10/19/2010

வாய்விட்டுச் சிரியுங்கள்; நோய் விட்டுப் போகும்!

'எங்கே நிம்மதி' என்று புலம்பித்திரியும் இளைஞர்களைப் பார்க்கும் போது 'புதிய பறவை' திரைப்படத்தில் வரும் பாடல்தான் ஞாபகத்துக்கு வருகிறது.​ எந்திர வாழ்க்கையாக மாறிப்போனதால் மனிதன் நிம்மதியைத் தொலைத்துவிட்டான்.​ மன அழுத்தத்துக்கு ஆளாகி இளைஞர்களும்,​​ இளம்பெண்களும் தாம்பத்திய வாழ்வில் தோல்வியைத் தழுவுவதும் எதார்த்தமாகிப்போனது.
​ இப்படி மனித சமுதாயத்தையே ஆட்டுவிக்கும் மன அழுத்தம் என்றால் என்ன,​​ அது எப்படி ஏற்படுகிறது,​​ ​ மன அழுத்தத்துக்கு ஆட்பட்டுவிட்டால் அதில் இருந்து எப்படி எளிதில் மீளுவது ​ போன்றவை குறித்து கரூரைச் சேர்ந்த பிரபல மனநல மருத்துவரும்,​​ உளவியல் நிபுணருமான செந்தில்வேலன் இதோ நம்மிடம் பகிர்ந்து கொண்டது:​​
மன அழுத்தம் என்றால் என்ன?​​
ஏதா​வது ஒரு விஷ​யம் மனி​தர்​க​ளின் தினசரி வாழ்வில் ஒரு மாற்றத்தையோ அல்லது ​மனிதர்கள் சமாளிக்கும் திறமைக்கு ஒரு சவாலையோ ஏற்படுத்தும் போது உணரப்படும் விரும்பத்தகாத உணர்வையே மன அழுத்தம் என்கிறோம்.
பொதுவாக மன அழுத்தம் எப்படி வெளிப்படும்?​​
மன அழுத்​தம் கோப​மாக,​​ பய​மாக,​​ ​ இயலாமையாக,​​ கவலையாக,​​ வெறுப்பாக,​​ அமைதியின்மையாக,​​ கவனமின்மையாக-எப்படி வேண்டுமானாலும் வெளிப்படலாம்.
மன அழுத்தம் யாருக்கு ஏற்படுகிறது?​​
மன அழுத்​தம் சிறி​யவர்,​​ பெரியவர் என்று வயது வித்தியாசமின்றி யாருக்கு வேண்டுமானாலும் ​ ஏற்படலாம்.​ இன்றைய காலக் கல்விச் சுமையால் குழந்தைகளுக்குகூட மன அழுத்தம் ஏற்படலாம்.​ ​ ஏழை-பணக்காரர்,​​ ஆண்-பெண்,​​ படித்தவர்-படிக்காதவர் என்ற வித்தியாசமின்றி யாருக்கும் மன அழுத்தம் ஏற்படும்.
மன அழுத்தம் ஏற்படக் காரணம் என்ன?​​
மன அழுத்​தம் பெரும்​பா​லும் குடும்ப உற​வுகளில் ஏற்படும் கசப்புகள்,​​ ஏமாற்றங்கள்,​​ எதிர்பார்ப்புகள்,​​ நிறைவேறாத ஆசைகள் ஆகியவற்றாலும் சமுதாய சூழ்நிலைகளாலும் மற்றும் வேலை பார்க்கும் இடங்களில் ஏற்படும் பிரச்னைகளாலும் ஏற்படும்.
நீங்கள் ஒரு உளவியல் நிபுணர்.​ ஆக உளவியல் ரீதியாக மன அழுத்தத்துக்கு எவை காரணங்களாக கண்டறியப்பட்டுள்ளன?​​
​ உள​வியல் ரீதியாக எடுத்துக்கொண்டால் மன விரக்தி,​​ வாழ்வில் ஏற்படும் திடீர் மாற்றம்,​​ ​முரண்பாடுகள்,​​ நிர்பந்தம் ஆகியவையே மன அழுத்தத்துக்கு காரணம்.
அதாவது ஒரு இலக்கை அடைய பலமுறை முயன்றும் தோல்வி ஏற்பட்டால் மன விரக்தி ஏற்படுகிறது.​ பெரும்பாலான தருணங்களில் நாம் எதார்த்தம் இல்லாத இலக்குகள்,​​ ​ எதிர்பார்ப்புகள்,​​ ஒப்பீடுகளை மனதில் வைத்து விரக்தி அடைகிறோம்.
​ அமைதியான நதியில் சீரான வேகத்தில் நிதானமாகச் சென்று கொண்டிருக்கும் படகைப் போன்ற நம் வாழ்வில் திடீரென ஏற்படும் மாற்றங்கள் நம்மை புரட்டிப் போடுகின்றன.​ ​ நம்முடைய பொறுமைக்கும்,​​ சிக்கலை சமாளிக்கும் திறமைக்கும் சவாலாக உள்ளன.
அதேபோல அன்றாட வாழ்வில் நாம் சந்திக்கும்,​​ அனுபவிக்கும் முரண்பாடுகள் கணக்கிலடங்கா.​ விழித்தெழுவதில் இருந்து உறங்கும்வரை முரண்பாடுகளோடு போராட வேண்டியுள்ளது.​ ஒன்றுக்கு மேற்பட்ட ஆசைகள்,​​ விருப்பங்கள் ஒரே நேரத்தில் வெளிப்பட போட்டியிடும்போது முரண்பாடு ஏற்படுகிறது.
அதேபோல உலகில் எல்லோரும் ஏதாவது நிர்பந்தத்துக்கு ஆளாகி நமக்கு பிடிக்கிறதோ இல்லையோ சில காரியங்களைச் செய்தாக வேண்டிய கட்டாயத்துக்கு உள்ளாகிறோம்.​ ​ சமூக அந்தஸ்துக்காக தகுதிக்கு மீறி கடனை வாங்கி ஆடம்பர வீடு கட்டுகிறோம்.​ கார் வைத்துக் கொள்கிறோம்,​​ கடனை வாங்கியாவது லட்சத்தைப் பறிக்கும் பள்ளிகளில் குழந்தைகளைப் படிக்க வைப்பதை கெüரவமாக நினைக்கிறோம். இதனால் ஏற்படும் பொருளாதார சுமைகளால் மன உளைச்சலுக்கு ஆளாகிறோம்.
​ மன அழுத்தத்தை நம் அருகிலேயே வராமல் துரத்தி அடிக்க முடியுமா?​​
இன்​றை​யச் சூழலில் மன அழுத்தத்தை யாராலும் தவிர்க்க முடியாது.​ ஆனால் குறைக்கலாம்,​​ சமாளிக்கலாம்,​​ தாங்கிக் கொள்ளலாம்.​ அப்படி ஒருவர் தனக்கு மன அழுத்தமே வருவதில்லை என்று கூறினால் அவர் சமூக ஒட்டுதலில் இல்லை எனக் கூறலாம்.
அப்படியென்றால் மன அழுத்தத்தை எப்படி குறைப்பது?​​
ஆழ்​ம​னதில் உள்ள தவறான கருத்துக்களையும் அவற்றால் நாம் உலகைப் பார்க்கும் கோணத்தில் ஏற்படும் விகாரங்களையும் அறிந்து கொண்டால் மன அழுத்தத்தைக் குறைக்கலாம்.
​ ​ நகைச் சுவை மன உளைச்சலைப் போக்கும் அரு மருந்து.​ அதனால்தான் வள்ளுவரே இடுக்கண் வருங்கால் நகுக என்றார்.​ ​ கடினமான சூழ்நிலையை நகைச்சுவை தலைகீழாக மாற்றிவிடும்.​ இதனால்தான் இன்று பல நகரங்களில் நகைச்சுவை மன்றங்களை ஏற்படுத்தியுள்ளனர்.
​ ​ நமக்கு நெருக்கமானவர்களிடம்,​​ நம்மை புரிந்து கொள்பவர்களிடம் மனம் விட்டுப் பேசி நமது மனப்பாரத்தை இறக்கிவைக்கலாம்.​ பல நேரங்களில் வெடித்து வரும் அழுகை மனப் பாரத்தை கழுவி விடுகிறது.​ ஆழ்ந்த ஓர் அழுகைக்குப்பின் மனம் மழை பெய்த வானம் போல தெளிவாகவும்,​​ லேசாகவும் மாறிவிடுகிறது.
​ ​ யோகா உடற்பயிற்சி,​​ ஆழ்மன தியானம்,​​ உடல் தளர்வுப் பயிற்சிகள்,​​ சாதாரண உடற்பயிற்சி ஆகியவற்றை தினசரி வாழ்வில் கடைப்பிடிக்கும் போதும் நம் மன உளைச்சல் குறைகிறது.
​ ​ ​ சுருங்கச் சொல்வதானால் நேர்மையாக,​​ அடுத்தவரின் உணர்வுகளை மதிப்பவராக,​​ நல்ல பழக்க வழக்கங்கள் ​ உடையவராக,​​ எதையும் ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவம் உள்ளவராக,​​ தமது எல்லைகளை அறிந்தவராக,​​ நிதானமானவராக,​​ உணர்ச்சிவசப்படாதவராக இருக்கும்பட்சத்தில் நமக்கு ஏற்படும் மன உளைச்சலை எளிதில் சமாளித்து இனிதான வாழ்க்கையை அமைத்துக் கொள்ள இயலும்.
 
Thanks :- கதிர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக