11/19/2010

கனவுகள் நினைவாக....

கனவுகள் நினைவாக... நினைத்தவை எல்லாம் நிஜமாக.... கண்ணுக்குள் கண்ட கனவு கண் முன் நடக்க ஒரு சில யோசனைகள்.

ஒரு சிலர் எவ்வளவோ பேரும் புகழும் பெறுகின்றனர். அவர்களது பணியில் சிறந்து விளங்குகின்றனர். எட்டாத புகழை அடைகின்றனர். இதெல்லாம் அவர்களால் எப்படி முடிந்தது. இதோ அந்த வெற்றியின் ரகசியம்.

நமது வாழ்க்கை எப்போதுமே ஒரு ஓட்டப்பந்தய மைதானம்தான். அதில் மூச்சிறைக்க ஓடிக் கொண்டிருப்போம் நாம். வேகமாக ஓடுபவன் புகழை அடைகிறான். ஆனால் நாமோ எந்த லட்சியமும் இன்றி ஓடிக் கொண்டிருப்போம். மற்றவன் அடையும் புகழைக் கண்டு பொறாமைப் பட்டுக் கொண்டும் ஓடிக் கொண்டிருப்போம்.

தடுக்கி விழுந்தவனைப் பார்த்து ஏளனச்சிரிப்புடனே ஓடிக் கொண்டிருப்போம். ஓர் கட்டத்தில் நம்மால் ஓட முடியாமல் நிற்போம். அதுதான் வயோதிகம். அப்போதும் நம்மைக் கடந்து பலர் ஓடிக் கொண்டிருப்பார். இது வேண்டாமே....

வேகமாக ஓடி புகழை அடைய வேண்டும் என்ற உத்வேகத்துடன் ஓடலாமா?

அதற்காக 10 எளிய வழிகள். இவைகள் அனைத்தும் வெற்றி பெற்றவர்கள் தங்கள் கனவுகள் நிஜமாக கையாண்ட முறைகள்தான்.

தன்னம்பிக்கை

10 வழிமுறைகளில் எத்தனை வழிகளை நீங்கள் கையாள முடியும் என்று நினைக்கின்றீர்கள்?

அனைத்துமா? ஆம் இதுதான் முதல் வழிமுறை. வெற்றி பெற தன்னம்பிக்கை தேவை. அனைத்தையும் செய்ய இயலும் என்ற தன்னம்பிக்கை. நம்பிக்கையற்றவர்களையும், அவநம்பிக்கையையும் தவிருங்கள். வெற்றி உங்கள் பக்கத்தில் வரும்.

லட்சியம்

உங்களது லட்சியத்தை அல்லது நீங்கள் அடைய விரும்பும் ஒன்றை முதலில் தேர்வு செய்து கொள்ளுங்கள். ஏனெனில் ஏதாவது ஒன்றை சாதிக்க வேண்டுமெனில் அது என்ன என்பதை முதலில் தீர்மானித்துக் கொள்ள வேண்டும்.

முயற்சி

நீங்கள் என்னவாக விரும்பினீர்களோ அதற்கான அனைத்து முயற்சிகளையும் செய்யுங்கள். எதை நினைத்தும், பயந்தும் முயற்சியில் இருந்து பின்வாங்காதீர்கள். முயற்சியுடையார் இகழ்ச்சி அடையார்.

கற்றுக்கொள்ளுங்கள்

படியுங்கள். கற்றுக் கொள்ளுங்கள். எப்போதும் எதையாவது கற்றுக் கொண்டே இருங்கள். புதிது புதிதாக எதையாவது அறிந்து கொண்டே இருங்கள். உங்களுக்கு எதில் விருப்பமோ அதைப் பற்றி அதிகமாக அறிந்து கொள்ள முன்வாருங்கள். கற்றுக் கொள்வதை எப்போதும் நிறுத்த வேண்டாம்.

உழைப்பு

லட்சியத்தை நோக்கி கடுமையாக உழையுங்கள். உங்கள் பார்வை எப்போதும் லட்சியத்தை நோக்கியதாக மட்டுமே இருக்க வேண்டும். லட்சியத்தை பார்க்கும் கண்களுக்கு அதன் வழியில் இருக்கும் தடைகள் தெரியாது. அப்போதுதான் உங்கள் உழைப்பு பலனை அளிக்கும்.

தெளிவுறுங்கள்

லட்சியம் குறித்து பல்வேறு விஷயங்களைப் பற்றி தெரிந்து கொள்ளங்கள். நீங்கள் செய்யும் தவறுகளை திருத்திக் கொள்ளுங்கள். தவறுகள் மூலமாகவும் பலவற்றை கற்றுக் கொள்ளலாம். தவறுக்காக எப்போதும் கவலைப்படாதீர்கள். உங்கள் தவறுகள்தான் பல சமயங்களில் நல்ல முடிவுகளை எடுக்க உதவும் என்பதை மனதில் கொள்ளுங்கள்.

குறுக்கீடு

உங்கள் லட்சியத்தை கெடுக்கும் வகையில் நபரோ அல்லது பொருளோ, பணமோ குறுக்கே வருவதை அனுமதிக்காதீர்கள். உங்களது அனைத்து எண்ணங்களையும் லட்சியத்தை நோக்கியே செலுத்துங்கள். உங்கள் நேரத்தை அதற்காகவே செலவிடுங்கள்.

தனித்துவம்

உண்மையாக இருங்கள். உங்களை நம்புங்கள். சுயமாக சிந்தித்து சொந்த திறமையை வெளிப்படுத்துங்கள். மற்றவர்களை பின்பற்றி சென்றால் தனித்துவம் இருக்காது.

கலந்தாய்வு

எந்த மனிதனும் தனியல்ல. எங்கும் எப்போதும் ஒரு குழுவாகவே இருக்க வேண்டும். உங்களது எண்ணங்களை, சிந்தனைகளை மற்றவர்களுடன் கலந்து பேசுங்கள். அவர்களையும் பேசச் சொல்லுங்கள். மற்றவர்களையும் ஊக்கப்படுத்துங்கள். பயிற்சி, ஊக்கம் போன்றவற்றை ஒருசேரப் பெருங்கள்.

பொறுப்பேற்பு

எப்போதும் யாரையும் ஏமாற்றாதீர்கள். யாரிடமும் பொய் சொல்லாதீர்கள். உறுதி அளித்தால் அதை எப்பாடுபட்டாவது நிறைவேற்றுங்கள். தவறு செய்தால் அதை ஒப்புக் கொள்ளுங்கள். நீங்கள் செய்யும் செயலுக்கு பொறுப்பேற்றுக் கொள்ளுங்கள்.

நேர்மை, கீழ்பணிதல், பொறுப்புடன் செயலாற்றுதல் போன்றவை இல்லாமல் எந்த காரியத்தையும் சாதிக்க இயலாது.

எனவே இவற்றை கடைபிடித்து உங்களது லட்சியத்தை நிறைவேற்றுங்கள். நாம் பிறந்தோம், வாழ்ந்தோம், இறந்தோம் என்றில்லாமல் வாழ்ந்ததற்கான சுவடுகளை ஏற்படுத்திவிட்டுச் செல்லுங்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக