12/11/2011

ஞானக் கதைகள் - புத்தர்

புத்தர் மீது வெறுப்புக் கொண்ட ஒருவன் அவரைப் பார்த்தபோது அவர் முகத்தில் உமிழ்ந்து விட்டான்.அதைத் துடைத்துக் கொண்டே புத்தர் அமைதியாகக் கேட்டார் ,''வேறு ஏதேனும் சொல்ல விரும்புகிறாயா அப்பா?'' புத்தரின் உறவினரும் அவர் உடனேயே இருந்த சீடருமான ஆனந்தருக்குக் கோபம் வந்து விட்டது.''நீங்கள் அனுமதி கொடுத்தால் அவனுக்கு நான் பதிலடி கொடுக்கிறேன்,''என்றார்.புத்தர் அவரிடம் சொன்னார்,''ஆனந்தா,நாம் எல்லாம் சந்நியாசிகள் என்பதை மறந்து விட்டாயா? இதோ, இவரைப்பார் ,ஏற்கனவே, ,இவர் கோபம் என்னும் நோயினால் பீடிக்கப் பட்டிருக்கிறார்.அவருடைய கோபமான முகத்தைப்பார்.அவர் உடல் ஆடுகிறது.கோபப்படும் முன் அவர் மகிழ்வுடன் நடனம் ஆடிக் கொண்டிருந்திருப்பார் என்று நினைக்கிறாயா? அவர் தன கோபத்தினால் பைத்தியமாக நிற்கிறார்.இதைக் காட்டிலும் கொடிய தண்டனை வேறு யார் அவருக்குக் கொடுக்க முடியும்?எனக்கு என்ன பெரிய கெடுதல் நேர்ந்து விட்டது.இதைத் துடைப்பதைத் தவிர எனக்கு என்ன சிரமம் உள்ளது?நீ கோபப்படாதே.இல்லையெனில் அவருக்கு நேர்ந்த சிரமங்கள் எல்லாம் உனக்கும் நேரும்.உன்னை நீயே ஏன் தண்டித்துக் கொள்ள வேண்டும்?இவர் மீது கோபப்படாதே.மாறாக இரக்கப்படு.'' பின்னர் புத்தர் தன் மீது உமிழ்ந்தவரைப் பார்த்து,''அப்பா,நீ மிகவும் களைப்புடன் காணப் படுகிறாய்.உன்னை நீயே தண்டித்துக் கொண்டது போதும்.என்னிடம் நீ நடந்து கொண்டதை மறந்துவிடு.வீட்டிற்குப் போய் ஓய்வெடு,''என்றார்.அவன் மிகுந்த அதிர்ச்சியில் என்ன செய்வது என்று தெரியாதவனாக நின்றான்.பின் அவன் புத்தரிடம் மன்னிப்புக் கேட்டான்.புத்தர் சொன்னார்,''முதலாவதாக நான் கோபப்படவில்லை.பின் மன்னிக்க வேண்டும் என்ற கேள்வியே எழாதே? ஆனால் இப்போது உன்னைப் பார்க்கையில் எனக்கு மகிழ்ச்சி.ஏனெனில் நீ உன் துன்ப நிலையிலிருந்து மீண்டு நிம்மதியுடன் காணப்படுகிறாய்.மீண்டும் இத்தவறை யாரிடமும் செய்து உனக்குள் நீயே நரகத்தை உருவாக்கிக் கொள்ளாதே.''

ஜென் கதை

ஜென் கதை
பல போர்களை வென்ற ஒரு ராணுவத் தளபதி, தன் வீட்டில் பழமையான ஒரு கண்ணாடிப் பொருளைச் சுத்தம் செய்துகொண்டு இருந்தார். அந்தப் பொருள் அவர் கையில் இருந்து நழுவிவிட்டது. ஒருகணம் தவித்துப்போன அவர் அது தரையைத் தொடும் முன் எப்படியோ பிடித்துவிட்டார். அவரிடம் இருந்து பெருமூச்சு ஒன்று வெளிப்பட்டது.

"எத்தனையோ ஆயுதங்களுக்கு எதிராக நின்றபோதுகூட பதைக்காதவன் இச்சிறு பொருளுக்காக ஏன் பதைத்தேன்?" என்று ஒருகணம் யோசித்தார் தளபதி.

அவர் முகத்தில் திடீர் என்று ஒரு புன்னகை முளைத்தது. அந்தக் கண்ணாடிப் பொருளை வீசி எறிந்து உடைத்தார்.

விளக்கம்:

"வாழ்க்கையின் பெரும்பான்மையான தருணங்களில் நீங்கள் ஓர் உயிராக மட்டும் உங்களைக் கருதினால், எந்தப் பிரச்னையும் இல்லை. ஆண், பெண் என்ற அடையாளங்களுடன் செயல்படுகையில்கூட சில கட்டாயங்களை நீங்களே விதித்துக்கொண்டுவிடுவீர்கள். சொல்லப்போனால், உங்களை ஆண் என்றோ, பெண் என்றோ அடையாளப்படுத்தி, அதன் மீது உங்கள் வாழ்க்கையை அமைக்கக்கூட அவசியம் இல்லை.

எல்லா அடையாளங்களையும் தாண்டி இருக்கையில்தான், உங்கள் திறன் உச்சத்தில் செயல்படுகிறது. குறுகலான வரையறைகளைத் தாண்டி காலெடுத்துவைக்கையில், நினைத்துப்பார்க்காத விஷயங்கள்கூட சாத்தியமாகின்றன.

எல்லை இல்லாத உயிரைப்போய் உடலுடன் அடையாளப்படுத்திக்கொள்கிறீர்கள். அட, மனதில் தோன்றும் எண்ணங்களுடன்கூட உங்களுக்கு அடையாளம் வந்துவிட்டது. நீங்கள் உருவாக்கிய உணர்வுடன்கூட அடையாளம் பிறந்துவிட்டது.

எதனுடனும் உங்களை அடையாளப்படுத்திக்கொள்கையில், வேதனைகள்தாம் வரும். உங்கள் பதவி, நீங்கள் கட்டிய வீடு, உங்கள் உடைமைகள், நடுவில் வந்த உறவுகள், நண்பர்கள் என்று எல்லாவற்றுடனும் ஓர் அடையாளம் உங்களைப் பிணைத்துப்போடுகிறது. அந்த அடையாளங்களுடன் சிக்கிப் போராடுகையில் தேவையற்ற பதைப்பு வரத்தான் செய்யும்.

இதேரீதியில் ஒரு சிறு கண்ணாடிக் கோப்பையுடன்கூட தன்னைத் தொடர்புபடுத்தி அடையாளப்படுத்திக்கொண்டுவிட்டதால் ஏற்பட்ட பதைப்பை உணர்ந்த தளபதி, அதில் இருந்து விடுபடும்விதமாக அதை வீசி எறிந்து நொறுக்குகிறார்.

நீங்கள் வீசி எறிய வேண்டியது, கண்ணாடிப் பொருட்களை அல்ல; உங்கள் அடையாளங்களை!"

            - PARTHA

12/10/2011


புத்தர் பெருமான் மரத்தடி நிழலில் அமர்ந்திருந்தார்.
சுற்றிலும் சீடர்கள், அவருடைய அருளுரையைக் கேட்க ஆவலுடன் காத்திருந்தார்கள்.
புத்தர் தம் சீடர்களை நோக்கி “ஒரு மனிதனின் வாழ்நாள் எவ்வளவு காலம் என்று கேட்டார்.
எதற்கு அவர் இப்படியொரு சாதராணக் கேள்வியைக் கேட்டார் என்பது விளங்காமல் சீடர்கள் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக்கொண்டார்கள்.

“எழுபது ஆண்டுகள்“ என்றார் ஒரு சீடர்.
“தவறு“ என்றார் புத்தர்
“அறுபது ஆண்டுகள்“ என்றார் ஒரு சீடர்.
“தவறு“ என்றார் புத்தர்
“ஐம்பது ஆண்டுகள்“ என்றார் ஒரு சீடர்
“தவறு“ என்றார் புத்தர்.

இதென்ன எல்லாவற்றையும் தவறு என்கிறாரே! மனித வாழ்வு ஐம்பது ஆண்டுகள் கூட இல்லையா என்ன என்று திகைத்தார்கள் சீடர்கள்.

சில வினாடிகள் அமைதியாக இருந்தார் புத்தர்.

பிறகு அவர் “அது ஒரு மூச்சு“ என்றார்!
“வெறும் மூச்சுவிடும் நேரம்தானா?” என்று கேட்டார் ஒரு சீடர்.
அப்படியல்ல.
வாழ்வு ஒரு கணமன்று.!
ஆனால் ஒவ்வொரு கணமாக வாழவேண்டும்.!
ஒவ்வொரு கணப்பொழுதிலும் முழுமையாக வாழவேண்டும்.!
கணம் கணமாக வாழவேண்டும்! என்றார் புத்தர்.

சிலர் நேற்றில் வாழ்கிறார்கள். நேற்றைய நினைவில் மூழ்கி இறந்தகாலத்தில் வாழ்கிறார்கள்.
சிலர் அறியப்படாத எதிர்காலத்தில், எதிர்காலக் கனவில், எதிர்கால ஏக்கத்தில் ஒரு தெளிவில்லாமல் வாழ்கிறார்கள்.
அவர்கள் நிகழ்காலத்தை இழந்துவிடுகிறார்கள்.
எதார்த்தமான நம் முன்னால் துடித்துக்கொண்டுள்ள நம் கைவசமுள்ள நம் ஆளுகைக்கு உட்பட்ட நம் அதிகாரத்தில் உள்ள நிகழ்காலத்தைக் காணச் சக்தியற்ற அந்தகர்களாக (கண்பார்வையற்றவர்களாக) இருக்கிறார்கள்.
கணத்திற்குக் கணம், நிகழ்காலத்தில் முழு ஈடுபாட்டோடு வாழ வேண்டும்.

- PARTHA 

ஜென் கதைகள் - ஒரு பார்வை

"ஜென் ஒரு கொள்கையோ, கோட்பாடோ அல்ல. அது ஒரு தத்துவம் கூட அல்ல. "ஜென்" முறையில் வாழ்வது என்று கூட ஜென் ஞானிகள் குறிப்பிடுவதில்லை. "ஜென்"-னில் வாழ்வது என்றால் கூட அது பிழையாகும். "ஜென்"-னாக இருப்பது என்பதுதான் சரியான விளக்கம். இதற்குத் தன்னியல்பில் இருப்பது என்று பொருள். ஜென் நம்ப முடியாத அளவிற்கு இயல்பானது. இயற்கையானது. தன்னை அடையாளம் கண்டுகொள்ளும் சுடர் தெறிக்கும் அந்த ஒரு கணத்தில் விழிப்புணர்ச்சி சித்திக்கிறது என்கிறது ஜென். பெரும்பாலும் அதிர்ச்சியின் மூலமே ஞான தரிசனம் அருள்கிறார்கள் ஜென் குருமார்கள். மனித குலத்தைப் பிளவுபடுத்தும் மதக் குப்பைகளை வாரி எறிந்துவிட்டு, மானுடத்தை ஒன்றாக்கிவிடுகிறது ஜென்.

"ஜென்"-னின் தோற்றம்

நம்நாட்டுத் தியான முறைதான் ஜென் ஆயிற்று. இந்தியாவிலிருந்து சினாவிற்குச் சென்று, ஜப்பானில் "ஜென்" ஆயிற்று, காஞ்சிபுரத்திலிருந்து வந்த போதி தர்மர் என்ற பௌத்த குருதான் சினாவில் ஜென் பிரிவைத் தொடங்கி வைத்தார் என்று சொல்லப்படுகிறது. அன்றைய சின பௌத்தம் தத்துவச் சிக்கல் மிகுந்ததாக இருந்தது. போதி தர்மர் அதனைச் சாதாரண மனிதனும் புரிந்துகொண்டு தியானிக்க நினைத்தார். போதி தர்மரின் ஜென் நான்கு அம்சங்களைக் கொண்டது.

1. சமய நூல்களைத் தவிர்த்து அப்பால் ஞானம் பெறுதல்.
2. வார்த்தைகளை நம்பியிருக்கும் நிலையை மாற்றுதல்.
3. மனிதனின் மனதை நேரடியாகத் தொட முயலுதல்.
4. தன் சுபாவத்தை, இயல்பை உணர்ந்து முற்றும் உணர்ந்தோன் நிலையை அடைதல்.


சினாவில் ஜென் - புத்தகம், கன்பூஷியஸ், தாவோ ஆகிய மூன்று வழிகளில் செல்கிறது. ஜென்புத்தகம் மற்ற இரண்டிலிருந்தும் வேறுபட்டது.

செய்யும் செயலே தவம்:

தவம் மேற்கொள்ள தனித்த இடம் தேடிச் சென்று கண்களை இறுக மூடி அமர்ந்திருக்க வேண்டிய தேவை இல்லை. செய்யும் செயலில் மனம் ஒன்றித்தலே தவம் என்கிறது ஜென். "உண்மையான அதிசயம்" என்ற கதையில் குரு பங்கிகீ சொற்பொழிவாற்றும் பொழுது வேறு பிரிவைச் சேர்ந்த பிக்கு இடையில் சப்தம் எழுப்பித் தொல்லை கொடுத்ததோடு அல்லாமல் "எங்கள் பிரிவில் குரு அதிசயம் நிகழ்த்துதல் போல நீங்களும் அதிசயம் நிகழ்த்த இயலுமா?" எனக் கேட்டார்.

அதற்குப் பங்கிகீ மறுமொழியாக "இது எல்லாம் நரித்தந்திரம்; ஜென்மார்க்கம் அல்ல. நான் பசிக்கும்போது சாப்பிடுகிறேன். தாகம் எடுக்கும்போது குடிக்கிறேன். இதுதான் நான் நிகழ்த்தும் அதிசயங்கள்" என்று பதிலளித்தார். "இதை எல்லாரும் செய்கிறார்கள் இதிலென்ன அதிசயம்" என்றார் பிக்கு.

"பலர் சாப்பிடுகிறார்கள், குடிக்கிறார்கள்; வேறெங்கோ மனதை அலைபாய விட்டு நான் சாப்பிடுவதையும் குடிப்பதையும் மனதை ஒரு வயப்படுத்தி ஈடுபாட்டுடன் தவமாகச் செய்கிறேன்". என்று பங்கிகீ பதிலளித்தார். செய்கின்ற செயலில் கவனம் வைத்து ஒரு முகப்படுத்திச் செய்தலே தவம் என்கிறது ஜென்.

திறனின் உச்சநிலை:

ஏதாகிலும் ஒன்றில் மிகத் திறம் படைத்தவராவது சிலரின் ஆசை. "நிபுணன்" என்ற கதையில் வரும் "சிச்சியாங்" சிறந்த வில்வித்தைக்காரன். "கான்யிங்" என்ற நிபுணனிடம் தான் சிறந்த வில்வித்தை நிபுணன் தானா என்று கேட்டறிய விரும்பிச் சென்று, அவரிடமிருந்து வில்லும் அம்பும் இல்லாமலேயே எய்யும் கலையைக் கற்றுவருகிறான்.

சிச்சியாங் ஊர் திரும்பிய பொழுது வில்லை மலையிலேயே விட்டுவிட்டு வந்திருந்தான். யாராவது கேட்டால், "செயலின் உச்சகட்டம் செயலின்மை பேச்சின் உச்ச கட்டம் மௌனம்; வில்வித்தையின் உச்ச கட்டம் வில்லை எய்தாமலிருப்பதுதான்!" என்று சொல்லுவான். ஏனெனில் வில் - அம்பு இல்லாமலேயே மிகமிக உயரத்தில் பறக்கும் பறவையைக் கூட தன் கூரிய பார்வையால் அவனால் வீழ்த்த முடியும். ஆயினும் அவன் எதுவும் அதிகமாகப் பேசிக்கொள்வதில்லை ஆகவே திறனின் உச்ச நிலை அத்திறனில் செயலற்ற தன்மையாய் இருப்பது. "உன்னத மனிதன் ஆற்றலைப் பறைசாற்றுவதில்லை. அதனால் அவன் ஆற்றலைத் தக்க வைத்துக் கொள்கிறான். பலவீனமானவன் ஆற்றல் உடையவனாகக் காட்டிக் கொள்கிறான். அதனால் அவன் ஆற்றல் இல்லாதவனாக ஆகிறான்" என்றகிறது ஜென்.

அறிதலற்ற நிலையிலிருந்தால் அறியலாம்:

நிறையச் செய்திகளைக் கற்றும் கேட்டும் அறிந்து மூளையில் நிறைத்து வைத்திருக்கும் அறிவாளிகளை ஜென் பொருட்படுத்துவதே இல்லை. "நிரம்பிய கோப்பை" என்ற கதையில் "ஜென்" பற்றி அறிந்துகொள்ள அறிஞர் ஒருவர் ஜென் குருவிடம் சென்றார். அப்பொழுது குரு அவரை உபசரித்து அறிஞரிடம் கோப்பையைக் கொடுத்து, குரு அதில் தேநீரை ஊற்றினார். கோப்பை நிரம்பி வழியும் பொழுதும் குரு நிறுத்தவில்லை. அறிஞர், "கோப்பை நிறைந்து விட்டது. இதற்கு மேல் கொள்ளாது" என்று கூறினார். குருவும் பாத்திரத்தைக் கீழே வைத்துவிட்டு, "உங்கள் மனதில் வாதப் பிரதி வாதங்களும் தத்துவக் குப்பைகளும் நிரம்பியிருக்கின்றன. உங்கள் கோப்பை காலியாக இருந்தால்தான் ஜென் பற்றிய உணர்வு பெற முடியும்?" என்று கூறினார்.

நிறையச் செய்திகளை அறிந்து கொண்டு சுமந்துகொண்டு அலையாமல் இருத்தலே நல்லது என்கிறது ஜென். "ஏதாவது ஒன்றைச் சாதிக்க வேண்டுமென்று அலைவதே ஒரு மனநோய்" என்கிறது ஜென்.

எண்ணங்களிலேயே சொர்க்கமும் நரகமும்:

நாம் நம்முடைய கோபம், ஆணவம், பொறாமை முதலிய எண்ணங்களைக் கைக்கொள்ளும் பொழுது வாழ்க்கையை நரகமாக்கிவிடுகிறோம். பொறுமை, பணிவு, தன்னடக்கம் முதலிய எண்ணங்களைச் செயல்படுத்தும் பொழுது வாழ்க்கையைச் சொர்க்கமாக்கிவிடுகிறோம். இந்தக் கருத்தினை சொர்க்கமும் நரகமும் என்ற கதை உணர்த்துகிறது.

"சொர்க்கமும் நரகமும் உள்ளதா?" எனக் கேள்விகேட்ட சாமுராய் போர்வீரனைப் பார்த்து ஜென்குரு, "நீ போர் வீரனா? உன்னைப் பார்த்தால் பிச்சைக்காரன் போல் தெரிகிறது. எந்த அரசன் உன்னைக் காவலனாக ஏற்பான்?" என்றதும் வீரன் கோபமடைந்து வாளை உருவி முன்னேறுகிறான். குருவும் "இந்த மழுங்கிய வாளால் என் தலையை வெட்ட முடியாது" என்று கூறி "இதோ நரகத்தின் கதவுகள் திறக்கின்றன" என்றார். அவரின் தைரியம், கட்டுப்பாட்டு உணர்ச்சி கண்டு வீரன் வாளை உறையில் போட்டு அவரை வணங்கினான். உடனே குருவும் "இப்போது சொர்க்கத்தின் கதவுகள் திறக்கின்றன" என்றார்.

நம்முடைய நல்ல பண்புகள் அல்லது தீய பண்புகள் சொர்க்கத்தையும் நரகத்தையும் தோற்றுவிக்கின்றன என்பது ஜென்.

"ஜென்" மாணவர்களுக்கு "உழைக்காத நாள் சாப்பிடாத நாள்" ஆகும். ஆகவே ஜென்னில் இருப்பது என்பது செய்கின்ற செயலில் ஒருமித்து இருத்தல், அயராது உழைத்தல், ஆணவம் முதலிய தீய எண்ணங்களிலிருந்து விடுபட்டு சாதாரண நிலையில் வாழ்தல், ஒன்றில் உச்சக்கட்டத் திறனடைதல் என்பது அச்செயலில் செயலற்ற தன்மையாய் இருத்தல் முதலியவற்றைக் கூறலாம்.
-Partha

8/27/2011

வினாயகர் சதுர்த்தி

விநாயகர் என்றால் தனக்கு மேலே ஒரு தலைவர் இல்லாதவர் என்று பொருள். வி – இதற்கு மேல் இல்லை. நாயகர் -- தலைவர். வினாயகர் அஸ்டோத்திரத்தில் ஓம் அநீஸ்வராய நம என்ற ஒரு வரி உள்ளது. அதாவது தனக்கு மேல் ஒரு ஈஸ்வரன் இல்லாதவர் என்பதாகும். ஆதிசங்கரர் தனது பஞ்ச ரத்தினம் என்ற வினாயகர் துதியில் அநாயக ஏகநாயகம் என இவரைக் குறிப்பிடுகிறார். தனக்கு மேல் ஒரு தலைவர் இல்லாமல் ஒரே மூலப்பொருளாய் எல்லாவற்றிற்கும் தலைவராய் இருப்பவர் என்பதாகும். பூத கணங்களிற்கு தலைவராய் அதாவது கணங்களிற்கு அதிபதியாய் இருபதனால் கணபதி என அழைக்கப்பட்டார். நமது கஷ்டங்களை, வினைகளை, விக்கினங்களை நீக்குபவர் என்பதனால் விக்னேஸ்வரர் ஆனார். யானை முகத்தினன் என்பதனால் கஜானனன் என்றும், மோதகத்தை விரும்பி உண்பதனால் லம்போதரன், மோதகப்பிரியன் என்றும், ஒரு தந்தத்தை உடையவர் என்பதனால் ஏகதந்தன் என்றும் வழங்கப்படலானார்.

ஐந்து கரத்தினன் எனப்படும் இவர் துதிக்கையுடன் ஐந்து கரத்தினை கொண்டவர். துதிக்கையில் புனித நீர்க்குடம், வலது கைகளில் ஒன்றில் அங்குசமும், மற்றயதில் ஒடிந்த தந்தமும், இடது கைகளில் ஒன்றில் பாசமும், மற்ற கரத்தில் மோதகமும் வைத்திருப்பார். புனித நீர்க் குடத்திலிருக்கும் புனித நீரினைக் கொண்டு உலக வாழ்வில் உழன்று, களைத்து, சோர்வடைந்து தன்னைச் சரணடையும் மக்களின் தாகம் தீர்த்து, களைப்பைப் போக்கி, பிறவா நிலையைக் கொடுத்து தன்னடியில் சேர்த்துக் கொள்கிறார். இதற்கு அவ்வையாரின் வாழ்க்கை சிறந்த உதாரணமாகும். “என்னை அறிவித்து எனக்கு அருள் செய்து முன்னை வினையின் முதலைக் களைந்து வாக்கும் மனமும் இல்லா மனோலயம் தேக்கியே எந்தன் சிந்தை தெளிவித்து” அவ்வையார் தனது வினாயகர் அகவலில் மேற்க் கண்ட வரிகளினாலும் மற்றும் வினாயகர் அகவலில் பல இடங்களிலும் வினாயகர் தன்னை ஆட்கொண்டு தனக்கு அருள் செய்த விதத்தினை கூறியுள்ளார்.
அங்குசம் என்பது யானையை அடக்க உதவும் ஒரு கருவி ஆகும். இவர் கையில் இருக்கும் அங்குசமோ ஆசை என்ற மாய வலையில் சிக்கி அலைந்து திரியும் மனத்தினை அடக்கி ஒருநிலைப்படுத்தி பேரின்ப வீட்டினை தரவல்லது. பாசக் கயிற்றினால் மனித மனங்களில் ஆசாபாசங்களைக் கட்டிப் போடுகிறார். ஒடிந்த தந்தம் மகாபாரதம் என்ற காவியத்தை எழுத பயன்பட்டது. நமது மனங்களில் ஞானத்தை, உண்மை அறிவை எழுதுகிறார். மோதகம் அமுத கலசமாகும். இந்த மோதகத்தினால் மக்களிற்கு அமுதத்தை வழங்கி பிறப்பிறப்பு இல்லாத பேரின்ப நிலையயை அருளுகிறார்.

வினாயகர் ஓங்கார சொரூபமானவர். அவருக்கு செய்யும் வணக்கம் பிரம்மத்தையே சேருகிறது. வினாயகரை வணங்குதல் எல்லா தெய்வங்களையும் வணங்கியதற்கு ஒப்பாகும். பிடித்து வைத்தால் பிள்ளையார் என்று ஒரு வழக்கு மொழியும் கிராமப் புறங்களில் உள்ளது. அதாவது மஞ்சள் பொடி, பசும் சாணம் இதர சில பொருட்களினால் பிடித்து வைத்து பிள்ளையாரை ஆவாகணம் செய்து வழிபடலாம். மற்ற எல்லா வழிபாட்டிலும் மிக எளிமையாக வழிபடக் கூடியது வினாயகர் வழிபாடே.

வினாயகர் சதுர்த்தி:-
ஒரு சமயம் வினாயகர் கைலையில் நடனமாடிக் கொண்டிருந்தார் இவரின் நடனத்தை பார்த்து சந்திரன் ஏளனமாக சிரித்தான். இதனால் கோபம் கொண்ட வினாயகர் சந்திரனை “இன்று முதல் சந்திரன் உருவத்தை யாரும் காணமாட்டார்கள். கண்டவரும் நிந்தை செய்து ஒதுக்குவார்கள். இப்படிப்பட்ட நீசனாகட்டும்” என்று சபித்து விட்டார். இதன் காரணமாய் சந்திரன் கலையிழந்து தேய்ந்து மெலிந்தான். சந்திரன் தன் செய்கைக்கு மிகவும் வருந்தி பின்னர் வினாயகரயே சரண் அடைந்தான். தன்னை சரண் அடைந்தோரிற்கு சகல நன்மைகளையும் தரும் கருணை கடலாம் மூஷிக வாகனன் எம்பெருமான் வினாயகரும் மனமிரங்கி சுக்ல பட்ச சதுர்த்தி திதியில் சந்திரனைக் காண்போர் வீணான சங்கடங்களிற்கு ஆளாவர் என்றும். ஆனால் ஆவணி மாதம் சுக்ல பட்ச சதுர்த்தி திதியில் விரதம் அனுட்டித்து வினாயகரை வணங்குபவர்கள் சகல சாப விமோசனமும் பெற்று சீரும் சிறப்புடனும் வாழ்வர் என சந்திரனிற்கு சாப விமோசனம் அருளினார். அதனால்; தான் வளர்பிறையில் வரும் நாலாம் நாள் சந்தினை யாரும் இன்றும் பார்ப்பது கிடையாது. “நாலாம்பிறைச் சந்திரனை பார்த்தால் நாய் அலைச்சல்” என்று கிராமத்து மக்கள் இன்றும் கூறுவர். ஆவணி மாதம் சுக்ல பட்ச சதுர்த்தி திதியே வினாயகர் சதுர்த்தி நாளாகும்.
மல்லகைப் பூ அல்லது முல்லைப் பூ அல்லது செந்தாமரை மலரினால் அர்ச்சனை செய்து பசும் பால், பால்ப்பாயாசம், பானகம் நைவேத்தியம் செய்து வெற்றிலை, பழம், பாக்கு வைத்து வழிபடவேண்டும். இதனால் எடுத்த காரியங்களில் இடர் நீங்கி காரிய சித்தி உண்டாகும். சகல சௌபாக்கியங்களும் கிட்டும்.
வாக்குண்டாம் நல்ல மனமுண்டாம் மாமலராள்
நோக்குண்டாம் மேனிநுடங்காது பூக்கொண்டு
துப்பார் திருமேனி தும்பிக்கையான்
பாதம் தப்பாமல் சார்வார் தமக்கு

பாலும் தெளிதேனும் பாகும் பருப்பும் இவை
நாலும் கலந்துனக்கு நான் தருவேன் கோலம் செய்
துங்கக்கரி முகத்து தூமணியே நீ எனக்கு
சங்கத் தமிழ் மூன்றும் தா

ஐந்து கரத்தனை ஆனை முகத்தனை
இந்தின் இளம் பிறை போலும் மெயிற்றனை
நந்தி மகன்தனை ஞானக் கொழுந்தினை
புந்தியில் வைத்து அடி போற்றுகின்றேனே

வினாயகனே வௌ;வினையை வேரறுக்க வல்லான்
வினாயகனே வேற்கை தணிவிப்பான்
வினாயகனே விண்ணிற்கும் மண்ணிற்கும் நாதனுமாம்
தன்மையினால் கண்ணில் பணிமின் கனிந்து

அல்லல் போம் வல்வினை போம் அன்னை வயிற்றில் பிறந்த
தொல்லை போம் போகாத் துயரும் போம் நல்ல
குணம் அதிகமாம அருணை கோபுரத்துள் மேவும்
கணபதியைக் கை தொழுதற்க்கால்

- Partha

5/31/2011

ஸ்ரீ ராகவேந்திர சுவாமிகள்


ஸ்ரீராகவேந்திரர்
”என் உடல் அடக்கம் செய்யப்பட்ட பின்னரும் எனது சமாதி உயிர்ப்புடன் விளங்கும்; தேவையானவருக்கு, தேவையான சமயத்தில் தக்க வழி காட்டும்” என்றவர் மகான் ஸ்ரீ ராகவேந்திரர். வாழும் காலத்தில் பல்வேறு அற்புதங்கள் புரிந்த அம்மகான், இறந்த பின்னரும், ஏன் இன்றும் கூட பல அற்புதங்கள் செய்து வருகிறார்.
ஸ்ரீ ராகவேந்திர சுவாமிகள் ஜீவ சமாதி அடைந்த இடம் மாஞ்சாலி கிராமம் எனப்படும் மந்த்ராலயம். இது ஆந்திராவில், துங்கபத்திரா நதிக்கரையில் அமைந்துள்ளது. அது பூர்வ காலத்தில் பிரகலாதன் யாகம் செய்த இடம். அதனால் அந்த இடத்தையே தனது சமாதிக்குத் தேர்ந்தெடுத்தார் ஸ்ரீ ராகவேந்திரர். அப்பகுதியை ஆண்ட சுல்தான் மசூத் கானும் அதற்கு இணங்கி மாஞ்சாலியை ராகவேந்திரருக்குக் கொடுத்தார். அதையே தனது சமாதி ஆலயமாகத் தேர்ந்தெடுத்த ஸ்ரீ ராகவேந்திரர், 1671ம் ஆண்டில் ஜீவன் தன்னுடலில் இருக்கும் போதே பிருந்தாவனத்தில் அமர்ந்து ஜீவ சமாதி அடைந்தார்.
கி.பி. 1812ம் ஆண்டு. பிரிட்டிஷ் அரசு ஒரு சட்டம் இயற்றியது. அந்தச் சட்டத்தின் மூலம் கோயில் இடத்திற்கான வாரிசுகள் யாரும் இல்லை என்றால் அந்த இடத்தை அரசாங்கமே எடுத்துக் கொள்ளலாம் என்று அறிவிப்புச் செய்தது. அந்தச் சட்டத்தின் மூலம் பிருந்தாவனத்துக்கு தானமாகக் கொடுக்கப்பட்டிருந்த நிலமானியம் முடிவுக்கு வரும் நிலை ஏற்பட்டது. ஆனால் பொது மக்கள் அதற்கு எதிர்ப்புத் தெரிவித்தனர். பல ஆண்டுகளுக்கு முன்னால் அப்பகுதியை ஆண்ட சுல்தான் ஸ்ரீ ராகவேந்திரருக்கு தானமாக வழங்கிய இவ்விடத்தை அரசு கையகப்படுத்தக் கூடாது என்று அவர்கள் எதிர்த்தனர். அதனால் பிரிட்டிஷ் அரசு அப்போது பெல்லாரி மாவட்ட ஆட்சியாளராக இருந்த சர் தாமஸ் மன்றோ தலைமையில் ஒரு குழுவை நியமித்து நிலைமையைச் சரி செய்யச் சொல்லி உத்தரவிட்டது.
மன்றோ தனது குழுவினருடன் ஆலயத்துக்கு விரைந்தார். ஆலயத்தின் நுழைவாயிலில் தனது ஷூவையும், தொப்பியையும் கழற்றி விட்டு பிருந்தாவனத்தை நோக்கிச் சென்றார். ஜீவசமாதி ஆலயம் அருகே சென்ற மன்றோ யாரோ அங்கு இருப்பது போல் வணக்கம் செலுத்தினார். பின் சத்தமாக உரையாட ஆரம்பித்தார்.
அவருடன் வந்திருந்த குழுவினருக்கு ஒன்றுமே புரியவில்லை. காரணம், அங்கே மன்றோவைத் தவிர எதிரே யாருமே இல்லை. ஆனால் மன்றோவோ யாரோ எதிரில் நின்று கொண்டு பேசிக் கொண்டிருப்பது போல சரளமாக ஆங்கிலத்தில் பேசிக் கொண்டிருந்தார். ஆலயம் பற்றி, அதை தானமாக அளித்தது பற்றி, ஆங்கிலேய அரசு வெளியிட்டிருக்கும் அறிவிப்பு பற்றி எல்லாம் அவர் யாரிடமோ விரிவாக விளக்கிக் கொண்டிருந்தார்.
அவர் யாரிடம் பேசுகிறார், எதற்குப் பேசுகிறார், ஒருவேளை சித்தப்பிரமை ஏதும் ஏற்பட்டு விட்டதா என்றெல்லாம் என்ணிய குழுவினர் ஒன்றுமே புரியாமல் திகைத்துப் போய் நின்று கொண்டிருந்தனர்.

சர். தாமஸ் மன்றோ
வெகு நேரம் கழித்து தனது உரையாடலை முடித்துக் கொண்டு தங்கள் ஆங்கிலேயப் பாணியில் அந்த பிருந்தாவனத்துக்கு ஒரு சல்யூட் வைத்து விட்டு வெளியே வந்தார் மன்றோ.
அதுவரை திகைத்துப் போயிருந்த குழுவினர், அவரிடம் யாரிடம் பேசிக் கொண்டிருந்தீர்கள் எனக் காரணம் கேட்டனர்.
அதற்கு மன்றோ, ”பிருந்தாவனத்தின் அருகே காவி உடை அணிந்து ஒளி வீசும் கண்களுடன் உயரமாக ஒருவர் நின்று கொண்டிருந்தார். அவருக்கு நான் அரசு மான்யம் பற்றி சில விளக்கங்களை அளித்தேன். அவரும் என்னிடம் அது குறித்து உரையாடி மடத்தின் சொத்து பற்றிய சரியான விளக்கத்தைத் தந்து விட்டார். இந்த இடம் மடத்துக்குத்தான் சொந்தம் என்பதில் எந்த ஐயமுமில்லை” என்றார். மேலும் அந்த மனிதரது ஒளி வீசும் கண்கள் பற்றியும், அவரது கம்பீரக் குரல் பற்றியும், செழுமையான ஆங்கில உச்சரிப்புப் பற்றியும் வியந்து கூறியவர், ”ஏன், நீங்கள் அவரைக் காணவில்லையா?” என்று கேட்டார், குழுவினரைப் பார்த்து.
தங்கள் கண்களுக்கு அங்கு யாருமே தெரியவில்லை என்று கூறிய அவர்கள், மன்றோவுடன் உரையாடியது சாட்சாத் ஸ்ரீ ராகவேந்திரர்தான் என்பதை அவருக்கு உணர்த்தினர்.
கடந்த நூற்றாண்டில் காலமான மகான் தன் முன் நேரில் தோன்றி அதுவும் தன் பாஷையான ஆங்கிலத்திலேயே தன்னுடன் பேசிப் பிரச்சனையைத் தீர்த்த விதம் கண்டு பிரமித்தார் சர் தாமஸ் மன்றோ. தனக்குக் கிடைத்த பாக்கியத்தை எண்ணி மகிழ்ந்தார். அரசுக்கும், ஆளுநருக்கும், அந்த இடம் மடத்துக்குச் சட்டப்படி உரிமை உள்ள நிலம் என்று தகவல் அனுப்பியதுடன் அன்று முதல் ஸ்ரீ ராகவேந்திரரின் பக்தராகவும் ஆகிப் போனார்.
விரைவிலேயே மன்றோ தாற்காலிக ஆளுநராகப் பொறுப்பேற்கும் நிலை வர, அவர் கையெழுத்திட்ட முதல் கோப்பு, மடத்துக்கு நிலம் அளிப்பது தொடர்பானது தான். இந்தச் சம்பவங்கள் அப்போதைய சென்னை மாகாண கெஜட்டிலும் (அரசு ஆவணக் குறிப்பு) வெளியாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மன்றோவின் குறிப்பு
கடவுள் மட்டுமல்ல; அவரது வழிவந்த மகான்களும் மதம் கடந்தவர்கள் என்பது இதன் மூலம் உறுதியாகிறதல்லவா?
அதுமுதல் மந்த்ராலயம் ஆலய வளர்சிக்கு உதவியதுடன் பல இந்துத் திருத்தலங்களுக்கும் சென்று இறைவனை வணங்கி வழிபட்டார்.
ஒருமுறை மன்றோவுக்கு மிகக் கொடிய வயிற்று நோய் ஏற்பட்டது. நம்பிக்கையோடு அவர் திருப்பதிப் பெருமாளை வேண்டிக் கொண்டார். அது குணமானதும் ஒரு கிராமத்தையே கோயிலுக்கு தானமாக அளித்ததுடன், தன் பெயரில் தினந்தோறும் பொங்கல் செய்து இறைவனுக்குப் படைக்கப்பட வேண்டும் என்றும் ஆணையிட்டார். இன்றும் தினமும் திருப்பதி திருமலையில் சர்.தாமஸ் மன்றோ கட்டளை பெயரில் பொங்கல் செய்து விநியோகிக்கப்படுகிறது என்பது ஒரு அதிசயமான செய்தி இல்லையா?

குரு ராகவேந்திரர்

ரமண மகரிஷி

பால் ப்ரண்டன் சந்தித்த இன்னொரு சித்தர் விசுத்தானந்தர். அவரது சக்திகள் வித்தியாசமானவை. அவர் எந்த ஒரு பூவின் நறுமணத்தையும் தானிருந்த இடத்தில் ஏற்படுத்த முடிந்தவராக இருந்தார். ஒரு பூதக் கண்ணாடியின் மூலம் ஒரு கைக்குட்டையில் சூரிய ஒளியைக் குவித்து மற்றவர்கள் நினைத்த எந்த நறுமணத்தையும் ஏற்படுத்திக் காட்டினார். பால் ப்ரண்டன் திபெத்தில் மட்டுமே மலரக் கூடிய ஒரு மலரை எண்ண, அவர் அந்த மலரின் நறுமணத்தையும் வரவழைத்துக் காட்டி பால் ப்ரண்டனை ஆச்சரியப்படுத்தினார்.

வேறெதாவது சக்திகள் அவரிடம் உள்ளதா என்று பால் ப்ரண்டன் கேட்க விசுத்தானந்தர் ஒரு சிட்டுக் குருவியை அவர் முன்னாலேயே கழுத்தை நெரித்துக் கொன்றுறது இறந்து விட்டது என்பதை பால் ப்ரண்டனை உறுதிபடுத்திக் கொள்ளச் சொன்னார். பின் தன் கையிலிருந்த பூதக் கண்ணாடி மூலம் சூரிய ஒளிக்கதிர்களை ஒன்றாகக் குவித்து இறந்த சிட்டுக் குருவியின் ஒரு கண்ணில் குவித்து மறுபடியும் உயிர்ப்பித்துக் காட்டினார். சிட்டுக் குருவி மறுபடி உயிர்பெற்று அசைந்து நடந்து சிறிது தூரம் பறந்து சென்றதைக் கண்ணால் பார்த்த பால் ப்ரண்டன் பிரமித்துப் போனார். அந்த உயிர் பெற்ற பறவை அரை மணி நேரம் வாழ்ந்து பின் இறந்து போனது.

மரணத்தையும் வெல்ல முடிந்த சக்தி படைத்த விசுத்தானந்தர் பால் ப்ரண்டன் இந்தியா வந்த காரணத்தை அறிந்து சொன்னார். "தேடல் ஆத்மார்த்தமாக இருந்தால், தேடுபவர் தயார் நிலையில் இருந்தால் குரு கண்டிப்பாக தென்படுவார். பெரும்பாலான நேரங்களில் தேடுபவர் குருவிற்காகத் தயாராக இருப்பதில்லை, எனவே தான் காண்பதில்லை..."

அதே செய்தியைத் தான் பால் ப்ரண்டன் சந்தித்த காஞ்சி மகா பெரியவர் சந்திரசேகரேந்திர சரஸ்வதி அவர்களும் சொன்னார். பால் ப்ரண்டனைப் பல இடங்களில் தொடர்ந்த ஒரு மனிதர் "நீங்கள் தேடும் யோகியை நான் காட்டுகிறேன். அவரை எனக்குத் தெரியும்" என்று அடிக்கடி சொல்லி வந்தார். ஆனால் அவர் வார்த்தையில் பால் ப்ரண்டனுக்கு நம்பிக்கை வரவில்லை. ஆனால் அந்த மனிதர் தொடர்வதை நிறுத்தவில்லை. கடைசியில் பால் ப்ரண்டன் அவர் சொன்ன நபரையும் சந்திப்பதில் தனக்கு நஷ்டமேதும் இல்லை என்று நினைத்து "நீங்கள் சொல்லும் யோகி எங்கிருக்கிறார்?" என்று கேட்க அவர் திருவண்ணாமலையில் இருக்கும் ரமண மகரிஷியைப் பற்றி சொன்னார்.

பால் ப்ரண்டன் ரமண மகரிஷியை சந்திக்கச் சென்றார்.

ரமணாசிரமத்தின் ஒரு சிறிய ஹாலில் ரமண மகரிஷி அமர்ந்திருக்க அவர் முன் சிலர் அமைதியாக அமர்ந்திருந்தனர். ரமண மகரிஷி பால் ப்ரண்டனைப் பார்த்தார். மிகச் சாதாரணமான தோற்றம் கொண்ட ரமண மகரிஷியின் பார்வை சாதாரணமானதாக இருக்கவில்லை. அவர் பார்வை காந்தத் தன்மை கொண்டதாக இருந்தது. பால் ப்ரண்டன் தன் பார்வையை மகரிஷியிடமிருந்து விலக்க முடியாதவராக இருந்தார். திடீரென்று தன் பார்வை பால் ப்ரண்டனிடமிருந்து விலக்கிக் கொண்டு வெற்றிடத்தைப் பார்க்க ஆரம்பித்தார்.

ஆரம்பத்தில் பால் ப்ரண்டன் தான் புறக்கணிக்கப் பட்டது போல் உணர்ந்தார். அங்கு அமர்ந்திருந்த மற்றவர்களுடன் தானும் உட்கார்ந்து கொண்டார். சிறிது நேரத்தில் ஒருவித அசாதாரண சக்தியலை அவரை ஆட்கொண்டது. தன்னை மகரிஷி புறக்கணித்ததாக எண்ணிய எண்ணம் மெள்ள விலகியது. ரமண மகரிஷி எங்கோ பார்த்துக் கொண்டிருந்தாலும் அவருடைய ஞான சக்தி அந்த இடமெல்லாம் வியாபித்திருந்ததாக பால் ப்ரண்டன். அவர் மனதில் ரமண மகரிஷியிடம் கேட்க எண்ணியிருந்த கேள்விகள் கூட அவர் மனதில் இருந்து தானாக உதிர்ந்தன. வார்த்தைகளால் வர்ணிக்க முடியாத பேரமைதியை பால் ப்ரண்டன் அந்த இடத்தில் உணர்ந்தார். கேள்விகள் இல்லாத பதில் தேவைப்படாத எதனாலும் பாதிக்கப்படாத ஒரு ஆனந்த நிலையை பால் ப்ரண்டன் அனுபவித்தார்.

மற்றவர்கள் காட்டிய அபார சக்திகள் எல்லாம் இந்த அமைதியின் முன் ஒரு பொருட்டாகவே பால் ப்ரண்டனுக்குத் தோன்றவில்லை. தான் தேடி வந்த யோகியை அந்தக் கணமே பால் ப்ரண்டன் அடையாளம் கண்டார். அவருடைய தேடல் முடிவுக்கு வந்ததாக அவர் உணர்ந்தார். அங்கேயே சில காலம் தங்க பால் ப்ரண்டன் தீர்மானித்தார்.

முதல் முதலில் ரமண மகரிஷியிடம் பேச வாய்ப்பு கிடைத்த போது பால் ப்ரண்டன் சொன்னார். "ஸ்வாமி, நான் மேலை நாட்டுத் தத்துவங்கள் நிறையப் படித்தவன். அவற்றில் உள்ள கருத்துக்களை ஆழமாகத் தனிமையில் சிந்தித்தவன். மேலை நாடுகளின் நகர சொகுசான வாழ்க்கையின் பிடியில் அகப்பட்டு ஆன்மீகத் தேடல்களை மறந்ததும் உண்டு. ஒரு கட்டத்தில் அந்தத் தத்துவங்களில் பல கேள்விகளுக்குப் பதில் இல்லை என்று உணர்ந்து கீழை நாடுகளின் பக்கம் என் கவனம் திரும்பியது.''

மகரிஷி புரிகிறது என்பது போல் தலையசைத்தார்.

பால் ப்ரண்டன் தயக்கமில்லாமல் தனக்கு மனதில் பட்டதை அப்படியே சொன்னார். "இங்கும் பல தத்துவங்கள், பல சித்தாந்தங்கள், பல வாதங்கள் எல்லாம் ஏராளமாக இருக்கிறது. இதையெல்லாம் கேட்டும் படித்தும் நான் சலித்து விட்டேன். நான் மதவாதி அல்ல. மதங்கள் என்ன சொல்கின்றன என்பதை அறிவதும் என் நோக்கமல்ல. நம் கண்ணிற்குத் தெரிகிற இந்த மனித வாழ்க்கைக்கு அப்பாலும் ஏதாவது இருக்கிறதா? இருந்தால் நான் அதை அடைவது எப்படி?"

அருகிலிருந்த சிலர் பால் ப்ரண்டனுடைய வெளிப்படையான கேள்வியைக் கேட்டு திகைத்தனர். மகரிஷி அவரையே பார்த்தாரே ஒழிய பதிலேதும் சொல்லவில்லை. பால் ப்ரண்டன் தொடர்ந்து தன் கருத்தைச் சொன்னார். "அறிவுக்குப் பெயர் போன எங்கள் விஞ்ஞானிகள் கூட இந்த விஷயத்தைப் பொறுத்தவரை அறிந்தது குறைவு என்று கைவிரித்து விட்டார்கள். உங்கள் புண்ணிய தேசத்தில் இதற்கான பதிலை நான் தேடி வந்திருக்கிறேன். தயவு செய்து சொல்லுங்கள் மெய்ஞானம் பெற நீங்கள் எனக்கு உதவ முடியுமா? இல்லை நான் தேடி வந்ததே வெறும் கானல் நீரா? இதை நான் தெரிந்து கொள்ள விரும்புகிறேன்"

சிறிது நேரம் அமைதியாக இருந்து விட்டு மகரிஷி கேட்டார். "நீங்கள் நிறைய முறை 'நான்' என்று சொல்லி விட்டீர்கள். எனக்குச் சொல்லுங்கள் "யார் அந்த நான்?"

பால் ப்ரண்டனுக்கு முதலில் விளங்கவில்லை. இதென்ன கேள்வி என்று நினைத்தவர் தன்னைக் கையால் சுட்டிக் காட்டி தன் பெயரைச் சொல்லி இது தான் நான் என்று சொன்னார்.

"இது உங்கள் உடல். மீண்டும் கேட்கிறேன். 'யார் அந்த நான்?"

பால் ப்ரண்டனுக்குப் பதில் சொல்லத் தெரியவில்லை.

மகரிஷி சொன்னார். "அந்த நானை அறியுங்கள். உங்கள் எல்லாக் கேள்விகளுக்கும் உடனடியாக விடை கிடைக்கும்"

"அதை எப்படி அறிவது"

"உங்களுடைய உண்மைத் தன்மையை ஆழமாக சிந்திப்பதாலும் இடைவிடாத தியானத்தாலும் அறியலாம்"

"நான் நிறையவே தியானம் செய்திருக்கிறேன். ஆனால் எந்த முன்னேற்றமும் எனக்குத் தெரியவில்லை"

"ஆன்மீக மார்க்கத்தில் முன்னேற்றம் என்பதை எளிதாகக் கண்டு பிடிக்க முடியாது"

"இதில் ஒரு குரு தேவையா?"

"இந்த தேடலுக்குத் தேவையானவற்றை குரு தரலாம். ஆனால் இதை அவரவரே தனிப்பட்ட அனுபவத்தால் தான் உணர முடியும்"

"இதற்கு எவ்வளவு காலம் தேவைப்படும்?"

"இது தனி மனிதர்களின் பக்குவத்தைப் பொறுத்தது. தீப்பிடிக்க வெடிமருந்துக்கு நொடி நேரம் போதும். ஆனால் நிலக்கரிக்குத் தீப்பிடிக்க அதிக நேரம் தேவைப்படுகிறது"

பால் ப்ரண்டன் பல கேள்விகளுக்குப் பின் உலகத்தின் தற்போதைய மோசமான நிலையைப் பற்றிச் சொல்லி உலகின் எதிர்காலத்தைப் பற்றிக் கேட்டார்.

"உலகத்தைப் படைத்தவனுக்கு அதை எப்படி பாதுகாப்பதென்று தெரியும். அந்தப் பாரம் அவனைச் சேர்ந்தது. உங்களுடையதல்ல"

ஆனால் தனி மனிதனுக்கு இருக்கும் பொறுப்புகளைப் பற்றி பால் ப்ரண்டன் சொல்ல மகரிஷி சொன்னார். "நீங்கள் எப்படியோ அப்படியே உலகமும். உங்களை முழுமையாக அறியாமல் உலகத்தை அறிய முற்படுவது பயனற்றது....."

அங்கு தங்கிய காலத்தில் மகரிஷியிடமிருந்து பால் ப்ரண்டன் எத்தனையோ கற்றுக் கொண்டார். மகரிஷி தியானத்தில் மூழ்கி இருக்கும் போது அவர் முகத்தில் தவழும் பேரமைதியைக் காணும் போதெல்லாம் 'எந்தத் துக்கமும் இந்தத் துறவியைத் தீண்டமுடியாது" என்ற உண்மை அவருள் வலுப்படும்.

ஒரு முறை பால் ப்ரண்டன் ரமண மகரிஷியிடம் பேசும் போது சொன்னார். "குருவே இந்த ஆன்மீகப் பாதை மிகவும் கடினமானது. சில நேரங்களில் என்னுடைய பலவீனங்களை நான் நன்றாக உணர்கிறேன்..."

"அப்படி பலவீனமானவன் என்று நினைப்பதே பல சமயங்களில் நமது குறைபாடு"

"ஒருவேளை அது உண்மையாக இருந்தால்....?."

"அது உண்மையல்ல" மிகவும் உறுதியுடன் வந்தது மகரிஷியின் பதில். "மனிதன் இயற்கையிலேயே பலம் வாயந்தவன். தெய்வீகத் தன்மை கொண்டவன். தீமையும் பலவீனமும் அவன் எண்ணங்களால் ஏற்படுகின்றனவே ஒழிய உண்மையான இயல்பால் அல்ல"

இதை அவர் உண்மையாகவே நம்பினார் என்பதற்கு ஆதாரம் அவர் வாழ்வில் நடந்த ஒரு நிகழ்ச்சி. அவரைப் போன்ற ஒரு சித்தர் செல்வத்தை நிறைய குவித்து வைத்திருக்கலாம் என்று நம்பிய ஒரு கொள்ளைக் கூட்டம் ஒரு இரவு அவர் ஆசிரமத்திற்குள் நுழைந்து தேட எந்த செல்வமும் அங்கு இல்லை என்றறிந்தவுடன் ஏற்பட்ட கோபத்தில் ரமணரையும் மற்ற ஆசிரமவாசிகளையும் அடித்து உதைத்திருக்கிறார்கள். ரமண மகரிஷி அவர்கள் செல்லும் போது வந்ததற்கு உணவாவது உண்டு விட்டுச் செல்லுமாறு அவர்களை வேண்டியிருக்கிறார். ஒரு உண்மையான யோகிக்குத் தான் இது இயலும் என்பதில் சந்தேகமென்ன?

ரமணாஸ்ரமத்தில் இருக்கும் போது பால் ப்ரண்டனுக்கு யோகி ராமையா என்னும் ஆந்திர சித்தரின் அறிமுகம் கிடைத்தது. வருடத்தில் ஒரு முறை வந்து சுமார் ஒரு மாதம் அங்கு இருந்து விட்டுப் போவார் அந்த சித்தர். ஒரு முறை பால் ப்ரண்டன் இருந்த அறையில் ஒரு கொடிய விஷமுள்ள நாகம் வந்து விட பலரும் ஓடி வந்து அதைக் கொல்ல கம்புகளை எடுக்க யோகி ராமையா அங்கு வந்து அவர்களைத் தடுத்து தன் இரு கைகளாலும் அந்த நாகத்தை எடுத்து அதை அன்புடன் பார்க்க, தன் விஷ நாக்குகளை வெளியே நீட்டினாலும் அவரை தீண்டாமல் அந்த நாகம் சீற்றம் தணிந்து அவருக்கு தலை வணங்கியது. ராமையா அதை கீழே விட யாரையும் உபத்திரவிக்காமல் அந்த நாகம் அமைதியாக அங்கிருந்து சென்று விட்டது. ஆச்சரியத்துடன் "உங்களுக்குப் பயமாக இருக்கவில்லையா?" என்று பால் ப்ரண்டன் கேட்டதற்கு ராமையா சொன்னாராம். "நான் மனதில் வெறுப்பு சிறிதும் இன்றி முழு அன்புடன் அதை அணுகியிருக்கும் போது பயப்பட என்ன இருக்கிறது?". மனித எண்ணங்களை உணரும் சக்தி விலங்குகளுக்கும் உண்டு என்பதையும் அவை அதன்படியே நடந்து கொள்கின்றன என்பதையும் அந்த நிகழ்ச்சி தெரிவிக்கிறதல்லவா?

ரமண மகரிஷி பெரும்பாலும் மௌன நிலையிலேயே இருப்பார். அவர் முன் வந்தமர்ந்து செல்லும் பல மனிதர்களுக்கு அந்த வார்த்தைகளற்ற சூழ்நிலையிலும் தேடி வந்ததற்கு ஒரு பதில் அல்லது கிடைத்தது. சில சமயங்களில் மட்டுமே அவர் பேச இசைந்தார். பால் ப்ரண்டன் ரமண மகரிஷியைப் பற்றி இவ்வாறு குறிப்பிட்டார். "ரமண மகரிஷியுடன் பேசுவது அவ்வளவு சுலபமாக இருக்கவில்லை. காரணம் ரமண மகரிஷி யாரையும் தன் பக்தர்களாகவோ, தன்னைப் பின்பற்றுபவர்களாகவோ மாற்ற எண்ணியதில்லை. மற்றவர்களுடைய நம்பிக்கைகளைப் பற்றியோ, கருத்துகளைப் பற்றியோ அவர் பொருட்படுத்தவில்லை. உண்மை தனி மனித அபிப்பிராயங்களுக்கு அப்பாற்பட்டது என்பது அவர் ஞானமாக இருந்தது... அதனாலேயே அவர் மற்றவர்களுடன் விவாதங்களில் ஈடுபட்டதில்லை. மற்றவர்களைக் கவர முனைந்ததில்லை. தன்னை விளம்பரப் படுத்திக் கொள்ள முயன்றதில்லை...."


ரமண மகரிஷியைக் கண்டு அவர் காலடியில் சில காலம் தங்கி ஆன்மீக அனுபவத்தை ஆழமாக உணர்ந்த பால் ப்ரண்டன் இந்த தேசத்தில் வந்து தேடியதைக் கண்ட திருப்தியில் தன் நாடு திரும்பினார்.
Thanks:- என்.கணேசன்
Partha Blog