1/25/2013

இருதயாலீஸ்வரர் ஆலயம்

நீண்ட செஞ் சடையனார்க்கு நினைப்பினால் கோயிலாக்கி
பூண்ட அன்பு இடையறாத பூசலார் பொற்றாள் போற்றி
நின்றவூர் பூசல் அன்பன் நெடிதுநாள் நினைந்து செய்த
நன்றுநீ டாலயத்து நாளை நாம் புகுவோம் நீயிங்(கு)
ஒன்றிய செயலை நாளை யொழிந்துபின் கொளவாயென்று
கொன்றைவார் சடையார் தொண்டர் கோயில் கொண்டருளப் போந்தார்


கிபி ஏழாம் நூற்றாண்டு திருநின்ற ஊரில் மறையவர் குலத்தில் உதித்த பூசலார் என்னும் அடிகள் சிறந்த சிவ பக்தர், வறுமையான குடும்பத்தில் பிறந்தவர், வருந்திய தினமும் அங்குள்ள லிங்கம் ஒன்றைத் தரிசித்து வந்தார். கூரையற்று இறைவன் மழையிலும், வெயிலிலும் நனைவதைக்க கண்டு மனம் வருந்தி அந்த ஊரில் சிவ பெருமானுக்கு ஆலயம் கட்ட யாருமே முன் வராத நிலையில் தன்னுடைய வறுமை நிலையை மனதில் நினைத்து அதற்காக இவர் மனம் தளராமல்! எப்படியாகிலும் சிவபெருமானுக்கு ஒரு கோயில் கட்ட வேண்டும் என்னும் ஆசை நாளுக்கு நாள் அதிகமாகவே ஒரு வழியைக் கண்டுபிடித்தார் திரு பூசலார் அடிகள்.செங்கற்களாலும் கல்லாலும் கட்டினால்தான் கோயிலா என்னும் கேள்வி அவர் மனதிலே உதித்தது. கையில் பொருளில்லாமல் வெறும் மனக்கோட்டை கட்டினால் சிவன் கோயில் கட்ட முடியுமா என்று மற்றவர்கள் கேலி செய்தது அவர் மனதில் ஒரு வைராக்கியத்தை உருவாக்கியது.அவர்கள் கூறிய சொற்கள் அவர் மனதிலே ஒரு ஒளியை உண்டாக்கிற்று. அந்த சொற்களையே நினைத்துக்கொண்டிருந்த அவருக்குள் ஒரு ஞானம் பிறந்தது. அவர்கள் கூறிய மனக்கோட்டை என்னும் சொல் அவருள் பெரிய மாற்றத்தை விதைத்தது.அவர் மனக்கோட்டை கட்டத் தொடங்கினார். ஆமாம் சிவபெருமானுக்கு மனதாலேயே கோயில் அமைக்கத் தொடங்கினார். ஆமாம் அவர் மனதுக்குள்ளேயே சிவபெருமானுக்கு கோயில் கட்டுவதாக உறுதி எடுத்தார்.ஒரு இலுப்பை மரத்தடியில் அமர்ந்து சிவ பெருமானை நோக்கி வணங்கி விட்டு தன்னிடம் ஏராளமான செல்வம் இருப்பது போல் கற்பனை செய்துகொண்டு, சிவனை மனதில் இருத்தி மனதுக்குள்ளேயே அனைத்து வசதிகளும் கொண்ட ஆலயத்தை உண்மையிலேயே கட்ட எத்தனை ஆண்டுகள் ஆகுமோ அத்தனை ஆண்டுகள் மனதாலேயே ஆலையத்தை வடிவமைக்கத் தொடங்கினார். ஆமாம், மனதுக்குள்ளேயே வடிவமைத்தார். திட சிந்தனை தீர்க்கமான முடிவு, ஆழ்ந்த பக்தி, அயராத உழைப்பு இவைகளையே மூலதனமாக்கி செங்கல் இல்லாவிடின் என்ன? கற்கள் இல்லாவிடின் என்ன? பொருள் இல்லாவிடின் என்ன? இவைகள் இல்லாமலே கோயில் கட்ட முடியும் என்பதை நிரூபிக்கும் விதமாக தன் மனதுக்குள்ளேயே திட்டங்கள் தீட்டி, கோயிலை வடிவமைத்து முழுதாகக் கட்டி முடித்தார் மனதுக்குள்ளேயே.மனக்கோயில்! ஆமாம் மானசீகக் கோயில். முழுமையாகக் கட்டி முடித்த கோயிலுக்கு என்று குடமுழுக்கு நடத்த வேண்டும் என்று ஒரு நன்நாளையும் குறித்தார். அதே நேரம் காஞ்சியிலும் ஒரு ஆலயம் எழுந்துகொண்டிருந்தது.உலகுக்கே ஒரு உன்னதக் கோயில்,கட்டிடக் கலையை வெளிக்காட்டிய பல்லவ மன்னன் காடவர்கோன் ராஜசிம்மன் கைலாசநாதர் ஆலயத்தை ஒவ்வொரு கணமும் தன் மேற்பார்வையிலேயே நடத்திக்கொண்டிருக்கிறான்..அவன் மனதுக்கு மிகவும் த்ருப்தியாக கோயில் அழகுற அமிந்து மிளிர்ந்தது, குடமுழுக்கு வைபவத்துக்கு நாள் குறித்தாதாயிற்று. மறுநாள் குடமுழுக்கு, வெகுநாட்கள் கழித்து அன்று மனத் த்ருப்தியுடன் கண்ணயர்ந்தான் மன்னன். அவன் கனவில் கையிலைநாதன் தோன்றி நாளை திருநின்ற ஊரில் என் பக்தன் ஒருவன் கட்டிய கோயில் குடமுழுக்கு விழா நடத்துகிறான்,நான் அங்கே செல்ல வேண்டும் .அதனால் நீ வேறு ஒரு நாள் குறித்தால் அந்த நன்நாளில் நான் வருகிறேன் என்று கூறி மறைந்தார். அதைக் கேட்டு திடுக்கிட்டு விழித்த மன்னன் குடமுழுக்கு பணியை நிறுத்த ஆணையிட்டுவிட்டு திருநின்ற ஊருக்கு கிளம்பினான், கோயிலைத் தேடி அலைந்து களைத்துப் போனான் மன்னன். எங்கும் கோயிலைக் காணவில்லை. ஒரு விவசாயி இங்கே பூசலார் என்றொருவர் கோயில் கட்டவேண்டும் என்று கூறிக்கொண்டிருந்தார், இலுப்பை மரத்தடியில் பித்துப் பிடித்தாற் போல ஒருவர் இருப்பார், அவர்தான் பூசலார், அவரைப் பார்த்தால் விவரம் தெரியும் என்று கூறவே தேடி அலைந்து பூசலாரைக் கண்டான் மன்னன். ஆலயம் எங்கே என்றான் மன்னன்? இதோ என் மனதுக்குள்ளே என்றார் பூசலார்.பொருள் இல்லாத காரணத்தால் என் மனதால் ,பக்தியை மூலதனமாக்கி மனதுக்குள்ளேயே ஆலயம் அமைத்திருக்கிறேன் என்றார் பூசலார்.அவருடைய பக்தியை வியந்து அவருடைய இருதயத்தில் கட்டிய கோயிலுக்கு பூசலாரின் விருப்பப்படி திருநின்ற ஊரிலேயே திரு நின்ற ஊர் பக்தவச்சலப் பெருமான் ஆலயத்தின் அருகிலேயே அங்கேயே ஒரு ஆலயம் எழுப்பி இருதயாலீஸ்வரர் ஆலயம் என்று பெயரிட்டு. பூசலார் குறித்த நாளிலேயே குடமுழுக்கு செய்வித்து அதன் பின்னர் காஞ்சிக்கு சென்று கையிலாய நாதர் கோயிலுக்கும் குடமுழுக்கு செய்தான்.  இந்த இருதயாலீஸ்வரர் கோயிலில் கருவறையில் ஈசனாரின் லிங்கத் திருமேனிக்கு அருகே பூசலாரும் காட்சி தருகிறார் என்பதே இருதயத்தால் கட்டிய ஆலையம் என்பதால் இருதய தொடர்பான நோய்கள் உள்ளவர்கள் இங்கே வந்து இறைவன் ஆவுடையாரையும் இறைவி மரகதாம்பாளையும், பூசலாரையும் வேண்டிக்கொண்டால் நோய் நீங்கும் என்பது ஐதீகம். ஆவுடையார் லிங்கம் சதுர வடிவத்திலும், மரகதாம்பாள் நின்ற திருக்கோலத்திலும், நான்கு கரங்களுடன் காட்சி அளிக்கிறார். இருதயாலீஸ்வரரின் விமானம் கஜப்ருஷ்ட விமானமாக தூங்கானை மாடம் வடிவில் அமைந்துள்ளது.சுற்றுப் ப்ராகாரத்தில் வினாயகர், வள்ளி தெய்வானையுடன் சுப்ரமணியர், நந்திகேஸ்வரர், சண்டிகேஸ்வரர், நடராஜர், சன்னிதிகள் உள்ளன. சங்கு சக்கரம் தாங்கி மஹாவிஷ்ணு காட்சி அளிக்கிறார். இது மிகவும் சிறப்பான அமைப்பு ஆகும். அன்புடன் Parth.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக