11/29/2012

ஜென்

   போதி தர்மர் ஒருமரத்தின் அடியில் அமர்ந்து தியானத்தில் இருக்கிறார். சின் மோன் சில பிக்குகளுடன் அம்மரம் அருகே வருகிறான். போதி தர்மர் தியானத்தில் இருப்பதைப் பார்த்தவாறே, "உங்களுக்கெல்லாம் ஒன்று சொல்கிறேன். தாமரை சேறுநிறைந்த குளத்தில் மலர்கிறது. நாம் மலரை மட்டுமே பார்த்து பறிக்கவேண்டும். சேறு நம் மீது படாதவாறு பார்த்துக் கொள்ள வேண்டும்" என்கிறான்சின் மோன்.

"உங்க பேச்சு உண்மையை உணர்த்துவதாக உள்ளது. மலரை சேறில்இருந்து எடுப்பதென்பது.. நன்மையை எடுத்துக் கொண்டு தீமையை விட்டுவிடவேண்டும். அற்புதம்!! அற்புதம்!!" என்கிறான் சின் மோனின் இடதுப் புறமிருக்கும் பிக்கு.

"அனைத்தும் விதிப்படியே வளர்கிறது. தாமரை சேறில் இருந்து தோன்றுகிறது எனில் அந்தச் சேறும் நல்லதாகவே இருக்கும்" என்று கண்களைத் திறக்காமலேயே சொல்கிறார் போதி தர்மர்.

"என்ன? சேறு எப்படி நல்லது ஆகும்?" என்கிறான் சின் மோன்னின் இடதுப் புறமிருக்கும் சீடன்.

"நீங்கள்சொல்வதைப் பார்த்தால்.. அனைத்து தீமைகளிலும் ஒரு நன்மை இருக்கும் என்பதுபோல் உள்ளது. என்னத் தத்துவம் இது?" என்று கேட்கிறான் சின் மோன்.

மெல்ல கண்களைத் திறக்கும் போதி தர்மர், "நன்மை தீமை என எதுவும் இல்லை. எல்லாம் மனதைப் பொருத்தது" என்கிறார்.

"அர்த்தம் பொதிந்த வார்த்தைகள்" என்கிறான் ஒரு பிக்கு.

"என்ன அர்த்தத்தை நீ பெருசா பார்த்துட்ட!?" என்று அந்த சீடனை அடிக்க கையை ஓங்குகிறான் சின் மோன்.


"ம்ம்.."என்று அழுத்தமாக கண்டிப்பது போல் சப்ததித்து விட்டு, "கையை உயர்த்திய பின்முஷ்டியை மடக்கினாயா? முஷ்டியை மடக்கிய பின் கையை உயர்த்தினாயா?
" என்று நிதானமாக சின் மோன்னைக் கேட்கிறார் போதி தர்மர்.

சின்மோன்னின் இடதுப் புறமிருக்கும் பிக்கு தன் கையைப் பார்த்தவாறு, "இது கோழிமுதலில் வந்ததா அல்லது முட்டை முதலில் வந்ததா கதை மாதிரி இருக்கு"என்கிறான்.

பிக்குகள் தங்களுக்குள், முட்டை தான் முதலில் வந்தது என்றும்.. கோழி தான் முதலில் வந்தது என்றும் விவாதித்துக் கொள்கிறார்கள்.

"முன்பு, பின்பு என்ற ஒழுங்கு முறை எதுவும் இல்லை. இரண்டுமே சரி தான். அது விளைவுகளையும், சூழலையும் பொறுத்தது."

"எனக்குப் புரிந்து விட்டது" என்கிறான் சின் மோன்னின் வலதுப் புறம் இருக்கும் பிக்கு.

"உனக்கு புரிந்து விட்டதா? என்னப் புரிந்து விட்டது?" என கேட்கிறான் சின் மோன்.

"அனைத்துமே விளைவுகளையும், சூழலையும் பொறுத்தது. நாம் பிடிவாதமாக இருக்கக் கூடாது. விதியின் வழி செல்லணும்."

போதி தர்மர் ஆமோதிப்பது போல் தலையசைக்கிறார்.


சின் மோன், "எனக்கு எதுவும் புரியவில்லை" என்கிறான்.

"உனக்கு புரிய வைக்கும் ஆள் ஒருவரை நீ தேடிக் கொள்" என்கிறார் போதி தர்மர்.

"ம்க்கும்.. அது நீங்க தான் என நினைத்துக் கொண்டிருந்தேன்" என்கிறான் சின் மோன் அலட்சியமாக.

"அது நான் இல்லை. நீயே தான்" என எழுந்து செல்கிறார் போதி தர்மர்.

திடுக்கிடும்சின் மோன் அவர் பின்னால் சென்று, "நீங்கள் நிறைய படித்தவர். உங்கள்மரணத்திற்குப் பின், எங்கே செல்வீர்கள் எனத் தெரியுமா!?" என்று கேட்கிறான்சின் மோன்.

நின்று நிதானமாக, "எனக்குத் தெரியாது" என்கிறார் போதி தர்மர்.

"பார்த்தீர்களா உங்களுக்குத் தெரியாததும் ஒன்று இருக்கிறது" என்று சிரிக்கிறான் சின் மோன் மடக்கி விட்ட மகிழ்ச்சியில்.

"ஆமாம். ஏனெனில் நான் இதுவரை இறந்ததில்லை."

சின் மோன் வாயடைத்து போய் நிற்கிறான்.

அம்மடத்தில் தியான அறை ஒன்றுள்ளது. அவ்வறை வாசலில் ஒரு பிக்கு நின்றுக்கொண்டு, "உள்ளே சென்று பேசக் கூடாது" என உள்ளே செல்பவர்களிடம் எல்லாம்சொல்கிறார். போதி தர்மர் அவ்வறையை முன் நின்று பார்க்கிறார். மூன்று பகல்,மூன்று இரவுகளுக்கு சேர்ந்தாற் போல் தியானம் செய்ய இவ்விடம் என்கிறார்போதி தர்மரிடம் வாசலில் நிற்கும் பிக்கு. வாசலில் நிற்பவரை வணங்கி விட்டுபோதி தர்மர் தியான அறைக்குள் செல்கிறார். அவ்வறைக்குள் சின் மோன்னும்இன்னும் மூன்று பிக்குகளும் அமர்ந்துள்ளனர்.

இரவு வருகிறது. எங்கும் நிசப்தம் நிலவுகிறது. தூங்கி வழியும் பிக்கு ஒருவன் திடுக்கிட்டு விழிக்கிறான். குற்ற உணர்வில் அனைவரையும் ஒருமுறைப் பார்க்கிறான். எதிரில் அமர்ந்திருப்பவனின் முகம் தூக்க ரேகைகளுடன் சலனமுற்று காணப் படுகிறது. 'தான் மட்டும் தூங்கவில்லை' என்ற திருப்தியில் கள்ளப் புன்முறுவல் செய்தவாறு மீண்டும் கண்களை மூடிக் கொள்கிறான். காற்று பலமாக வீச சாளரக் கதவுகள் திறந்து மூடுகின்றன. அறைக்குள் இருக்கும் விளக்கு அணைகிறது.

அப்பொழுது தான் கண்களை மூடிய பிக்கு, "ஐய்யோ.. விளக்கு அணைஞ்சிடுச்சே!!" என்கிறான்.

அருகில் அமர்ந்திருக்கும் பிக்கு, "ஏன் நீ பேசின!?" என்று கண்டிக்கிறான்.

"நாம இப்படிப் பேசக் கூடாது!!" என்று சொல்லி விட்டு, பேசியதற்காக திடுக்கிடுகிறான் சின் மோம்.

"ஹாஹாஹா.. நான் மட்டும் தான் பேசலை" என்று உற்சாகமாக சொல்கிறான் தூங்கியவன் முன் அமர்ந்திருந்த தூக்கக் கலக்க பிக்கு. மூவரும் அவனை முறைக்கின்றனர். (படத்தில் இடம்பெறும் இந்தக் காட்சி அடிக்கடி கையாளப்படும் ஜென் கதை).

போதி தர்மர் வழவழப்பான கல் ஒன்றை மேசை மீது தேய்த்துக் கொண்டிருக்கிறார்.

"நீங்கள் என்னச் செய்கிறீர்கள்?" என்று கேட்கிறான் பிக்கு ஒருவன்.

"நீங்கள் என்னச் செய்கிறீர்கள்?!" என்று போதி தர்மரும் அதே கேள்வியைக் கேட்கிறார்.

"நாங்கள் புத்தராக தியானம் பண்றோம்" என்கிறான் தூக்க கலக்க பிக்கு.

"நான் இக்கல்லை உரசி, பளபளப்பான கல்லாக மாற்ற முயல்கிறேன்."

"எப்படி கல்லை உரசினால் கண்ணாடி ஆகும்!?" எனப் புன்னகைக்கிறான் சின் மோன்.

"கல்லில் இருந்து கண்ணாடி வராதெனில்.. நீங்கள் மட்டும் எப்படித் தியானத்தில் அமர்ந்து புத்தர் ஆவீர்கள்!?"

"புத்தர் ஆக நாங்க என்னச் செய்யணும்?"

"முதலில் ஒன்றைப் புரிந்துக் கொள்ளுங்கள். புத்தர் என எதுவும் இல்லை.வெறுமென அமர்ந்து அதன் விளைவுகளைப் பற்றி அறியாமல் இருந்தால்.. அகஒளிக்கான பாதையை அடையவே மாட்டீர்கள்" என்கிறார் போதி தர்மர்.

"அக ஒளிக்கான பாதையை அடைய என்னச் செய்யணும்?"

"முதலில் இருந்து தொடங்குங்கள்."

"எது முதல் (தொடக்கம்)?"

"மனம் தான் தொடக்கம்" என இடைவெளி விட்டு, "அனைத்து நன்மை, தீமை மற்றும்சரி, தவறு மனதிலிருந்தே கிளை விடுகின்றன. இதைப் புரிந்துக் கொள்ளாவிடில்..உங்க முயற்சிகள் எல்லாம் பாழே!!" என்று எழுந்து சென்று விடுகிறார். அவரைமேலும் கேள்விகள் கேட்க முயலுகின்றனர் பிக்குகள்.

இந்தப் பிக்குகளிடம் கொஞ்சம் அதிகமாகவே போதி தர்மர் பேசி விட்டதாக தோன்றுகிறது. போதி தர்மர் போதி தாராவாக இருந்த பொழுது அவருக்கு இத்தகைய வாய்ப்பை அவர் குரு ப்ரஜ்ன தாரா அளிக்கவே இல்லை.
'மனம் தான் அந்தக் குடில்!!' என ஆய்ந்தறிந்தே
போதி தர்மர் உணர்ந்தார். பொதுவில் நீங்கள் எந்த ஜென் குருவிடம் சென்று புத்தர் (கடவுள்) பற்றிக் கேள்விஎழுப்பினால்.. அவர்கள் முகத்தைத் திருப்பிக் கொள்வார்கள்.