காக 10 எளிய வழிகள். இவைகள் அனைத்தும் வெற்றி பெற்றவர்கள் தங்கள் கனவுகள் நிஜமாக கையாண்ட முறைகள்தான்.

தன்னம்பிக்கை

10 வழிமுறைகளில் எத்தனை வழிகளை நீங்கள் கையாள முடியும் என்று நினைக்கின்றீர்கள்?

அனைத்துமா? ஆம் இதுதான் முதல் வழிமுறை. வெற்றி பெற தன்னம்பிக்கை தேவை. அனைத்தையும் செய்ய இயலும் என்ற தன்னம்பிக்கை. நம்பிக்கையற்றவர்களையும், அவநம்பிக்கையையும் தவிருங்கள். வெற்றி உங்கள் பக்கத்தில் வரும்.

லட்சியம்

உங்களது லட்சியத்தை அல்லது நீங்கள் அடைய விரும்பும் ஒன்றை முதலில் தேர்வு செய்து கொள்ளுங்கள். ஏனெனில் ஏதாவது ஒன்றை சாதிக்க வேண்டுமெனில் அது என்ன என்பதை முதலில் தீர்மானித்துக் கொள்ள வேண்டும்.

முயற்சி

நீங்கள் என்னவாக விரும்பினீர்களோ அதற்கான அனைத்து முயற்சிகளையும் செய்யுங்கள். எதை நினைத்தும், பயந்தும் முயற்சியில் இருந்து பின்வாங்காதீர்கள். முயற்சியுடையார் இகழ்ச்சி அடையார்.

கற்றுக்கொள்ளுங்கள்

படியுங்கள். கற்றுக் கொள்ளுங்கள். எப்போதும் எதையாவது கற்றுக் கொண்டே இருங்கள். புதிது புதிதாக எதையாவது அறிந்து கொண்டே இருங்கள். உங்களுக்கு எதில் விருப்பமோ அதைப் பற்றி அதிகமாக அறிந்து கொள்ள முன்வாருங்கள். கற்றுக் கொள்வதை எப்போதும் நிறுத்த வேண்டாம்.

உழைப்பு

லட்சியத்தை நோக்கி கடுமையாக உழையுங்கள். உங்கள் பார்வை எப்போதும் லட்சியத்தை நோக்கியதாக மட்டுமே இருக்க வேண்டும். லட்சியத்தை பார்க்கும் கண்களுக்கு அதன் வழியில் இருக்கும் தடைகள் தெரியாது. அப்போதுதான் உங்கள் உழைப்பு பலனை அளிக்கும்.

தெளிவுறுங்கள்

லட்சியம் குறித்து பல்வேறு விஷயங்களைப் பற்றி தெரிந்து கொள்ளங்கள். நீங்கள் செய்யும் தவறுகளை திருத்திக் கொள்ளுங்கள். தவறுகள் மூலமாகவும் பலவற்றை கற்றுக் கொள்ளலாம். தவறுக்காக எப்போதும் கவலைப்படாதீர்கள். உங்கள் தவறுகள்தான் பல சமயங்களில் நல்ல முடிவுகளை எடுக்க உதவும் என்பதை மனதில் கொள்ளுங்கள்.

குறுக்கீடு

உங்கள் லட்சியத்தை கெடுக்கும் வகையில் நபரோ அல்லது பொருளோ, பணமோ குறுக்கே வருவதை அனுமதிக்காதீர்கள். உங்களது அனைத்து எண்ணங்களையும் லட்சியத்தை நோக்கியே செலுத்துங்கள். உங்கள் நேரத்தை அதற்காகவே செலவிடுங்கள்.

தனித்துவம்

உண்மையாக இருங்கள். உங்களை நம்புங்கள். சுயமாக சிந்தித்து சொந்த திறமையை வெளிப்படுத்துங்கள். மற்றவர்களை பின்பற்றி சென்றால் தனித்துவம் இருக்காது.

கலந்தாய்வு

எந்த மனிதனும் தனியல்ல. எங்கும் எப்போதும் ஒரு குழுவாகவே இருக்க வேண்டும். உங்களது எண்ணங்களை, சிந்தனைகளை மற்றவர்களுடன் கலந்து பேசுங்கள். அவர்களையும் பேசச் சொல்லுங்கள். மற்றவர்களையும் ஊக்கப்படுத்துங்கள். பயிற்சி, ஊக்கம் போன்றவற்றை ஒருசேரப் பெருங்கள்.

பொறுப்பேற்பு

எப்போதும் யாரையும் ஏமாற்றாதீர்கள். யாரிடமும் பொய் சொல்லாதீர்கள். உறுதி அளித்தால் அதை எப்பாடுபட்டாவது நிறைவேற்றுங்கள். தவறு செய்தால் அதை ஒப்புக் கொள்ளுங்கள். நீங்கள் செய்யும் செயலுக்கு பொறுப்பேற்றுக் கொள்ளுங்கள்.

நேர்மை, கீழ்பணிதல், பொறுப்புடன் செயலாற்றுதல் போன்றவை இல்லாமல் எந்த காரியத்தையும் சாதிக்க இயலாது.

எனவே இவற்றை கடைபிடித்து உங்களது லட்சியத்தை நிறைவேற்றுங்கள். நாம் பிறந்தோம், வாழ்ந்தோம், இறந்தோம் என்றில்லாமல் வாழ்ந்ததற்கான சுவடுகளை ஏற்படுத்திவிட்டுச் செல்லுங்கள்.

நேர நிர்வாகம்

நேர நிர்வாக இரகசியங்கள்


இன்றைக்குப் பெரும்பாலானவர்கள், 24 மணி நேரம் போதாமல் ஓடிக் கொண்டிருக்கின்றனர். ஏதாவது ஒன்றை முடிக்கவில்லையா என்று கேட்டால், ‘நேரமில்லை’ என்று எளிதாகக் கூறிவிடு வோர் அதிகம். ஆனால் நம்மை விட அதிக வேலைகளை, அதிகத் திறனோடு செய்பவர்கள் இருக்கிறார்கள், முக்கிய நபர்கள் பலர் ஒரேநேரத்தில் பல வேலைகளைத் திறம்படச் செய்கிறார்கள். உணர்ச்சிவசப்படாமல் ஒரு நிமிடம் யோசித்தால் இது உண்மை என்பதை உணர முடியும்.
நேரத்தைத் திறமையாகக் கையாளு பவர்கள்தான் வெற்றியாளர்கள் ஆகிறார்கள்.
இன்றைய வெற்றியாளர்கள் பலரும் நேரத்தைத் திறமையாகக் கையாண்டு கொண்டிருக்கிறார்கள்.
நேர நிர்வாகம் என்பது நேரந்தவறாமல் இருப்பது மட்டுமல்ல. பல்வேறு வேலைகளைக் கையாளுவது, எப்போதும் ஏதாவது ஒரு வேலையில் கவனம் செலுத்துவது.
சரியான நேர நிர்வாகம் என்பது எதற்கு. முதலில் முக்கியத்துவம் அளிப்பது என்று அறிந்திருப்பது.
பட்டியல் போடலாம்
பிரபல காலணி நிறுவனத்தின் நிர்வாக இயக்குநரான ராஜீவ் மேத்தா கூறுகிறார்:
“உங்களின் இலக்கை முதலில் நிர்ணயித்துக் கொள்ளுங்கள். முடிந்தால் அடுத்த நான்காண்டுகளுக்கான இலக்குகளை யும் முடிவு செய்துவிடுங்கள். வருடாந்திர இலக்குகளின் அடிப்படையில் உங்களின் அன்றாடப் பணிகளையும், வாரப் பணிகளையும் அமைத்துக் கொள்ளுங்கள்.”
வெறுமனே சொல்வதோடு நின்றுவிடா மல் தனது வருடாந்திர இலக்கை எட்டுவதில் தினசரி கவனம் செலுத்துகிறார் மேத்தா. இரவில் எந்த நேரத்துக்குப் படுக்கப் போனாலும் அதிகாலையில் தவறாது 5 மணிக்கு எழுந்துவிடுகிறார். கண் விழித்ததுமே சுறுசுறு சிந்தனையில் ஈடுபடுகிறார்.
அன்றைக்கு முடிக்கவேண்டிய பணிகளைப் பட்டியலிட்டுக் கொள்கிறார். அதன்பிறகுதான் செய்தித்தாளைப் புரட்டு கிறார். இவரைப் போன்ற முறையையே பின்பற்றுகிறார், தனியார் வங்கியொன்றின் துணைத் தலைவர்:-
“அலுவலகப் பணி தொடர்பாக அன்றன்று செய்ய வேண்டிய வேலைகள் பட்டியலையும், சொந்த விஷயமாக ஒவ்வொரு மாதமும் செய்ய வேண்டிய வேலைகள் பட்டியலையும் தயாரித்துக் கொள்கிறேன். தினசரி பட்டியலை அன்றன்று நிறைவேற்றுவதால் எனக்குப் பணியில் திருப்தியையும், மாதாந்திரப் பட்டியலை நிறைவேற்றுவதால் தனிப்பட்ட மகிழ்ச்சியையும் என்னால் அடைய முடிகிறது” என்கிறார் இவர்.

கஷ்டமானதை முதலில் முடிக்கலாம்
எளிதானதை அல்லது தமக்கு மிகவும் விருப்பமானதை முதலில் முடிக்க நினைப்பது பலரின் பழக்கம். அது சரியல்ல என்கிறார்கள் சாதனையாளர்கள். முன்னணி துணி நிறுவனம் ஒன்றின் இயக்குநரான ராம், தான் செய்ய வேண்டிய பணிகளை நான்கு வகையாகப் பிரித்துக்கொள்வதாகக் கூறுகிறார். அவை,
‘முக்கியமானவை - அவசரமானவை’,
‘முக்கியமானவை - அவசரமற்றவை’,
‘அவசரமானவை – முக்கியமற்றவை’,
‘முக்கியமற்றவை - அவசரமற்றவை’,
‘முதல் மூன்றை முடித்ததும் தான் நான் நான்காவதில் கவனம் செலுத்துகிறேன். எளிதான வேலையை முதலில் முடிக்க நினைப்பதில்லை’ என்கிறார் ராம்.
உங்களுக்கு நீங்களே விருந்தளியுங்கள்
அவசரமான, முக்கியமான வேலைகளை முடித்துவிட்டால் அன்றைய தினத்தின் முடி வில் உங்களுக்கு நீங்களே ‘விருந்தளித்து’க் கொள்ளுங்கள் என்கிறார்கள் நிபுணர்கள். அந்த ‘விருந்து நேரத்தின்’ மகிழ்ச்சியானது மேலும் அதைப் போல பல விருந்துகளை ‘ உங்களுக்கு நீங்களே ஈட்டிக்கொள்ள வேண்டும் என்ற தூண்டுதலை ஏற்படுத்தும் என்கின்றனர் அவர்கள்.
சில வேலைகள் போரடிப்பதாகவும், திரும்பத் திரும்பச் செய்வதால் அலுப்பூட்டுவதாகவும் இருக் கக் கூடும். அவற்றைத் தவிர்க்கவே நினை ப்பீர்கள். ஆனால் அதற்கு மாறாக நீங் களே உங்களை ஊக்குவித்துக் கொள்ளுங்கள்.
பல அசாதாரண விஷயங்கள் வெறும் புத்திசாலித்தனம் அல்லது படைப்புத் திறனால் மட்டும் சாதிக்கப்பட்டவை அல்ல; மாறாக நல்ல வேலைப் பழக்கத்தினால் நிறைவேற்றப்பட்டவை என்பதை ஞாபகத் தில் கொள்ளுங்கள்.

ஜென் கதை

ஜென் கதை ஒன்று


ஜென் குரு ஒருவர் இமயமலையில் இருந்தார். ஒருநாள் அவரைக் காண ஒரு மடாலயத்தின் தலைவர் ஒருவர் வந்திருந்தார்.

"ஐயா நான் பிரசித்தி பெற்ற மடாலயம் ஒன்றின் தலைவர்" என்று தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டார் வந்தவர்.

குரு மௌனம் கலைக்காமல் தலையசைத்தார்

"தற்பொழுது என் மனம் மிகுந்த குழப்பத்தில் உள்ளது. தெளிவு பெறவே தங்களை நாடி வந்தேன்" என்றார் வந்தவர்.

"நான் என்ன செய்யவேண்டும்?" என்று பணிவுடன் கேட்டார் குரு.

"குருவே எங்கள் மடம் மிகவும் புராதனமானது. பழைமையும் கீர்த்தியும் பெற்றது.உலகெங்கிலும் பல நாடுகளிலுமிருந்து ஆர்வமுள்ள பல இளைஞர்கள் வருவார்கள். ஆலயம் முழுவதும் இறைவழிபாட்டு ஒலியால் நிறைந்திருக்கும். ஆனால் சில காலமாக நிலைமை மோசமாக உள்ளது. எங்கள் மடத்தை நாடி யாரும் வருவதில்லை.அங்கு இருப்பதோ சில பிட்ச்சுக்கள் தான். அவர்களும் ஏனோதானோவென்று தங்கள் கடமையைச் செய்கிறார்கள்.இந்த நிலைக்கு என்ன காரணம் என்று தெரியவில்லை. இதற்க்கு என்ன பரிகாரம் காண்பதென்று விளங்கவில்லை. நீங்கள் தான் ஒரு உபாயம் சொல்ல வேண்டும்" என்று வேண்டினார் அந்த மடத்தலைவர்.

அவரது குரலில் தென்பட்ட ஆழ்ந்த வருத்தத்தையும் வேதனையையும் கண்ட குரு மெல்லக் கூறினார்.

"அறியாமை என்ற வினைதான் காரணம்"

"அறியாமையா?" என்று வியந்தார் வந்தவர்.

"ஆம் உங்கள் மத்தியில் ஒரு இறைத்தூதர் உறைகிறார். நீங்கள் அவரை உணரவில்லை. அவரை அறிந்துகொண்டால் போதும் இந்தக் குறைகள் நீங்கிவிடும்" என்று அவருக்கு விடைகொடுத்து அனுப்பினார் குரு.

குரு சொன்னதை சிந்தித்தபடியே புறப்பட்ட மடத்தலைவர் மடத்திற்கு வந்து அங்குள்ளவர்கள் அனைவரையும் அழைத்து குரு சொன்ன செய்தியை விளக்கிக் கூறினார்.

இதைக் கேட்ட அனைவருக்கும் அதிர்ச்சியாகவும் குழப்பமாகவும் இருந்தது. அவநம்பிக்கையுடனும் அதே சமயம் பயம் கலந்த சந்தேகத்துடனும் அவர்கள் ஒருவரையொருவர் பார்த்துக்கொள்ள ஆரம்பித்தனர்.

இவராயிருக்குமோ? இல்லை அவரையிருக்குமோ? என்று சந்தேகத்துடன் ஒருவரையொருவர் பார்த்துக்கொள்ள ஆரம்பித்தனர். யார் தேவதூதர் என்று கண்டுபிடிக்க தங்களால் முடியாது. அது இங்குள்ள யாராகவும் இருக்கலாம் என்ற முடிவுக்கு வந்த அங்கிருந்த ஒவ்வொருவரும் மற்றவரிடம் மரியாதாக நடக்க ஆரம்பித்தனர். ஒருவேளை இவர் தேவதூதராக இருந்தால்? என்ற கேள்வியோடு.மற்றவர்களை பரிவோடு நடத்தினர்.

இதனால் சில நாட்களிலேயே அந்த மடாலயம் மகிழ்ச்சி நிரம்பியதாயிற்று. அங்கு வந்தவர்கள் பலரும் அங்குள்ள நிலையைப் பற்றி மற்றவர்களிடம் கூறத்தொடங்கினர். மீண்டும் பல இடங்களில் இருந்து இறைப்பனிபுரிய அங்கு வர ஆரம்பித்தனர்.

இதனைக் கண்ட பிறகு தான் மடாலத்தின் தலைவருக்கு குரு சொன்னதன் பொருள் புரிந்தது. இறைத்தூதர் வெளியில் இல்லை. நமக்குள் இருக்கிறார். நாம் ஒவ்வொருவருக்குள்ளும் இருக்கிறார். நாம் மற்றவருடன் பணிவுடனும் பரிவுடனும் பழகும்போது நாம் இறைத்தூதராகிவிடுகிறோம்.

கடவுள் என்பவர் எங்கும் இல்லை. நமக்குள் இருக்கிறார். நாம் ஒவ்வொருவருக்குள்ளும் இருக்கிறார். நம்மைப் போல பிறரையும் நேசித்தால் இறைவனை உணர முடியும்.
 

10/19/2010

வாய்விட்டுச் சிரியுங்கள்; நோய் விட்டுப் போகும்!

'எங்கே நிம்மதி' என்று புலம்பித்திரியும் இளைஞர்களைப் பார்க்கும் போது 'புதிய பறவை' திரைப்படத்தில் வரும் பாடல்தான் ஞாபகத்துக்கு வருகிறது.​ எந்திர வாழ்க்கையாக மாறிப்போனதால் மனிதன் நிம்மதியைத் தொலைத்துவிட்டான்.​ மன அழுத்தத்துக்கு ஆளாகி இளைஞர்களும்,​​ இளம்பெண்களும் தாம்பத்திய வாழ்வில் தோல்வியைத் தழுவுவதும் எதார்த்தமாகிப்போனது.
​ இப்படி மனித சமுதாயத்தையே ஆட்டுவிக்கும் மன அழுத்தம் என்றால் என்ன,​​ அது எப்படி ஏற்படுகிறது,​​ ​ மன அழுத்தத்துக்கு ஆட்பட்டுவிட்டால் அதில் இருந்து எப்படி எளிதில் மீளுவது ​ போன்றவை குறித்து கரூரைச் சேர்ந்த பிரபல மனநல மருத்துவரும்,​​ உளவியல் நிபுணருமான செந்தில்வேலன் இதோ நம்மிடம் பகிர்ந்து கொண்டது:​​
மன அழுத்தம் என்றால் என்ன?​​
ஏதா​வது ஒரு விஷ​யம் மனி​தர்​க​ளின் தினசரி வாழ்வில் ஒரு மாற்றத்தையோ அல்லது ​மனிதர்கள் சமாளிக்கும் திறமைக்கு ஒரு சவாலையோ ஏற்படுத்தும் போது உணரப்படும் விரும்பத்தகாத உணர்வையே மன அழுத்தம் என்கிறோம்.
பொதுவாக மன அழுத்தம் எப்படி வெளிப்படும்?​​
மன அழுத்​தம் கோப​மாக,​​ பய​மாக,​​ ​ இயலாமையாக,​​ கவலையாக,​​ வெறுப்பாக,​​ அமைதியின்மையாக,​​ கவனமின்மையாக-எப்படி வேண்டுமானாலும் வெளிப்படலாம்.
மன அழுத்தம் யாருக்கு ஏற்படுகிறது?​​
மன அழுத்​தம் சிறி​யவர்,​​ பெரியவர் என்று வயது வித்தியாசமின்றி யாருக்கு வேண்டுமானாலும் ​ ஏற்படலாம்.​ இன்றைய காலக் கல்விச் சுமையால் குழந்தைகளுக்குகூட மன அழுத்தம் ஏற்படலாம்.​ ​ ஏழை-பணக்காரர்,​​ ஆண்-பெண்,​​ படித்தவர்-படிக்காதவர் என்ற வித்தியாசமின்றி யாருக்கும் மன அழுத்தம் ஏற்படும்.
மன அழுத்தம் ஏற்படக் காரணம் என்ன?​​
மன அழுத்​தம் பெரும்​பா​லும் குடும்ப உற​வுகளில் ஏற்படும் கசப்புகள்,​​ ஏமாற்றங்கள்,​​ எதிர்பார்ப்புகள்,​​ நிறைவேறாத ஆசைகள் ஆகியவற்றாலும் சமுதாய சூழ்நிலைகளாலும் மற்றும் வேலை பார்க்கும் இடங்களில் ஏற்படும் பிரச்னைகளாலும் ஏற்படும்.
நீங்கள் ஒரு உளவியல் நிபுணர்.​ ஆக உளவியல் ரீதியாக மன அழுத்தத்துக்கு எவை காரணங்களாக கண்டறியப்பட்டுள்ளன?​​
​ உள​வியல் ரீதியாக எடுத்துக்கொண்டால் மன விரக்தி,​​ வாழ்வில் ஏற்படும் திடீர் மாற்றம்,​​ ​முரண்பாடுகள்,​​ நிர்பந்தம் ஆகியவையே மன அழுத்தத்துக்கு காரணம்.
அதாவது ஒரு இலக்கை அடைய பலமுறை முயன்றும் தோல்வி ஏற்பட்டால் மன விரக்தி ஏற்படுகிறது.​ பெரும்பாலான தருணங்களில் நாம் எதார்த்தம் இல்லாத இலக்குகள்,​​ ​ எதிர்பார்ப்புகள்,​​ ஒப்பீடுகளை மனதில் வைத்து விரக்தி அடைகிறோம்.
​ அமைதியான நதியில் சீரான வேகத்தில் நிதானமாகச் சென்று கொண்டிருக்கும் படகைப் போன்ற நம் வாழ்வில் திடீரென ஏற்படும் மாற்றங்கள் நம்மை புரட்டிப் போடுகின்றன.​ ​ நம்முடைய பொறுமைக்கும்,​​ சிக்கலை சமாளிக்கும் திறமைக்கும் சவாலாக உள்ளன.
அதேபோல அன்றாட வாழ்வில் நாம் சந்திக்கும்,​​ அனுபவிக்கும் முரண்பாடுகள் கணக்கிலடங்கா.​ விழித்தெழுவதில் இருந்து உறங்கும்வரை முரண்பாடுகளோடு போராட வேண்டியுள்ளது.​ ஒன்றுக்கு மேற்பட்ட ஆசைகள்,​​ விருப்பங்கள் ஒரே நேரத்தில் வெளிப்பட போட்டியிடும்போது முரண்பாடு ஏற்படுகிறது.
அதேபோல உலகில் எல்லோரும் ஏதாவது நிர்பந்தத்துக்கு ஆளாகி நமக்கு பிடிக்கிறதோ இல்லையோ சில காரியங்களைச் செய்தாக வேண்டிய கட்டாயத்துக்கு உள்ளாகிறோம்.​ ​ சமூக அந்தஸ்துக்காக தகுதிக்கு மீறி கடனை வாங்கி ஆடம்பர வீடு கட்டுகிறோம்.​ கார் வைத்துக் கொள்கிறோம்,​​ கடனை வாங்கியாவது லட்சத்தைப் பறிக்கும் பள்ளிகளில் குழந்தைகளைப் படிக்க வைப்பதை கெüரவமாக நினைக்கிறோம். இதனால் ஏற்படும் பொருளாதார சுமைகளால் மன உளைச்சலுக்கு ஆளாகிறோம்.
​ மன அழுத்தத்தை நம் அருகிலேயே வராமல் துரத்தி அடிக்க முடியுமா?​​
இன்​றை​யச் சூழலில் மன அழுத்தத்தை யாராலும் தவிர்க்க முடியாது.​ ஆனால் குறைக்கலாம்,​​ சமாளிக்கலாம்,​​ தாங்கிக் கொள்ளலாம்.​ அப்படி ஒருவர் தனக்கு மன அழுத்தமே வருவதில்லை என்று கூறினால் அவர் சமூக ஒட்டுதலில் இல்லை எனக் கூறலாம்.
அப்படியென்றால் மன அழுத்தத்தை எப்படி குறைப்பது?​​
ஆழ்​ம​னதில் உள்ள தவறான கருத்துக்களையும் அவற்றால் நாம் உலகைப் பார்க்கும் கோணத்தில் ஏற்படும் விகாரங்களையும் அறிந்து கொண்டால் மன அழுத்தத்தைக் குறைக்கலாம்.
​ ​ நகைச் சுவை மன உளைச்சலைப் போக்கும் அரு மருந்து.​ அதனால்தான் வள்ளுவரே இடுக்கண் வருங்கால் நகுக என்றார்.​ ​ கடினமான சூழ்நிலையை நகைச்சுவை தலைகீழாக மாற்றிவிடும்.​ இதனால்தான் இன்று பல நகரங்களில் நகைச்சுவை மன்றங்களை ஏற்படுத்தியுள்ளனர்.
​ ​ நமக்கு நெருக்கமானவர்களிடம்,​​ நம்மை புரிந்து கொள்பவர்களிடம் மனம் விட்டுப் பேசி நமது மனப்பாரத்தை இறக்கிவைக்கலாம்.​ பல நேரங்களில் வெடித்து வரும் அழுகை மனப் பாரத்தை கழுவி விடுகிறது.​ ஆழ்ந்த ஓர் அழுகைக்குப்பின் மனம் மழை பெய்த வானம் போல தெளிவாகவும்,​​ லேசாகவும் மாறிவிடுகிறது.
​ ​ யோகா உடற்பயிற்சி,​​ ஆழ்மன தியானம்,​​ உடல் தளர்வுப் பயிற்சிகள்,​​ சாதாரண உடற்பயிற்சி ஆகியவற்றை தினசரி வாழ்வில் கடைப்பிடிக்கும் போதும் நம் மன உளைச்சல் குறைகிறது.
​ ​ ​ சுருங்கச் சொல்வதானால் நேர்மையாக,​​ அடுத்தவரின் உணர்வுகளை மதிப்பவராக,​​ நல்ல பழக்க வழக்கங்கள் ​ உடையவராக,​​ எதையும் ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவம் உள்ளவராக,​​ தமது எல்லைகளை அறிந்தவராக,​​ நிதானமானவராக,​​ உணர்ச்சிவசப்படாதவராக இருக்கும்பட்சத்தில் நமக்கு ஏற்படும் மன உளைச்சலை எளிதில் சமாளித்து இனிதான வாழ்க்கையை அமைத்துக் கொள்ள இயலும்.
 
Thanks :- கதிர்

10/03/2010

ஜென் கதைகள்

ஒரு அரசன் தன நான்கு முக்கிய அமைச்சர்களைக் கூப்பிட்டு அவர்களில் ஒருவரை முதல் அமைச்சராக நியமிக்கவிருப்பதாகவும் அதற்கு அவர் வைக்கும் தேர்வில் தேற வேண்டும் என்றும் கூறினார்.தேர்வு இதுதான் கணித முறையில் அமைக்கப்பட்ட ஒரு பூட்டை யார் விரைவில் திறக்கிறார்களோ அவரே வெற்றியாளர்.மூன்று அமைச்சர்கள் அன்று இரவு முழுவதும் கணிதம்பற்றிய பல புத்தகங்களைப் படித்துக் கொண்டிருந்தனர்.ஒருவர் மட்டும் நிம்மதியாகத் தூங்கிவிட்டார்.மறுநாள் காலை அரசவையில் பூட்டு கொண்டு வரப்பட்டது.பூட்டின் அமைப்பு எல்லோருடைய படபடப்பையும் அதிகரித்தது.ஓலைச்சுவடிகளைக் கொண்டு வந்திருந்த மூன்று அமைச்சர்கள் அவற்றை முன்னும் பின்னும் புரட்டிப் பார்த்தார்கள்.ஆனால் அப்பூட்டைத் திறக்கும் வழி அவர்களுக்குத் தெரியவில்லை.இரவில் நன்கு தூங்கிய அமைச்ச மெதுவாக எழுந்து வந்து பூட்டை நன்கு ஆராய்ந்தார்.கூர்ந்து கவனித்ததில் பூட்டு பூட்டப்படவே இல்லை  என்பது அவருக்குப் புலனாயிற்று.சாவியே இல்லாமல் எந்த கணித சூத்திரமும் இல்லாமல் பூட்டை எளிதாக அவர் திறக்க, மன்னர் அவரையே முதல் அமைச்சர் ஆக்கினார்.
பிரச்சினையைத் தீர்க்க வேண்டுமானால்,முதலில் பிரச்சினை என்னவென்பதை நன்கு புரிந்து கொள்ள வேண்டும்.பிரச்சினையைப் புரிந்து கொள்ள, மனம் சமன் நிலையில் இருக்க வேண்டும்.

                                                      ************************
புத்த மத வேதங்களிலுள்ள கருத்துக்களைக் கொண்டு வரையப்பட்டஓவியம்  ஒன்றை ஒரு புத்த சந்நியாசி எரித்துக் கொண்டிருந்தார்.அதைப் பார்த்த ஒரு சீடர் அவரிடம் கேட்டார்,'குருவே,என்னே காரியம் செய்கிறீர்கள்?இந்த வேதன்களைத்தானே எப்போதும் எங்களுக்கு பாடமாகச் சொல்லிக் கொடுத்துக் கொண்டிருந்தீர்கள்.அவைதான் வாழ்வைப் பிரதிபலிப்பவை என்று  கூறினீர்கள்?இப்பொது மட்டும் ஏன் அதை எரிக்கிறீர்கள்?'குரு சிரித்துக்கொண்டே சொன்னார்,''நான் வீட்டை அடைந்துவிட்டேன்.இனி எனக்கு வரைபடம் தேவையில்லை.''ஞானம் அடைந்தவர்களுக்கு எந்த வேதமும் தேவையில்லை.

10/02/2010

Life and Yoga - Sri Aurobindo

There are two necessities of Nature's workings which seem always to intervene in the greater forms of human activity, whether they belong to our ordinary fields of movement or seek those exceptional spheres and fulfilments which appear to us high and divine. Every such form tends towards a harmonised complexity and totality which again breaks apart into various channels of special effort and tendency, only to unite once more in a larger and more puissant synthesis. Secondly, development into forms is an imperative rule of effective manifestation; yet all truth and practice too strictly formulated becomes old and loses much, if not all, of its virtue; it must be constantly renovated by fresh streams of the spirit revivifying the dead or dying vehicle and changing it, if it is to acquire a new life. To be perpetually reborn is the condition of a material immortality. We are in an age, full of the throes of travail, when all forms of thought and activity that have in themselves any strong power of utility or any secret virtue of persistence are being subjected to a supreme test and given their opportunity of rebirth. The world to-day presents the aspect of a huge cauldron of Medea in which all things are being cast, shredded into pieces, experimented on, combined and recombined either to perish and provide the scattered material of new forms or to emerge rejuvenated and changed for a fresh term of existence. Indian Yoga, in its essence a special action or formulation of certain great powers of Nature, itself specialised, divided and variously formulated, is potentially one of these dynamic elements of the future life of humanity. The child of immemorial ages, preserved by its vitality and truth into our modern times, it is now emerging from the secret schools and ascetic retreats in which it had taken refuge and is seeking its place in the future sum of living human powers and utilities. But it has first to rediscover itself, bring to the surface the profoundest reason of its being in that general truth and that unceasing aim of Nature which it represents, and find by virtue of this new self-knowledge and self-appreciation its own recovered and larger synthesis. Reorganising itself, it will enter more easily and powerfully into the reorganised life of the race which its processes claim to lead within into the most secret penetralia and upward to the highest altitudes of its own existence and personality.
     In the right view both of life and of Yoga all life is either consciously or subconsciously a Yoga. For we mean by this term a methodised effort towards self-perfection by the expression of the potentialities latent in the being and a union of the human individual with the universal and transcendent Existence we see partially expressed in man and in the Cosmos. But all life, when we look behind its appearances, is a vast Yoga of Nature attempting to realise her perfection in an ever increasing expression of her potentialities and to unite herself with her own divine reality. In man, her thinker, she for the first time upon this Earth devises self-conscious means and willed arrangements of activity by which this great purpose may be more swiftly arid puissantly attained. Yoga, as Swami Vivekananda has said, may be regarded as a means of compressing one's evolution into a single life or a few years or even a few months of bodily existence. A given system of Yoga, then, can be no more than a selection or a compression, into narrower but more energetic forms of intensity, of the general methods which are already being used loosely, largely, in a leisurely movement, with a profuser apparent waste of material and energy but with a more complete combination by the great Mother in her vast upward labour. It is this view of Yoga that can alone form the basis for a sound and rational synthesis of Yogic methods. For then Yoga ceases to appear something mystic and abnormal which has no relation to the ordinary processes of the World-Energy or the purpose she keeps in view in her two great movements of subjective and objective self-fulfilment; it reveals itself rather as an intense and exceptional use of powers that she has already manifested or is progressively organising in her less exalted but more general operations.
     Yogic methods have something of the same relation to the customary psychological workings of man as has the scientific handling of the natural force of electricity or of steam to the normal operations of steam and of electricity. And they, too, are formed upon a knowledge developed and confirmed by regular experiment, practical analysis and constant result. All Rajayoga, for instance, depends oil this perception and experience that our inner elements, combinations, functions, forces, can be separated or dissolved, can be new-combined and set to novel and formerly impossible workings or can be transformed and resolved into a new general synthesis by fixed internal processes. Hathayoga similarly depends on this perception and experience that the vital forces and functions to which our life is normally subjected and whose ordinary operations seem set and indispensable, can be mastered and the operations changed or suspended with results that would otherwise be impossible and that seem miraculous to those who have not seized the rationale of their process. And if in some other of its forms this character of Yoga is less apparent, because they are more intuitive and less mechanical, nearer, like the Yoga of Devotion, to a supernal ecstasy or, like the Yoga of Knowledge, to a supernal infinity of consciousness and being, yet they too start from the use of some principal faculty in us by ways and for ends not contemplated in its everyday spontaneous workings. All methods grouped under the common name of Yoga are special psychological processes founded oil a fixed truth of Nature and developing, out of normal functions, powers and results which were always latent but which her ordinary movements do not easily or do not often manifest.
     But as in physical knowledge the multiplication of scientific processes has its disadvantages, as that tends, for instance, to develop a victorious artificiality which overwhelms our natural human life under a load of machinery and to purchase certain forms of freedom and mastery at the price of an increased servitude, so the preoccupation with Yogic processes and their exceptional results may have its disadvantages and losses. The Yogin tends to draw away from the common existence and lose his hold upon it; he tends to purchase wealth of spirit by an impoverishment of his human activities, the inner freedom by an outer death. If he gains God, he loses life, or if he turns his efforts outward to conquer life, he is in danger of losing God. Therefore we see in India that a sharp incompatibility has been created between life in the world and spiritual growth and perfection, and although the tradition and ideal of a victorious harmony between the inner attraction and the outer demand remains, it is little exemplified. In fact, when a man turns his vision and energy inward and enters on the path of Yoga, he is supposed to be lost inevitably to the great stream of our collective existence and the secular effort of humanity. So strongly has the idea prevailed, so much has it been emphasized by prevalent philosophies and religions that to escape from life is now commonly considered as not only the necessary condition, but the general object of Yoga. No synthesis of Yoga can be satisfying which does not, in its aim, reunite God and Nature in a liberated and perfected human life or, in its method, not only permit but favour the harmony of our inner and outer activities and experiences in the divine consummation of both. For man is precisely that term and symbol of a higher Existence descended into the material world in which it is possible for the lower to transfigure itself and put on the nature of the higher and the higher to reveal itself in the forms of the lower. To avoid the life which is given him for the realisation of that possibility, can never be either the indispensable condition or the whole and ultimate object of his supreme endeavour or of his most powerful means of self-fulfilment. It can only be a temporary necessity under certain conditions or a specialised extreme effort imposed on the individual so as to prepare a greater general possibility for the race. The true and full object and utility of Yoga can only be accomplished when the conscious Yoga in man becomes, like the subconscious Yoga in Nature, outwardly conterminous with life itself and we can once more, looking out both on the path and the achievement, say in a more perfect and luminous sense: "All life is Yoga."
 - Life and Yoga  - Sri Aurobindo

10/01/2010

ஜென் கதைகள்

போர்வீரன் ஒருவன் ஜென் குருவை அணுகிக் கேட்டான். "ஐயா, சொர்க்கம் அல்லது நரகம் என்று உண்மையிலேயே ஏதாவது இருக்கிறதா?'' அவனுடைய கேள்விக்குப் பதில் சொல்லாமல் அவனைப் பார்த்துக் கேட்டார் குரு-
"நீ உண்மையிலேயே ஒரு போர்வீரனா? பார்த்தால் பிச்சைக்காரன் போல இருக்கிறாய். உன்னைத் தன் படைவீரனாக நியமித்திருக்கும் உன்னுடைய அரசன் எப்பேர்ப்பட்ட பிச்சைக்காரனாக இருப்பான்?''
போர்வீரன் கடுங்கோபத்துடன் வாளை உறையில் இருந்து உருவத் துவங்கினான்.
ஓஹோ. வாளை வைத்திருக்கிறாயோ? அதற்கு என் தலையை சீவும் வல்லமை இருக்கிறதா என்று கேட்டார் குரு. அவன் ஏறத்தாழ அவர் தலையை சீவத் தயார் ஆனான். அவன் கையைப் பிடித்து நிறுத்தி குரு சொன்னார்
"இப்போது நரகத்தின் கதவுகள் திறக்கின்றன''
அவன் ஒருவாறு சமாளித்து தலைகுனிந்து வெட்கி அவரை வணங்கி நின்றான். குரு சொன்னார்-
"இப்போது சொர்க்கத்தின் கதவுகள் திறந்து விட்டன''.
                                      ********************
 புத்தரின் தலைமை மடாலயத்தில் நிகழ்ந்த சுவையான சம்பவம். அடிப்படை சந்நியாஸப் பயிற்சியை வெற்றிகரமாக முடித்த சந்நியாஸிகள், தியானத்தை மக்களுக்குக் கற்றுத்தந்து, மக்கள் முன்னேற்றம் பெறுவதற்காக நாடு முழுவதும் சேவைக்காக புறப்படும் நேரம் வந்தது. அதில் பூர்ணகாஷ்யபா எனும் சந்நியாஸிக்கு மட்டும் எங்கு செல்வது என்று சொல்லப்படவில்லை.
பூர்ணகாஷ்யபா நேரடியாய் புத்தரிடமே சென்று கேட்டார், “”நான் எங்கு செல்லட்டும்?”
புத்தர் சிரித்தபடி சொன்னார், “”நீயே தேர்வு செய்யப்பா.” இந்தியாவின் ஒரு குறிப்பிட்ட பகுதிக்கு தான் செல்ல விரும்புவதாக சொன்னார். சீடனைப் பார்த்து மிகவும் ஆச்சரியப்பட்டவராய் புத்தர் கேட்டார், “”அந்தப் பகுதிக்கா? அங்கே வாழும் மனிதர்கள் மிகவும் முரடர்கள். சின்ன சின்ன பிரச்னைக்கெல்லாம் அடிதடி சண்டையில் இறங்குபவர்கள், கொஞ்சம் கூட பக்தியோ, தியான உணர்வோ இல்லாதவர்கள். இப்படி பொல்லாதவர்களிடமா போக விரும்புகிறாய்?”

“ஆமாம்” என்று தைரியத்தோடு சொன்ன சீடனிடம் புத்தர் சொன்னார்…
“உன்னிடம் மூன்று கேள்விகளை கேட்க விரும்புகின்றேன். இந்த மூன்று கேள்விக்கும் சரியான பதில் சொல்லிவிட்டால் நீ போகலாம்.”
“ம்…”
“முதல் கேள்வி, அங்கே சென்ற பிறகு உன்னை வரவேற்பதற்கு பதில் அவமானப்படுத்தினால் என்ன செய்வாய்?”

“ரொம்ப ஆனந்தப்படுவேன். ஏனென்றால், அவர்கள் என்னை அடிக்கவில்லை; உதைக்கவில்லை.
திட்டுவதோடு நிறுத்திக் கொண்டார்களே; மிகவும் நல்லவர்கள்… என்று நன்றி சொல்வேன்.”
“இரண்டாவது கேள்வி. ஒருவேளை திட்டாமல் அடித்து உதைத்தால் என்ன செய்வாய்?”
“அவர்கள் மிகவும் நல்லவர்கள். அதனால்தான் என்னைக் கொல்லாமல் விட்டுவிட்டார்கள். வெறுமனே அடித்ததோடு நிறுத்திக் கொண்டார்களே! என ஆனந்தப்படுவேன்.”

“மூன்றாவது கேள்வி. ஒருவேளை உன்னைக் கொன்றுவிட்டால் என்ன செய்வாய்?”
“ஆஹா இன்னும் ஆனந்தப்படுவேன். மொத்தமாக இந்த வாழ்க்கையில் இருந்தே எனக்கு சுதந்திரம் தந்துவிட்டார்கள். இனி எதைப் பற்றியும் கவலைப்பட வேண்டிய அவசியமே இல்லை என்று மிகவும் ஆனந்தப்படுவேன்” என்று சொன்னதும்,

“நன்றாக தேறிவிட்டாய். அங்கு மட்டுமல்ல எங்கு சென்றாலும் நீ வாழ்ந்து விடுவாய். எதனாலும் இனி உன்னை வீழ்த்தமுடியாது. எப்போதும் ஆனந்தமாயிருக்க பக்குவப்பட்டுவிட்டாய். எங்கு சென்றாலும் நல்லாயிருப்பாயப்பா. போய் வா” என்று ஆசிர்வதித்து அனுப்பினார் புத்தர்.

எந்தச் சூழலையும் ஆனந்தமாக அணுகக் கற்றுக் கொண்டால், எந்த சூழலையும் ஆனந்தமயமாக்கிட முடியும். இல்லாவிட்டால் ஆனந்தமயமான சூழல்கள் வாய்த்தால்கூட, அதிலும் ஏதாவது துக்கம் இருந்து கொண்டே இருக்கும்.
தொகுப்பு :- Sarathi, Saudi

9/30/2010

வெற்றியின் ரகசியம் ( sucess )

ஓர் இளைஞன் சாக்ரடீஸிடம் வந்து வெற்றிக்கான இரகசியத்தைப் பற்றிக் கேட்டான்.

அதற்கு சாக்ரடீஸ் மறுநாள் காலை ஆற்றங்கரைக்கு வருமாறு கேட்டுக் கொண்டார்.

மறுநாள் காலை ஆற்றங்கரையில் இருவரும் சந்தித்துக் கொண்டனர்.

சாக்ரடீஸ் அந்த இளைஞனை ஆற்றை நோக்கி உள்ளே வரும்படி கேட்டுக் கொண்டார்.

கழுத்தளவு நீர் வரை உள்ளே வந்தவுடன் அந்த இளைஞனை நீரினுள் வைத்து அமுக்கினார்.

அவன் வெளியே வர முயற்சி செய்தான்.

ஆனாலும் அவனை அப்படியே அமுக்கியவாறு அவனது முகம் நீல நிறமாக மாறும் வரை வைத்திருந்தார்.

சற்றுப் பொறுத்து அவனது தலையை நீரினுள்ளிருந்து வெளியே இழுத்தவுடன் அந்த இளைஞன் செய்த முதல் வேலையே தன்னால் இயன்ற அளவு காற்றை மீண்டும் மீண்டும் உள்ளிழுத்தான்.

சாக்ரடீஸ் அவனிடம் “நீ நீருக்குள் இருந்த போது நீ எதை அதிகம் விரும்பினாய்?” என்று கேட்டார்.

அந்த இளைஞன் “காற்று” என்று பதிலளித்தான்.

சாக்ரடீஸ், “வெற்றியின் இரகசியமே அது தான் .நீ எவ்வளவு அதிகமாக காற்றை விரும்பினாயோ அது போன்றே வெற்றியையும் விரும்பினால் உனக்கு அது கிட்டும்” என்று சொன்னார்.

இதைத் தவிர வேறு எந்த ரகசியமும் இல்லை.

தொகுப்பு :- Sarathi

9/28/2010

நவராத்திரி

ஒரு மனிதனிற்கு உடல்வலிமை, பராக்கிரம், மனோதிடம், புத்திபலம், தீர்க்காயுள், ஞானம் தேவகளிற்கு பணம் போன்ற அனைத்து அம்சமும் நிறைந்திருந்தால் தான் அவன் சிறந்த வெற்றியாளனாக திகழ முடியும். அதாவது வீரம், செல்வம், கல்வி ஆகியவை இனைத்தும் நிறைந்திருக்க வேண்டும். இவற்றை பெறுவதற்காகவே நவராத்திரி விரதம் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. நவ என்ற சொல்லிற்கு ஒன்பது, புதியது என்ற இரண்டு அர்த்தங்கள் உள்ளன. இங்கு ஒன்பது ராத்திரிகள் என்பதே நவராத்திரி எனபபபடுகிறது. ஒன்பது ராத்திரிகள் சக்தியை நோன்பு நோற்று வழிபட்டு 10ம் நாள் நோன்பை நிறைவு செய்ய வேண்டும். உத்தராயண காலமான தை முதல் ஆனி வரையிலான காலத்தின் நடுவில் வருவது வசந்த ருது -- சித்திரை, தட்சிணாயண காலமான ஆடி முதல் மார்கழி வரையிலான காலத்தின் நடுப்பகுதியான சரத் ருது -- புரட்டாசி. இவ்விரு பருவ காலங்களும் எமனின் கோரைப்பற்களைக் குறிக்கின்றன. இக்காலங்கள் பொதுவாக மனிதரிற்கு தீமை விளைவிக்கும் காலங்களாகும். இதனால் தான் இக் காலங்களில் திருமணம் போன்ற சுப காரியங்கள் நடத்தப்படுவதில்லை. இந்த ஒன்பது நாட்களும் முப்பெரும் தேவியரான மலைமகள் (துர்க்கை), அலைமகள் (மகாலட்சுமி), கலைமகள் (சரசுவதி) ஆகியோரிற்கு மும்மூன்று நாடகளாக வழிபடும் ஒரு முறையும் உள்ளது. மற்றும் ஒன்பது சக்தியிரை ஒன்பது நாட்கள் வழிபடும் முறையம் உள்ளது. ஈழம் போன்ற நாடுகளில் முதல் முறையே கடைப்பிடிக்கப்படுகிறது. பண்டைய காலத்தில் மன்னர்கள் மற்றும் படைவீரர்கள் ஒன்பது நாட்களும் தங்கள் ஆயுதங்களை (போர்க் கருவிகளை) பூசையில் வைத்து பத்தாம் நாள் விஜய தசமியன்று விழா எடுத்து தமது வெற்றிக்கு தமது ஆயுதங்களிற்கு சிறப்பு சக்தி கிடைக்க வேண்டும் என வழிபட்டு வந்தனர். இதற்கு சான்று கிருஷ்ண அவதாரத்தில் கம்சனின் படலத்தில் காணப்படுகிறது. நவராத்திரி கொலு வைக்கும் முறையையும், ஒன்புது தேவியரின் வழிபாட்டு முறையையும் இனிப்பார்ப்போம்
நவராத்திரி கொலு
                      நவராத்திரியின் சிறப்பு அம்சம் கொலு வைப்பதேயாகும். கொலு என்பது பல படிகளை கொண்ட மேடையில் பலவித பொம்மைகளை நேர்த்தியாக அலங்கரித்து வைப்பதேயாகும். ஐம்பூதங்களில் ஒன்றான மண்ணினால் செய்யப்பட்ட பொம்மைகளை சக்தியின் அம்சங்களாக எண்ணி நவராத்திரியில் பூசிப்பவர்களிற்கு சகல நலங்களையும் தருவேன் என்று அம்பிகையே கூறியிருக்கின்றா. இனி நவராத்திரி கொலு எப்படி அமைக்கவேண்டும் என்று பார்ப்போம். கொலுமேடை 9 படிகள் கொண்டதாக இருக்கவேண்டும்.

    1. முதலாம் படி :-
                     ஓரறிவு உயிர்களான புல், செடி, கொடி போன்ற தாவர                       வர்கங்களின் பொம்மைகள்.
    2. இரண்டாம் படி:-
                     ஈரறிவு கொண்ட நத்தை, சங்கு போன்ற பொம்மைகள்.
    3. மூன்றாம் படி :-
                    மூன்றறிவு உயிர்களான கறையான், எறும்பு போன்றவற்றின் பொம்மைகள்.                                
    4. நாலாம்படி :-
                    நான்கறிவு உயிர்களை விளக்கும் நண்டு,வண்டு  போன்றவற்றின் பொம்மைகள்.
    5. ஐந்தாம்படி :-
                   ஐந்தறிவு உள்ள மிருகங்கள், பறவைகள் ஆகியவற்றின் பொம்மைகள
  
6. ஆறாம்படி :-
                   ஆறறிவு மனிதர்கள் பொம்மைகள்.
   7. ஏழாம்படி :-
                   மனித நிலையிலிருந்து உயர் நிலையை அடைந்த    சித்தர்கள், ரிசிகள், மகரிசிகள் (ரமணர், வள்ளலார்) போன்றோரின் பொம்மைகள்.    8. எட்டாம்படி :-
                  தேவர்கள், அட்டதிக்பாலர்கள், நவக்கிரக அதிபதிகள் போன்ற தெய்வங்கள் தேவதைகள் போன்றோரின் பொம்மைகள்.
  
9. ஒன்பதாம்படி :-
                   பிரம்மா, விட்ணு, சிவன் ஆகியோர் அவர்களின் தேவியருடன் நடுநாயகமாக ஆதிசக்தி வைக்கவேண்டும்.
 
மனிதன் படிப்படியாக உயர்ந்து தெய்வ நிலையை அடைய வேண்டும் என்பதற்காகவே இப்படி கொலு அமைப்பது வழக்கம்.

                       
நவராத்திரி வழிபாட்டு முறை.
1. முதலாம் நாள் :-
          
சக்தித்தாயை முதல்நாளில் சாமுண்டியாக கருதி வழிபடவேண்டும். தெத்துப்பல் திருவாயும், முண்டமாலையும் அணிந்தவள். முண்டன் என்ற அசுரனை சம்ஹாரம் செய்த சக்தி அவள். இதனால் சாமுண்டா எனவும் அழைப்பர். இவள் மிகவும் கோபக்காரி. நீதியைக்காக்கவே இவள் கோபமாக உள்ளாள்.
             முதல்நாள் நைவேத்தியம் :-சர்க்கரைப் பொங்கல்.
2. இரண்டாம் நாள் :-
             இரண்டாம் நாளில் அன்னையை வராஹி தேவியாக கருதி வழிபட வேண்டும். வராஹ(பன்றி) முகமும் தெத்துபற்களும் உடையவள். சூலமும் உலக்கையும் ஆயுதங்கள் ஆகும். பெரிய சக்கரத்தை தாங்கியிருப்பவள். தனது தெத்து பற்களால் பூமியை தூக்கியிருப்பவள். இவளிற்கு மங்கள மய நாராயணி, தண்டினி, பகளாமுகி போன்ற திருநாமங்களும் உண்டு. இவள் அன்னையின் சேனாதிபதி ஆவாள்.
             இரண்டாம் நாள் நைவேத்தியம் :- தயிர்ச்சாதம்.
3. மூன்றாம் நாள் :-
             மூன்றாம் நாளில் சக்தித்தாயை இந்திராணியாக வழிபடவேண்டும். இவளை மாஹேந்தரி, சாம்ராஜ தாயினி என்றும் அழைப்பர். இவள் இந்திரனின் சக்தி ஆவாள். கிரீடம் தரித்து வஜ்ராயுதம் ஏந்தியவள். ஆயிரம் கண்ணுடையவள். யானை வாகனம் கொண்டவள். விருத்திராசுரனை
அழித்தவள். தேவலோகத்தை பரிபாலனம் செயபவளும் இவளேயாகும். பெரிய பெரிய பதவிகளை அடையவிரும்புபவர்களிற்கு இவளின் அருட்பார்வை வேண்டும்.
            மூன்றாம் நாள் நைவேத்தியம் :- வெண்பொங்கல்.
4. நான்காம் நாள் :-
           
சக்தித்தாயை இன்று வை~;ணவி தேவியாக வழிபடவேண்டும். சங்கு, சக்கரம், கதை, வில் ஆகியவற்றை கொண்டிருப்பவள். தீயவற்றை சம்ஹரிப்பவள். இவளின் வாகனம் கருடன்.
         
  நான்காம் நாள் நைவேத்தியம் :- எலுமிச்சை சாதம்.5. ஐந்தாம் நாள் :-
           
ஐந்தாம் நாளில் அன்னையை மகேஸ்வரி தேவியாக வழிபட வேண்டும். அன்னை மகேஸ்வரனின் சக்தியாவாள். திரிசூலம், பிறைச்சந்திரன், பாம்பு தரித்து இடப வாகனத்தில் எழுந்தருளியிருப்பவள். அளக்கமுடியாத பெரும் சரீரம் உடையவள். சர்வ மங்களம் தருபவள். தர்மத்தின் திருவுருவம். கடின உழைப்பாளிகள் உழைப்பின் முழுப்பலனை பெற அன்னையின் அருள் அவசியம் வேண்டும்.
           
ஐந்தாம் நாள் நைவேத்தியம் :- புளியோதரை.6. ஆறாம் நாள் :-

           
இன்று அன்னையை கவுமாரி தேவியாக வழிபடவேண்டும். மயில் வாகனமும் சேவல் கொடியும் உடையவள். தேவசேனாதிபதியான முருகனின் வீரத்திற்கு ஆதாரமானவள். ஓங்கார சொரூபமானவள். சகல பாவங்களையும் விலக்கிடுபவள். வீரத்தை தருபவள்.
        
ஐந்தாம் நாளநைவேத்தியம் :- தேங்காய்ச்சாதம்.7. ஏழாம் நாள் :-
        
ஏழாம்நாள் அன்னையை மகாலட்சுமியாக வழிபடவேண்டும். கையில் ஜெபமாலை, கோடரி, கதை, அம்பு வில், கத்தி, கேடயம், சூலம், பாசம், தண்டாயுதம், சக்தி ஆயுதம், வஜ்ராயுதம், சங்கு, சக்கரம், மணி, மதுக்கலயம், தாமரை, கமண்டலம் ஆகியவற்றைக் கொண்டிருப்பவள். வீ~;ணு பத்தினியாவாள். பவளம் போன்ற சிவந்த நிறத்தையுடையவள். தாமரை ஆசனத்தில் அமர்ந்து சகல ஐசவரியங்களையும் தருபவள் அன்னையாகும்.
           ஏழாம் நாள் நைவேத்தியம் :- கல்க்கண்டுச் சாதம்.8. எட்டாம் நாள் :-
          
இன்று அன்னையை நரசிம்ஹி ஆக வழிபடவேண்டும். மனித உடலும், சிம்ம தலையும் உடையவள். கூரிய நகங்களுடன் சங்கு, சக்கர தாரிணியாக சிம்ம வாகனத்தில் காட்சி தருபவள். சத்ருக்கள் தொல்லையில் இருந்து விடுபட அன்னையின் அருள்வேண்டும்.
        
எட்டாம் நாள் நைவேத்தியம் :- சர்க்கரைப் பொங்கல்.
9. ஒன்பதாம் நாள் :-
          
இன்று அன்னையை ப்ராஹ்மி ஆக வழிபடவேண்டும். அன்ன வாகனத்தில் இருப்பவள். வாக்கிற்கு அதிபதியாவாள். ஞானசொரூபமானவள். கல்விச்செல்வம் பெற அன்னையின் அருள் அவசியமாகும்.
         ஒன்பதாம் நாள் நைவேத்தியம் :- அக்கர வடசல்.
SARATHI, SAUDI ARABIA.

9/27/2010

365 நாளும் வாழ வழி

வருடத்தில் 365 நாளும் வாழ வழி (HOW TO LIVE 365 DAYS A YEAR) என்ற தனது புத்தகத்தில் பிரபல அறிஞர் ஜான் ஏ. ஷிண்ட்லர் "உணர்ச்சிகளால் தூண்டப்படும் நோய்களை அறவே விரட்ட வேண்டும்" என்று அறிவுரை பகர்கிறார்.

சீரான வாழ்க்கை அமைந்திருந்தால் அதைத் தொடர்ந்து அனுபவியுங்கள். கரடுமுரடான வாழ்க்கை நிலை ஏற்பட்டால் நான்கு வழிகளை மனதில் கொள்ளுங்கள் என்று கூறும் அவர் நான்கு வழிகளை முறைப்படுத்தி கூறுகிறார்.

1. முதலில் எவ்வளவு மோசமான நிலையாக இருந்தாலும் வெளிப்படையாக அமைதியுடன் இருங்கள். முடிந்தால் நகைச்சுவையுடன் நிலைமையை எதிர் கொள்ளுங்கள் (இடுக்கண் வருங்கால் நகுக)

2. சினிமா பிலிம் போல உங்களுக்கு நேர்ந்த அவல நிலையை திருப்பித் திருப்பி மனத்திரையில் ஓட்டிப் பார்க்காதீர்கள். தன்னிரக்கப்படவே கூடாது.

3. தோல்வியை எப்படி வெற்றியாக மாற்ற முடியும் என்று பாருங்கள். சமநிலை, தைரியம், மகிழ்ச்சி போன்ற பண்புகளால் உங்கள் தோல்வியை சமாளித்த நீங்கள் வெற்றி பெறும் நிலையை பார்த்து அனைவரும் வியப்படைவர்.

4. கீழ்க்கண்ட கொடிகளை உங்கள் மனம் என்னும் கோட்டையில் பறக்க விடுங்கள்.

சமநிலை: (அமைதியுடன் இருப்பேன்)

வருவது வரட்டும்: (இந்த தற்காலிக சரிவை ஏற்றுக் கொள்வேன்)

தைரியம்: (இது மட்டுமல்ல; இனிவரும் தோல்விக்கும் தயார்)

மலர்ச்சி: (இந்த தோல்வியை வெற்றியாக மாற்றியே தீருவேன்)

மகிழ்ச்சி: (இன்னும் நல்ல முறையில் எல்லா மனிதரையும் அணுகுவேன்)
  
நன்றி:- ச.நாகராஜன், Nilacharal.

நேர நிர்வாகம் (TIME MANAGEMENT)

குறித்த நேரத்தைக் கடைப்பிடித்தல்

குறித்த நேரத்தைக் கடைப்பிடித்தல் என்பது ஒரு அரிய தேவையான குணமாகும். அதுவும் இந்த எலக்ட்ரானிக் யுகத்தில் தகவல் பரிமாற்றங்கள் மின்னல் வேகத்தில் இண்டர்நெட் மூலமாகவும் பேக்ஸ் மூலமாகவும் பரவும் போது குறித்த நேரம் என்பது மிக்க அர்த்தம் உள்ளதாக ஆகிறது.

போட்டி மயமான உலகில் முந்தியவருக்கே முதலிடம் என்ற நிலையில் குறித்த நேரத்தைக் கடைபிடிக்காதவருக்கு பண இழப்பும் தோல்வியும் தவிர்க்க முடியாததாகி விடுகிறது. வெற்றிகரமான வியாபாரத்தின் ஆத்மாவே குறித்த நேரம் தான் என்பர் அறிஞர்.

நேர நிர்வாகம்

நேரத்தை நிர்வகிப்பது எப்படி (TIME MANAGEMENT) என்பது ஒரு பெரிய நிர்வாக இயலாக மாறி வருகிறது. நமக்கென கிடைக்கும் மாலை நேரங்களை - அதாவது வேலைக்குப் பிறகு உள்ள நேரத்தை எப்படிக் கழிப்பது என்பதை சிந்தனை செய்து வரையறுத்துக் கொள்ளல் இன்றியமையாதது.

1. தனிப்பட்ட நேரம்

அமைதியாக ஒரு இடத்தில் உட்கார்ந்து உள்ளார்ந்த சிந்தனையில் ஈடுபடுவது முழு வாழ்க்கை வாழ்ந்த அளவிற்கான அனுபவத்திற்குச் சமமாகும். நமது உள்ளார்ந்த சக்திகளை, திறமைகளை வெளிப்படுத்த தேவையான முயற்சிகளை பற்றி எண்ணிப் பார்க்க இந்த மாலை நேரம் உதவ முடியும்.

நம்மை பாதிக்கும் விஷயங்களில் எதிர் விளைவுகளைப் பற்றி சிந்தித்து செயலாற்றுவதை விட்டுவிட்டு நாம் முன்னேற உதவும் செயல்களை நினைத்து உந்துதலுடன் செயலாற்ற ஆரம்பிக்க வேண்டும்.

2. மனைவி மக்களுக்காக

மனைவியுடனும், குடும்பத்துடனும் தினமும் சற்று நேரம் செலவழிப்பது, வார இறுதியில் வெளியிடங்களுக்குச் செல்வது - இவையெல்லாம் இன்றியமையாத குடும்பப் பிணைப்பை வலுவுள்ளதாக ஆக்கும்.

3. வேலைக்காக

செய்யும் தொழிலில் திறமைகளை வளர்ப்பதற்காக சிறிது நேரம் ஒதுக்க வேண்டும். எந்த வேலையையும் இன்னும் சற்று சிறப்பாகச் செய்ய வழியுண்டு. அந்த வழியைக் காண நேரம் ஒதுக்க வேண்டும்.

4. உடல் நலம்

காலை, மாலையில் நடைப்பயிற்சி, தினமும் சிறிது தேகப்பயிற்சி இவற்றிற்காக 30 நிமிட நேரம் ஒதுக்குதல் நலம். நல்ல உணவுப் பழக்கம், குறித்த நேரத்தில் சாப்பிடுதல் இவற்றால் ஆரோக்கியம் சீராக இருக்கும்.

5. நிதி நிலை

அன்றாடம் செய்த வரவு செலவுக் கணக்கைச் சரி பார்க்க சிறிது நேரம் ஒதுக்க வேண்டும். வரி செலுத்துதல், பண முதலீடுகளைப் புதுப்பித்தல், பட்ஜெட் திட்டமிடல் இவற்றிற்கு உரிய நேரம் ஒதுக்குதல் வேண்டும்.

6. சமூக உயர்வு

நாம் வாழும் குடியிருப்பை மேம்படுத்த நமக்கு ஒரு கடமை உண்டு. அதற்கு வாரம் சிறிது நேரம் ஒதுக்குவதோடு, ஏழை மக்களின் நிலை உயர்வதற்காக முயற்சி செய்ய சிறிது நேரம் தருவதும் இந்த சமுதாய கடமையில் அடங்கும். இதில் ஏற்படும் ஆத்ம திருப்திக்கு ஈடு இணை இருக்க முடியாது.

7. ஆன்ம வளர்ச்சி

உள்ள வலிமைக்கு ஆன்மீக வளர்ச்சியே அடிப்படை. இறை நம்பிக்கையோடு பிரார்த்தனை, குடும்பத்தார் விரும்பும் சடங்குகள் இவற்றிற்கு உரிய மதிப்பு தருவதோடு தனது ஆத்ம முன்னேற்றத்திற்கும் நேரம் ஒதுக்குதல் இன்றியமையாதது.

இப்படி தனிப்பட்ட நிலை, குடும்பம், சமுதாய வளர்ச்சி ஆகிய அனைத்திற்கும் நேரத்தை ஒரு வெற்றியாளரால் மட்டுமே தர முடியும். வெற்றியாளர்களைக் கூர்ந்து கவனித்தால் நேரத்தை எவ்வளவு கவனமாக பயன்படுத்தி தம் கொள்கையைக் கடைப்பிடித்து குறிக்கோளை நிறைவேற்றுகின்றனர் என்பது புரியும்.

நேர நிர்வாகம் என்பது உண்மையில் சொல்லப் போனால் தன்னைத் தானே நிர்வகிப்பது ஆகும். அது ஒரு சிந்தனை முறை. முக்கியத்திற்கு முதலிடம் கொடுத்து (First Things First) தன்னை ஒழுங்குபடுத்திக் கொள்ளும் வாழ்க்கை முறை!

இன்றே இப்பொழுதே

எல்லையற்ற கால வெள்ளத்தில் "இன்று" என்பது எவ்வளவு முக்கியமானது! நேற்றைய நாள் சென்றது தான்; திரும்பி வராது. நாளைய நாளைப் பற்றி நமக்குத் தெரியாது. ஆனால் இன்றோ கையில் கிடைத்த பொன்; அதை செவ்வனே பயன்படுத்தும் பழக்கத்தினாலேயே வெற்றிப்படிகளில் ஏறி விடலாம்.

9/25/2010

வெற்றிக்கு வேண்டிய தலைமைப் பண்புகள்

ஒரு தலைவர் தொலைநோக்குப்
பார்வையில், திட்டமிடவும்,
தொண்டர்களுக்குத் தன்னம்பிக்கை ஊட்டி
தரமாகச் செயல்படவும், பல்வேறு
குணநலன் கொண்டவர்களை
ஒருங்கிணைத்து, ஆக்கபூர்வமாக
இயங்கிடச் செய்யவும், அவ்வப் போது
ஆய்வு செய்து, அறிக்கைகள் மூலம்
நிவர்த்தி செய்து, வரவு செலவு திட்டத்தில்
தேர்வு பெற்றவராக இருத்தல் வேண்டும்.
நிலைமக்கள் சால உடைத்தெனினும் தானை
தலைமக்கள் இல்வழி இல்”.
நிலைபெற்ற படைவீரர் பலர் இருந்தும், தகுந்த படைத்தலைவர் இல்லாத தானை, இருந்தும் இல்லாதது போல்தான் என படைமாட்சி அதிகாரத்திலே, நம்முடைய தெய்வப்புலவர் மிகத்தெளிவாக, தலைமை குறித்து குறிப்பிடுகிறார்.
ஒரு நிறுவனத்தின் தலைவர், ஒரு பள்ளி யின் தலைமையாசிரியர், ஒரு அரசாங்கத்தின் அமைச்சர், மற்றும் பல்வேறு வகைப்பட்ட மக்களை ஒன்று திரட்டி ஒரு பணியில் ஈடுபடுத்தி வேலை வாங்கும் தலைவர். “இப்படி நடத்து கொண்டால் நல்லது” என்று உடன் வேலைபார்ப்பவர்கள் விரும்புவதை நான் இங்கே சொல்ல வரவில்லை. மாறாக, நீதிநூல்கள், நிர்வாகத்துறை நூல்களை உலக அறிஞர்கள் ஆராய்ந்து அறிந்து, நல்ல முறையில் எப்படி நிர்வாகம் செய்வது என்பதற்குக் கண்ட பல வழிமுறைகளில், ஒரு சிலவற்றை இதன் மூலம் உங்கள் கவனத்திற்கு கொண்டுவருவதே என் நோக்கமாகும்.
“தலைவர்” நடுநிலைக் கொள்கை உடையவராக இருக்க வேண்டும். அப்படி உடன் இருப்பவர்கள் எல்லாரும் உணரும்படி நடந்து கொள்ள வேண்டும். “நியாயமானதைச் செய்வார்” என்ற பெயர் நிலைத்து விட்டால் பின்னர் ஒரு செயலைத் தனக்காக முயன்றும் முடியாமற் போனாலும் கூட அவர் செய்திருப்பார் முறையாக இருந்திருந்தால்” என்று உடன் வேலை செய்வோர் தம்மைத்தாமே சமாதானம் செய்து கொள்வார் களே அன்றிக் குறைகூற மாட்டார்கள்.
ஒரு தலைசிறந்த தலைமைக்கு
தேவையான திறமைகள்
1. திட்டமிடுதல் – Planning
2. வடிவமைத்தல் – Organising
3. நியமித்தல் – Staffing
4. இயக்குதல் – Directing
5. ஒருங்கிணைத்தல் – Co-ordinating
6. அறிக்கை அளித்தல் – Reporting
7. வரவு செலவு திட்டமிடல் – Budgeting
ஒரு தலைமை, வெற்றிகரமான, தீர்க்கதரிசனமான, முடிவை எடுக்க வேண்டிய முக்கியமான குறிப்புகள்:
1. எடுக்கப்போகும் முடிவை குறித்த நோக்கங்கள் தெள்ளத் தெளிவாக இருத்தல் வேண்டும்.
2. முடிவு எடுத்தலுக்கு தேவையான தகவல்கள் மிகச் சரியாகவும், போதுமானவையாகவும் இருக்க வேண்டும்.
3. புதுப்புது மாற்றுத் தீர்வுகளை உருவாக்கத் தயங்கக்கூடாது.
4. எடுக்கப்படும் முடிவு மாற்றம் செய்யக் கூடிய வகையில் அமைதல் வேண்டும்.
5. எந்த பிரச்சனைக்கும் முடிவு காணும் போது அதை செயல்படுத்தும் போது, அதற்கு சம்பந்தப்பட்டவைகளுடன் கலந்தலோசிக்க வேண்டும்.
6. முடிவுகள் முறையாக அறிவிப்பூர்வமாக, தெளிவானதாக, சம்பந்தப்பட்டோர் அனைவருக்கும் புரியுமாறு அறிவிக்க வேண்டும்.
7. தீர்வுகளுக்கு போதிய நேரம் கொடுத்து, காலக்கெடுக்குள் நிறைவேற்றவேண்டும்.
8. முடிவுகள் சரிவர நிறைவேற்றப் படுகின்றதா என்பதைப் பின் தொடர்ந்து பார்க்க வேண்டும்.
தலைமை : வெற்றிகரமான, கமிட்டி அமைப்புக்கான வழிவகைகள்
1. ஒவ்வொரு கமிட்டியின் நோக்கமும் தெளிவாக வரையறுக்கப்படுதல் வேண்டும். இது எழுத்துவடிவில் இருக்க வேண்டியது அவசியம். அப்போதுதான் விவாதம் அர்த்தமுள்ளதாக இருக்கும். காலவிரயம் இருக்காது.
2. கமிட்டியின் அதிகாரவரம்பு நிர்ணயிக்கப் படுதல் இன்றியமையாதது, அதன் அதிகாரம், ஆய்வு செய்வதற்கா, ஆலோசனை வழங்குவதற்கா, பரிந்துரை செய்வதற்கா, அல்லது முடிவு எடுத்து செயல்படுவதற்கா என்பதை முன்னமே தீர்மானிக்க வேண்டும்.
3. கமிட்டி மூன்றுபேர் கொண்டிருந்தால் அதிலே இருவர் சேர்ந்து கொண்டு ஆதிக்கம் செலுத்துவர், மாறாக 10, 15 பேர் கொண்டு அமைத்தால் அது சந்தைக்கடையாகி விடும். வெற்றிகரமான கமிட்டி என்பது ஐந்து நபர்கள் கொண்ட அமைப்பானதாகும்.
4. கமிட்டியின் தலைவர் மிகவும் கவன மாகத் தேர்ந்தெடுக்கப்படுதல் வேண்டும். அவர் தீர்க்கமாகத் திட்டமிட்டு, நிகழ்ச்சிநிரல் தயாரித்து, உரிய காலத்தே, உறுப்பினர்களுக்குப் போதிய தகவல்கள் தந்து, கூட்டத்தை செவ்வனே நடத்தினால், குறைகள் பல களையப் படும். தலைவர்தான் கூட்டத்தின் சுருதியை, சரியாக சேர்க்கவும், விவாதம் தடம்புறளாமல் இருக்கவும், கருத்துக்களை ஒருங்கிணைத்து கொண்டு செல்லவும் முடியும்.
5. தலைவர் போன்றே கமிட்டி உறுப்பினரும் சரியாகத் தேர்வு செய்ய வேண்டும். ஏன் என்றால், வெற்றி அவர்களின் தகுதி, திறமை, நேர்மையை பொறுத்தே அமைகிறது. அவர்களுக்கு, கருத்து சமரசம் செய்து கொள்ளாமல், தீர்மானிக்க உதவும். விவேகம் இருத்தல் வேண்டும். பிறர் புரிந்து கொள்ளும்படி பேசும் ஆற்றல் பெற்றிருக்க வேண்டும்.
6. கமிட்டி அமைப்பின், செலவுக்கு ஏற்ற, பயன் இருத்தல் மிக, மிக முக்கியம்.
7. கூட்டம் குறித்த நேரத்தில் தொடங்கி, குறித்த நேரத்தில் முடிதல் வேண்டும். உறுப்பினர்கள் அனைவரும், விவாதத்தில் பங்கெடுத்துக் கொள்ள வேண்டும். மாற்றுக்கருத்துக்கு இடமளித்தல் மிக முக்கியம்.
8. கமிட்டி அமைப்பின் செயல்பாட்டை அவ்வப்பொழுது, மதிப்பீடு செய்தல் வேண்டும். பயனற்ற கமிட்டியை கலைத்து விட தயங்கக்கூடாது. கமிட்டி யின் பரிந்துரைகளும், தீர்மானங்களும் நடை முறைப்படுத்தப்படுகிறதா என கண் காணிக்க வேண்டும்.
9. கமிட்டியின் செயலர், பல்திறன் கொண்டவ ராகவும், நிலையாகப் பணி செய்யக்கூடிய வராகவும், நேர்மையுடையவராகவும், இருப்பது அவசியம். அவரால்தான் கமிட்டி யின் செயல் பாட்டை செவ்வனே கவனிக்க இயலும். கமிட்டிக்கு ஸ்திரத்தன்மையை கொடுப் பதும் அவர்தான்.
ஒரு திறமையான அமைப்புக்கான அடையாளங்கள்
1. சரியான வேலையை, சரியான நபர் கொண்டு, சரியான இடத்திலிருந்து, சரியாகச் செய்வதற்கான, தளத்தையும் களத்தையும், அமைத்துக்கொடுத்தல்.
2. அதிகாரம் பரவலாக்கப் படுவதற்கு சாதகமாக இருத்தல், அதாவது அமைப்பு இயந்திரமாக இயங்காமல், உயிர் துடிப்புள்ள உடல்போல் செயல்படல் வேண்டும்.
3. வள ஆதாரங்களான, மனிதவளம், நிதிவளம், பொருள்வளம், மூலதனவளம், போன்றவை முழுமையாகப் பயன்படுத்து வதற்கு, ஏற்றதாக இருத்தல். நவீன தகவல் தொழில்நுட்பம் பயன்பாடும், மாற்றங் களுக்கு ஏற்ப நெகிழ்ந்து கொடுக்கும்படியும் அமைதல் வேண்டும்.
4. அமைப்பின், அதிகாரமும், கடமையும், பொறுப்பும், சுதந்திரமாகப் பிரயோகிக் கப்படும்போது பணியாளர்களின் படைப்பாற்றல் பன்மடங்கு பெருகும்.
சுருக்கமாகச் சொல்வதென்றால், ஒரு தலைவர் தொலைநோக்குப் பார்வையில், திட்டமிடவும், தொண்டர்களுக்குத் தன்னம் பிக்கை ஊட்டி தரமாகச் செயல்படவும், பல்வேறு குணநலன் கொண்டவர்களை ஒருங்கிணைத்து, ஆக்கபூர்வமாக இயங்கிடச் செய்யவும், அவ்வப் போது ஆய்வு செய்து, அறிக்கைகள் மூலம் நிவர்த்தி செய்து, வரவு செலவு திட்டத்தில் தேர்வு பெற்றவராக இருத்தல் வேண்டும். எல்லாவற்றிக்கும் மேலாக,
நன்றி மறப்பது நன்றன்று நன்றல்லது
அன்றே மறப்பது நன்று!
என்ற வள்ளுவப் பெருந்தகையின், நெறி தவறாதவராக இருப்பவரே மிகச் சிறந்த தலைவராவர்.

நன்றி:-  ஏ.ஜி. மாரிமுத்துராஜ், தன்னம்பிக்கை.