8/31/2010

ஜென் தியானம்

ஜென் பௌத்தம் ஒருவனை உள்நோக்கிப் பயணம் செய்யச் சொல்கிறது. உள்ளே நடக்கும் அனைத்திற்கும் ஒரு பார்வையாளனாக இருக்க வலியுறுத்துகிறது. எண்ணங்களை எந்த விதமானமான தணிக்கைகளும், தீர்ப்புகளும் இன்றி கவனிப்பது முக்கியம்.




இனி இந்த எளிய தியான முறைக்குச் செல்லலாம்.



1) அமைதியான இடத்தில் சௌகரியமாக அமர்ந்து கொள்ளுங்கள்.



2) இயல்பாக மூச்சு விட்டு மூச்சு சீராகும் வரை மூச்சில் கவனம் செலுத்துங்கள்



3) இனி உங்கள் எண்ணங்களை விருப்பு வெறுப்பு இல்லாமல் கண்காணியுங்கள். இந்த எண்ணம் நல்லது, இந்த எண்ணம் கெட்டது என்ற பாகுபாடுகள் வேண்டாம். வெறுமனே கவனியுங்கள். உங்கள் எண்ணங்களுக்கு நீங்கள் பார்வையாளனாக இருங்கள்.



4) கூர்மையாக கவனிக்கப்பட, கவனிக்கப்பட மனதின் எண்ணங்களின் எண்ணிக்கை, வேகம் குறைய ஆரம்பிக்கும். ஒரு பார்வையாளனின் தொடர்ந்த கண்காணிப்பில் எவர் செயல்களும் சற்று குறையவே செய்யும். மனமும் அதற்கு விதிவிலக்கல்ல.



5) ஒரு எண்ணம் மனதில் எழுகிறது. அதைக் கவனிக்கிறீர்கள். இன்னொரு எண்ணம் எழுகிறது. அதையும் கவனிக்கிறீர்கள். எண்ணங்கள் குறையக் குறைய இன்னொரு அழகான அனுபவமும் நிகழும். அது என்ன தெரியுமா? ஒரு எண்ணம் முடிந்து இன்னொரு எண்ணம் எழுவதற்கு இடையே உள்ள இடைவெளி. அதையும் கவனியுங்கள். அந்த இடைவெளியில் தான் மனம் மௌனமாகிறது. அது தான் மனமில்லா நிலை. அது மிக அழகான அனுபவம்.



6) எண்ணம்-இடைவெளி-எண்ணம்-இடைவெளி என ஒவ்வொன்றையும் எந்த விமரிசனமும் இன்றி கவனியுங்கள். ஆரம்பத்தில் சில மைக்ரோ வினாடிகள் தான் அந்த இடைவெளி இருக்கும். உங்கள் தியானம் ஆழமாக ஆழமாக அந்த இடைவெளிகளின் கால அளவும் அதிகரிக்கும். அந்த மனமில்லா நிலை தான் தியானத்தின் உச்சக்கட்டம்.



7) ஆனால் இடைவெளிகளையே அதிகம் நீங்கள் எதிர்பார்த்தால் தோற்றுப் போவீர்கள். ஏனென்றால் இடைவெளியின் மீது உங்களுக்கு விருப்பம் ஏற்பட்டு விட்டது என்றால் விருப்பு வெறுப்பற்ற பார்வையாளனாக இருக்க உங்களுக்கு முடியாது. அது முடியா விட்டால் தியானமும் நிகழாது.



8) எண்ணம் எழுவதைக் கவனிப்பதும் ஒன்று தான். இடைவெளி வருவதைக் கவனிப்பதும் ஒன்று தான் என்கிற சமமான மனோபாவமே இங்கு முக்கியம். சூரிய ஒளியை ரசிக்கிறீர்கள். அடுத்ததாக மேக மூட்டம் வருகிறது. அதையும் ரசிக்கிறீர்கள். இதில் நீங்கள் எதையும் தேர்ந்தெடுப்பதில்லை. நிகழ்வதைக் கவனிக்கும் சம்பந்தமில்லாத பார்வையாளனாக இருக்கிறீர்கள். இது தான் சரியான மனநிலை.



9) தியானம் ஆழப்பட்ட பின் பேரமைதியை நீங்கள் உணர ஆரம்பிப்பீர்கள். விருப்பு வெறுப்பில்லாத அந்த பார்வையாளனின் மனோபாவம் உங்களிடம் உறுதிப்பட ஆரம்பிக்கும். அது தியான சமயங்களில் பூரணமடைந்தால் மற்ற நேரங்களிலும் உங்களிடம் தங்க ஆரம்பிக்கும். தினசரி வாழ்க்கையே தியானம் ஆக ஆரம்பிக்கும். ஆரவாரங்களுக்கு நடுவேயும் நீங்கள் தியான நிலையில் இருக்க முடியும். ஜென் பௌத்தத்தின் குறிக்கோளே அது தான்.

8/22/2010

இடைவிடாத பிரார்த்தனை


பிரார்த்தனை என்பது தெய்வீகம் பொருந்தியது. மனித உழைப்பைப் போற்றாதவர் இல்லை. நட்பில் விஸ்வாசத்தைப் பாராட்டாதவரில்லை. உயர்ந்த ஞாபகசக்தியை அனைவரும் கண்டு வியப்படைவார்கள். உழைப்பு உடலின் முயற்சி; விஸ்வாசம் உணர்வின் நெறி; ஞாபகம் அறிவின் முயற்சி; இவற்றையெல்லாம் கடந்த நிலையிலுள்ளது ஆன்மா. ஆன்மா முயன்று எழுப்பும் குரல் பிரார்த்தனை. இது ஆண்டவனை எட்டும். எட்டிய க்ஷணம் அற்புதம் நிகழும். இடைவிடாத பிரார்த்தனை இறைவன் காதில் தவறாது விழும். மனித வாழ்விலுள்ள எந்தச் சிக்கலையும் அவிழ்க்கும் திறனுடையது இடையறாத பிரார்த்தனை. மூன்று நாட்கள் இடைவிடாமல் பிரார்த்தனை செய்து தீராத பிரச்சினை ஒன்றை இதுவரை நான் கேட்டதில்லை.



அன்னையைப் பற்றி பக்தர்கள் அறிந்தன அநேகம். ஆயிரம் வகைகளில் பக்தனின் துயரைத் தீர்த்தவர் அன்னை. ஆழாக்கு அரிசிகூட வீட்டில் இல்லை என்று அழுது புலம்பியவர் வாழ்வில் அன்னை உதயமாகி, நமக்கில்லை என்று மறந்துவிட்ட பெருஞ்சொத்தை, கைக்கு வந்துவிட்டது என்பதை நிறைவேற்றியவர் அன்னை. கஷ்டம் வந்து கடைசி நிலைக்குப் போனபின், அன்னை அளித்த வாழ்வு பேர்அதிர்ஷ்டமாக அமைந்ததை வர்ணித்தவர், "இதை அன்னையால் மட்டுமே கொடுக்க முடியும் என்பது எனக்குத் தெளிவாக விளங்குகிறது. எனக்குக் கிடைத்த இப்பேறு வேறு எதனாலும் இல்லை. அன்னையால்தான் என்பதை என் நெஞ்சம் உணருகிறது'' என்றார். ஹிருதயம் கோளாறாக இருக்கிறது; ஆப்ரேஷன் செய்துகொள்ள வேண்டும் என்று 70 பவுண்ட் எடையுள்ள 30 வயதுப் பெண்மணிக்குச் சொன்ன டாக்டர், கூடவே "உனக்கு அந்த ஆப்ரேஷனில்லை. எந்த ஆப்ரேஷனும் செய்ய





முடியாது. உடலில் சதையேயில்லை'' என்று அனுப்பிவிட்டார். 300 ரூபாய் சம்பாதிக்கும் அந்தப் பெண்ணுக்கு டாக்டர் சொல்லியதைவிட முக்கியமானது ஆப்ரேஷன் செலவு. அதற்கு வழியில்லை. அன்னை ஸ்தாபனத்தில் வேலை செய்த அந்தப் பெண் பொறுப்போடும், விஸ்வாசத்துடனும் வேலை செய்தவர். அவருக்குப் புதிய நிலை ஏற்பட்டது. டெல்லியிலிருந்து அப்பெண்ணின் ஊருக்கு ஒரு புதிய டாக்டர் இதுபோன்ற சிக்கலான கேஸ்களைப் பரீட்சார்த்தமாக ஆப்ரேஷன் செய்ய வந்தார். அப்பெண்ணுக்கு இலவசமாக ஆப்ரேஷன் செய்தார். ஹிருதயக் கோளாறு நீங்கியது. பின்னர் திருமணமும் ஆயிற்று. சேவையின் உள்ளடங்கிய, செய்யாத பிரார்த்தனையின் பலன் அது. துறைமுகத்தை விட்டுப்போன கப்பல் அன்னைக்குப் பிரார்த்தனை செய்ததால், திரும்பிவந்து அழைத்துப் போனதுண்டு. ஒரு காலனியில் உள்ள எல்லா வீடுகளும் சேதமான நேரத்திலும் அன்னை படம் இரண்டு நாளிருந்த வீடும், அங்குள்ளவர்களும் அந்த அசுரச் சூறாவளியிலிருந்து தப்பும்படிக் கவசமாக இருந்தது அன்னையின் சூழல். பல ஆண்டுகள் சந்தான பாக்கியமில்லாதவர்கள் பலர்; அன்னைக்குப் பிரார்த்தனை செய்த அடுத்த மாதம் கர்ப்பமானேன் என்று சொன்னதுண்டு.